search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவில் - திருச்சி
    X

    அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவில் - திருச்சி

    • இந்த மலையானது சுமார் 3400 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.
    • தமிழ்நாட்டின் தென் கைலாயம் என்ற பெயரும் இதற்கு உண்டு.

    உச்சிப்பிள்ளையார் கோவில் மலையானது மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு, மலையின் கீழ்ப்பகுதியில் மாணிக்க விநாயகர் தரிசனம் தருகின்றார். மலையின் நடுபகுதியில் தாயுமானவர் சுவாமிகள் தரிசனம் தருகின்றார். மலையின் உச்சியில் இருக்கும் பிள்ளையார் உச்சிப்பிள்ளையாராக காட்சியளிக்கின்றார். இதைத்தவிர பல்லவர் காலத்து குடைவரை கோயில்கள் பல ஆயிரம் நூற்றாண்டுகள் கழித்தும் இன்றும் அழியாமல் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மலையானது சுமார் 3400 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் தென் கைலாயம் என்ற பெயரும் இதற்கு உண்டு.

    மூன்று தலைகளை கொண்ட திரிசிரன் என்ற அசுர அரசன் இந்தப் பகுதியை ஆண்ட போது திரிசிரபுரம் என்று அழைக்கப்பட்டு பின்பு சிராப்பள்ளி என்று மாறி தற்சமயம் திருச்சிராப்பள்ளி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    சுவாமி : உச்சி பிள்ளையார், தாயுமானசுவாமி, மாணிக்க விநாயகர்.

    அம்பாள் : மட்டுவார்குழலி.

    தீர்த்தம் : காவிரி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்.

    தலவிருட்சம் : வில்வம்

    தலச்சிறப்பு : இக்கோவிலில் பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 69 வது தேவாரத்தலம் ஆகும். மலைக்கோட்டை உச்சியில் உச்சி விநாயகரும், மலையின் நடு பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளியிருப்பது மிக சிறப்பு. பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.

    தல வரலாறு : அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப் பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான். எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான். அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டு சென்றான்.

    விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார். திரும்பி வந்த விபீஷணன் சிறுவனைக் காணாமல் மலைத்து போனான். செய்வதறியாது பூமியில் இருந்த சிலையை எடுக்கப்பார்த்தும் அவனால் சிலையை நகர்த்த முடியவில்லை. இதனால் இலங்கைக்கு செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார். சிலையை கொடுத்த அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதை பார்த்த விபீஷணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தான் என்பது வரலாறு.

    தாயுமானசுவாமி உருவான கதை : இப்பகுதியில் வாழ்ந்த இரத்தினாவதி என்ற பெண்மணி தாயாகும் பேறு பெற்றாள். காவேரி ஆற்றின் மறு கரையில் இருக்கும் தன் தாய்க்கு செய்தி சொல்லி விட்டு காத்திருக்கிறாள். ஆற்றில் வெள்ள பெருக்கு இருந்ததால் தாயால் வர முடியவில்லை. பிரசவ வேதனை அதிகமாக இம்மலையில் இருக்கும் ஈசனை வேண்டினாள்.ஈசனே தாய் வேடத்தில் அங்கு வந்து அவளுக்கு சுகப்பிரசவம் அடைய உதவினார்.நிஜ தாய் வந்த பின்பு தான்,இறைவனே வந்து பிரசவத்திற்கு உதவியது புரிந்தது.மட்டுவார் குழலம்மையுடன் இறைவன் அனைவருக்கும் காட்சி தந்தார். எனவே இறைவன் தாயுமானசுவாமி என அழைக்கப்படுகிறார்.

    திருச்சி பெயர்க்காரணம் : திரிசிரன் என்ற மூன்று தலையுடைய அசுர மன்னன் இப்பகுதியை ஆண்டதாக சொல்லப்படுகிறது.அதனால் இப்பகுதியை திரிசிரபுரம் என்று வழங்கப்பட்டு அதுவே மருவி சிராப்பள்ளி என்றும் திருச்சிராப்பள்ளி என்றும் வழங்கி வருகிறது என்று வரலாறு கூறுகிறது.

    தரிசன நேரம்: காலை 6.30AM 8PM திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் இந்தக் கோவில் திறந்திருக்கும்.

    முகவரி:

    அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவில்,

    திருச்சிராப்பள்ளி 620 002.

    தொலைபேசி எண் +91-431- 270 4621.

    Next Story
    ×