search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றம்: 12-ந்தேதி தீர்த்தவாரி
    X

    கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றம்: 12-ந்தேதி தீர்த்தவாரி

    • மாசிமக பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமக குளத்தின் வடகரையில் பிரசித்தி பெற்ற காசி விசாலாட்சி அம்பாள் உடனுறை காசிவிசுவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    நவக்கன்னிகள் தலமாக போற்றப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக பஞ்சமுர்த்திகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் கொடிமரத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர், நந்தி பெருமான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற உள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணைத்தாழி பல்லக்கில் சுவாமி வீதிஉலா வருகிற 10-ந்தேதியும், 11-ந்தேதி தேரோட்டமும், 12-ந்தேதி மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×