search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பிளேஆப் சுற்றில் நுழைய 3 இடத்துக்கு 6 அணிகள் போட்டி: குஜராத் 3-வது அணியாக வெளியேற்றம்
    X

    பிளேஆப் சுற்றில் நுழைய 3 இடத்துக்கு 6 அணிகள் போட்டி: குஜராத் 3-வது அணியாக வெளியேற்றம்

    • 11 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வருகிற 16-ந் தேதி எதிர் கொள்கிறது.
    • 14 புள்ளிகளுடன் இருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு இன்னும் 2 ஆட்டம் உள்ளது.

    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத வேண்டிய 63-வது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதனால் குஜராத் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேற்றப்பட்டது.

    ஏற்கனவே 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வாய்ப்பை இழந்து இருந்தன. 11 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வருகிற 16-ந் தேதி எதிர் கொள்கிறது.

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 19 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி 'டாப்2' இடத்தை பிடிப்பது உறுதியாகிவிட்டது. கொல்கத்தா நைட்ரைடர்சுக்கு இன்னும் ஒரு ஆட்டம் உள்ளது.

    ஐ.பி.எல். போட்டியில் இதுவரை 63 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் 7 லீக் போட்டிகள் எஞ்சி உள்ளன.

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது. 3 அணிகள் வெளியேற்றப்பட்டன. பிளேஆப் சுற்றில் நுழைய 3 இடத்துக்கு 6 அணிகள் போட்டியில் உள்ளன.

    டெல்லி-லக்னோ இடையே இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி அணி தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். பிளேப் ஆப் சுற்றுக்கான போட்டியில் உள்ள அணிகள் பற்றிய விவரம்:-

    சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயலர்ஸ் 16 புள்ளிகளுடன் இருக்கிறது. பஞ்சாப், கொல்கத்தா அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. இந்த இரண்டிலும் தோற்றாலும் அந்த அணியின் பிளேஆப் சுற்று வாய்ப்பு பாதிக்காது. ஏனென்றால் அந்த அணியின் ரன்ரேட் அபாரமாக உள்ளது. முதல் 2 இடங்களை பிடிக்க அந்த அணி ஏதாவது ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற முயற்சிக்கும்.

    14 புள்ளிகளுடன் இருக்கும் ருதுராஜ் கொய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 18-ந்தேதி சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றால் பிளேப் ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். ஏனென்றால் ரன்ரேட் நன்றாக இருக்கிறது.


    தோற்றால் மற்ற அணிகள் முடிவை பொறுத்து தலைவிதி இருக்கும். பெங்களுரிடம் தோற்றாலும் அந்த அணியை விட ரன்ரேட்டில் குறைந்து விடாமல் பார்க்க வேண்டும். சி.எஸ்.கே. விளையாடிய பிறகு தான் ஐதராபாத் அணி கடைசி லீக்கில் விளையாடுகிறது. இதனால் பிளேஆப் சுற்றில் நுழைய பெங்களூர் அணியை வீழ்த்துவது கட்டாயமாகும்.

    14 புள்ளிகளுடன் இருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு இன்னும் 2 ஆட்டம் உள்ளது. குஜராத்துடனும், பஞ்சாப்புடனும் (19-ந்தேதி) மோத இருக்கிறது. இதில் ஒரு வெற்றியை பெற்றாலேயே கம்மின்ஸ் தலைமையிலான அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அந்த அணியின் ரன்ரேட் லக்னோவை விட சிறப்பாக இருக்கிறது. 2 போட்டியிலும் வெற்றி பெற்றால் டாப்-2 இடத்துக்கான போட்டிக்கு வரும். 2 போட்டியிலும் தோற்றால் பாதிப்பு ஏற்படலாம்.

    அதே நேரத்தில் கடைசி லீக்கில் ஆடுவதால் அதற்கு ஏற்றவாறு விளையாடும். இதனால் அந்த அணி தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

    டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களுரு அணி தொடர்ச்சியாக 5 ஆட்டத்தில் வென்று முத்திரை பதித்தது. கடைசி லீக்கில் சென்னையை வீழ்த்தினால் 14 புள்ளிகளை பெறும். அதே நேரத்தில் ஐதராபாத்தும், லக்னோவும் 16 புள்ளிகளை எடுத்தால் வாய்ப்பை இழந்துவிடும்.


    சென்னையுடன் மோதும் போட்டி நாக்அவுட் ஆகும் வகையில் மற்ற முடிவுகள் இருந்தால் பெங்களூர் அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற (200 ரன் எடுத்தல்) வேண்டும். அப்படி நடந்தால் சென்னையை விட ரன்ரேட்டில் முன்னிலை பெறும்.

    12 புள்ளியுடன் இருக்கும் லக்னோ எஞ்சிய ஆட்டங்களில் டெல்லி, மும்பையுடன் மோத வேண்டும். ரன் ரேட் மோசமாக இருப்பதால் 16 புள்ளிகள் பெற இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் சென்னை, ஐதராபாத் அணிகளும் 16 புள்ளியை எடுக்கும் போது ரன் ரேட் முக்கிய பங்கு வகிக்கும். லக்னோவின் ரன் ரேட்-0.769 ஆகும்.

    12 புள்ளிகளுடன் இருக்கும் ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி இன்றைய ஆட்டத்தில் லக்னோவிடம் தோற்றால் வெளியேறிவிடும்.

    மேலும் வெற்றி பெற்றாலும் பிளேஆப் வாய்ப்பை பெறுவது மிகவும் கடினம். ஏனென்றால் ஐதராபாத், சென்னை அணிகளுடன் ஒப்பிடுகையில் ரன்ரேட் குறைவாக இருக்கிறது. லக்னோவுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் அது சாத்தியமற்றது.

    Next Story
    ×