search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் திருக்கோவில்
    X

    திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் திருக்கோவில்

    • வெள்ளிக்கிழமை தோறும் கண்ணபுரத்தாயார் புறப்பாடும் நடக்கும்.
    • புரட்டாசி மாத சனிக்கிழமையன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருக்கண்ணபுரம் பகுதியில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து நாகூரை அடைந்து நாகூரில் இருந்து திட்டச்சேரி, திருமருகல் வழியாக 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள திருக்கண்ணபுரம் செல்லலாம்.

    தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் ரெயிலில் ஏறி நாகப்பட்டினத்துக்கு சென்று அங்கிருந்து மேற்கூறிய வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் பிரசித்தி பெற்ற சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்யதேசங்களில், 17-வது திவ்ய தேசமாக திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள சவுரிராஜ பெருமாளை நம்மாழ்வார் 11 பாசுரங்களாலும், திருமங்கை ஆழ்வார் 100 பாசுரங்களாலும், குலசேகர ஆழ்வார் 10 பாசுரங்களாலும், ஆண்டாள் 1 பாசுரத்தாலும், பெரியாழ்வார் 1 பாசுரத்தாலும் பாடி உள்ளனர்.

    கடுமையான பஞ்சம்

    முனையதரையர் என்பவர் சோழ மன்னனின் அபிமானம் பெற்று மன்னனுக்கு கப்பம் வாங்கி கொடுக்கும் பணியில் இருந்தார். அவர் சவுரிராஜ பெருமாளிடம் ஆழ்ந்த பக்தி உடையவர். திருக்கண்ணபுரத்தில் வாழ்ந்து பெருமாளுக்கு சேவைகள் செய்து வந்தார். அவர் மீது ஒரு பெண், பேரன்பு கொண்டு வாழ்ந்து வந்தாள்.

    ஒரு வருடம் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. இதனால் முனையதரையர், தாம் சேகரித்த கப்பம் முழுவதையும் கோவிலில் திருவாராதனத்துக்கும், அடியாருக்கு அன்னம் வழங்குவதிலும் செலவிட்டார்.

    பெண்ணை காப்பாற்றினாா்

    இதனால் சினம் கொண்ட சோழ மன்னன், முனையதரையரை சிறையில் அடைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முனையதரையர் மீது பேரன்பு கொண்ட பெண், சவுரிராஜபெருமாளை மனமுருகி வேண்டினாள். அப்போது அவள், 5 நாட்களுக்குள் சிறையில் இருந்து முனையதரையர் விடுவிக்கப்படாவிட்டால் நெருப்பில் பாய்ந்து உயிர் துறப்பதாக சபதம் செய்தாள்.

    இதனால் மன்னர் கனவில் தோன்றிய சவுரிராஜபெருமாள், முனையதரையரை சிறையில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட முனையதரையர், திருக்கண்ணபுரத்துக்கு சென்று தீயில் பாய்ந்து உயிர்விட தயாராக இருந்த பெண்ணை காப்பாற்றினார்.

    கருமையான முடி

    சவுரிராஜன் தலையில் சவுரி அணிந்திருப்பார். ஒருநாள் பெருமாளை தரிசனம் செய்ய வந்த சோழ மன்னனுக்கு பிரசாதமாக கொடுக்க பூமாலை இல்லாமல் தவித்த அர்ச்சகர், தான் சற்று முன்பு தேவதாசிக்கு அனுப்பியிருந்த புஷ்பத்தை கொண்டு வரச்செய்து அதை மன்னனுக்கு அளித்தார். அந்த புஷ்பத்தில் கருப்பான முடி இருந்ததை கண்ட மன்னன், அர்ச்சகரை கடிந்தான்.

    அப்போது அர்ச்சகர், பெருமாளுக்கு எப்போதும் தலையில் கருமையான முடி இருக்கும் என கூறினாா். இதனால் கோபம் கொண்ட மன்னன், மறுநாள் காலை வரும்போது பெருமாளுக்கு முடி இருப்பதை காட்ட வேண்டும் என கூறி சென்றார். இதனால் அர்ச்சகரை சோழ மன்னனின் தண்டனையில் இருந்து விடுவிக்க பெருமாள், கருமையான முடியுடன் காட்சியளித்தார்.

    ஆஞ்சநேயர் சன்னதி

    திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலுக்கு எதிரில் உள்ள நித்யபுஷ்கரணியின் பிரதான படிக்கட்டின் மேல்புறம் தீர்த்தக்கரையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. ஆஞ்சநேயருக்கு தனிக்கோவில் அமைந்திருப்பதால் இவரின் சக்தி அளவிட முடியாது.

    தெற்கு நோக்கி அஞ்சலி ஹஸ்தராக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் இவரை வரப்பிரசாதி என்று பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.

    பிரம்மோற்சவ விழா

    திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும். மகோற்சவ விழா மாசி மாதம் பவுர்ணமி திதி 9-ம் நாள் சமுத்திரத்தில் தீர்த்த வாரியுடன் நடைபெறுகிறது. தமிழ் மாதப்பிறப்பு, ஏகாதசி, அமாவாசை வழிபாடும் சிறப்பாக நடக்கும். வெள்ளிக்கிழமை தோறும் கண்ணபுரத்தாயார் புறப்பாடும் நடக்கும்.

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஓன்றாக கருதப்படும் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலுக்கு எப்போதும் பக்தர்கள் வருகை இருக்கும். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    சனிபகவான்

    பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் மிகவும் விசேஷமான மாதமாகும். சனிக்கிழமைகளில் பக்தர்கள் பொதுவாக பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம். புரட்டாசி மாத சனிக்கிழமையில் ஒரு விசேஷம் உள்ளது. இந்த நாளில் தான் சனிபகவான் அவதரித்தார். எனவே சனிபகவானின் கெடுபலன்கள் குறைய பெருமாளை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    திருக்கண்ணப்புரத்து சவுரிராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். அன்று முழுவதும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறும். குறிப்பாக திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் விரைவில் திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    இந்த கோவிலில் தினமும் காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு நடை மூடப்படும். மீண்டும் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை மூடப்படும்.

    திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் மேல் பெருமாளின் பார்வை படுவதால் இந்த கோவிலில் வழிபடுவோரின் சகல கிரக தோஷங்களும் நீ்ங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கோவிலுக்கு செல்வது எப்படி

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருக்கண்ணபுரம் பகுதியில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து நாகூரை அடைந்து நாகூரில் இருந்து திட்டச்சேரி, திருமருகல் வழியாக 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள திருக்கண்ணபுரம் செல்லலாம்.

    தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் ரெயிலில் ஏறி நாகப்பட்டினத்துக்கு சென்று அங்கிருந்து மேற்கூறிய வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    Next Story
    ×