search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் தனுஷ் மீது புகார்- நடிகர் சங்கத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்
    X

    நடிகர் தனுஷ் மீது புகார்- நடிகர் சங்கத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்

    • நடிகர் தனுஷ் மீது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த வித புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
    • தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த பிரச்சினை சம்பந்தமாக தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான தீர்வும் ஏற்படுத்தி தரவில்லை.

    நடிகர் தனுஷ் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எந்தவித புகாரும் அளிக்கவில்லை என்று கூறியது உண்மைக்கு புறம்பானது என்று நடிகர் சங்கத்தின் குற்றச்சாட்டுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

    தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 29.7.2024 அன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் தனுஷ் மீது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த வித புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

    கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினை மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுத்தும் முக்கிய 5 நடிகர்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தகவல் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் தெரியப்படுத்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

    மேலும், கடந்த ஓராண்டு காலமாக தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது அவர்களுக்கு மேற்படி விஷயம் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த பிரச்சினை சம்பந்தமாக தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான தீர்வும் ஏற்படுத்தி தரவில்லை.

    தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் நலனை காக்கவே இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    அதேபோல கடந்த 1.11.2024 முதல் படப்பிடிப்புகள் முழுமையாக நிறுத்தி திருத்தி அமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் தொடர தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அடங்கிய கூட்டமைப்பு சேர்ந்து எடுத்த தீர்மானத்திற்கு தாங்கள் கண்டனம் தெரிவித்துள்ளீர்கள்.

    இன்றைய சூழ்நிலையில் முதல் போடும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரை பெரும் பொருளாதார இழப்பில் இருந்து பாதுகாத்து திரைத் துறையையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு உள்ளது. ஆகையால்தான் கூட்டமைப்பு கூட்டத்தினை கூட்டி இந்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு, அந்த வரிசைப்படித்தான் நடித்துக் கொடுத்து வருவது காலம் காலமாக இருந்து வருவதும் மரபு.

    அவ்வாறு இல்லாமல் புதிதாக திரைப்படம் எடுக்க வருபவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏற்கனவே பணம் கொடுத்தவர்களுக்கு நடித்து கொடுக்காமல் மற்றவர்களுக்கு நடித்துக் கொடுப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?

    இப்படி இக்கட்டான சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் கூட்டமைப்பின் மூலம் அறிவிக்கப்பட்ட அறிக்கையை தவறானது கண்டனத்துக் குரியது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கூறி இருப்பது வாபஸ் பெற வேண்டும்.

    எப்படி தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களை பாதுகாக்கிறார்களோ, அதே போல் எங்களது சங்க உறுப்பினர்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கும் உள்ளது.

    நடிகர்களின் சம்பளம் மற்றும் படப்பிடிப்பு செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்ற காரணத்தினால் மேலும் மேலும் நஷ்டத்தை எதிர்கொள்ள தயாரிப்பாளர்களால் இயலவில்லை.

    கடந்த ஆறு மாத காலத்தில் தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களை வியாபாரம் செய்ய ஒ.டி.டி. தளம் மற்றும் சாட்டிலைட் என அனைத்து வியாபார தளங்களிலும் பொருளாதார ரீதியாக மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவதை கருத்தில் கொண்டு அவர் களை காப்பாற்றிடவும் எதிர்கால தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்றும் என்பதற்காகவும் மேற்கண்ட தீர்மானங்கள் கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஏற்கனவே கூட்டமைப்பின் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மூன்று சங்கங்களும் உறுதியாக உள்ளது. இதனை புரிந்து கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கமும் தகுந்த ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×