தமிழ்நாடு (Tamil Nadu)

இன்று விநாயகர் சதுர்த்தி விழா: விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2024-09-07 05:25 GMT   |   Update On 2024-09-07 05:25 GMT
  • விநாயகர் முன்பு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களும் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
  • கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலிலும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கோவை:

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது.

அதிகாலையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

கோவை புலியகுளத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் நடை வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே திறக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து விநாயகருக்கு பால், தயிர், இளநீர் உள்பட 16 வகை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டும், 40 கிலோ சந்தனத்தில் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

விநாயகர் முன்பு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களும் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை முதலே புலியகுளம் விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். கோவை மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்தனர்.

அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரித்து சென்றனர். பக்தர்களுக்கு பிரசாதாமாக சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டன.

கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலிலும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் வந்து விநாயகரை வழிபட்டு சென்றனர்.

இதேபோல் கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவில், ரேஸ்கோர்சில் உள்ள 108 விநாயகர் கோவில், உப்பிலிபாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் உள்பட அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதுதவிர கோவை மாநகரில் உள்ள கோனியம்மன், தண்டுமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

புறநகர் பகுதியான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, காரமடை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பேரூர், அன்னூர் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்கள், நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விசுவ இந்து பரிஷத், சிவசேனா, அனுமன் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் முக்கிய இடங்களில் பல அடி உயர விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் 2,236 சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் 2,900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் இருசக்கர ரோந்து வாகனங்கள், நான்கு சக்கர ரோந்து வாகனங்களில் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Tags:    

Similar News