என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • சூடான கத்தியால் மார்பு, கைகள் மற்றும் கால்களில் கடுமையாக சூடு வைத்தார்.
    • குஷ்பு அங்கிருந்து தப்பித்துச் சென்றார்.

    மத்தியப் பிரதேசத்தின் வரதட்சணை கொண்டு வராத மனைவியை கணவன் கொடூரமான முறையில் சித்ரவதை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    கார்கோன் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குஷ்பூ பிப்லியா (23) போலீசில் அளித்த வாக்குமூலத்தின்படி, இந்த ஆண்டு பிப்ரவரியில் எனக்கு திருமணம் நடந்தது. திருமணமான நாளிலிருந்தே கணவர் என்னை துன்புறுத்தத் தொடங்கினார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, குடிபோதையில் இருந்த கணவர், முதலில் என்னை கண்மூடித்தனமாக அடித்தார். பின்னர் சமையலறைக்கு இழுத்துச் சென்று கால்கள் மற்றும் கைகளைக் கட்டினார்.

    சூடான கத்தியால் மார்பு, கைகள் மற்றும் கால்களில் கடுமையாக சூடு வைத்தார். வலியால் அலறியபோது கொதிக்கும் கத்தியை என் வாயில் வைத்து துன்புறுத்தினார். 

    "எனது பெற்றோர் உன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர், எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை" என்றும் கூறி என்னை தொடர்ந்து தாக்கினார்.

    தாக்குதல் நடந்தபோது வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர்" என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    திங்கள்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் குஷ்பு எப்படியோ அங்கிருந்து தப்பித்து, வீட்டு வேலைக்காரரின் செல்போன் மூலம் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் குஷ்புவின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று குஷ்புவிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

    வரதட்சணை கேட்டும் தனது மகளை பிடிக்கவில்லை என்றும் மருமகன் துன்புறுத்தியுள்ளான். அவளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று குஷ்புவின் தந்தை புகாரில் தெரிவித்துள்ளார் .இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    முன்னதாக உத்தரப் பிரதேசத்தில், வரதட்சணை கொண்டுவராத மனைவியை கணவன் தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

    • 26 வயது ஆசிரியையை ஒருதலைபட்சமாக காதலித்துள்ளான்.
    • ஆசிரியை புகார் அளித்ததால் வேறு பள்ளிக்கு மாறி படித்து வந்துள்ளார்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் 26 வயது ஆசிரியையை ஒருதலையாக காதலித்த மாணவன், அந்த ஆசிரியை மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கபூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளியில் 18 வயது மாணவன் சூர்யான்ஸ் கோச்சார் படித்து வந்துள்ளான். இதே பள்ளியில் 26 வயதான ஆசிரியை ஒருவர் பணியாற்றி வந்துள்ளார்.

    கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு, ஆசிரியை மீது அந்த மாணவனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியையிடம், தாங்களை விரும்புவதாக தெரிவித்துள்ளான். ஆனால் ஆசிரியை அதை ஏற்கவில்லை. அந்த மாணவன் மீது புகார் அளித்ததாக தெரிகிறது. இதனால் அந்த பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு, மற்றொரு பள்ளியில் சேர்ந்துள்ளான்.

    கடந்த 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, அந்த ஆசிரியை சேலை அணிந்து பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவன் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். இதனால் அந்த ஆசிரியை புகார் அளித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த மாணவன், பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு நேராக அந்த ஆசிரியை வீட்டிற்கு சென்றுள்ளான்.

    ஆசிரியை சுதாரிப்பதற்குள் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான். அருகில் உள்ளவர்கள் தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆசிரியை உடலில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதி செய்து அநத் மாணவனை கைது செய்துள்ளனர்.

    • படுக்கை அறையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்தது.
    • வெறும் 4 நிமிடம் 10 நொடிகளில் கொள்ளையை அரங்கேற்றி அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் நீதிபதி வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, தலைநகர் இந்தூரில் உள்ள ரமேஷ் கார்க் உடைய வீட்டுக்குள் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று நுழைந்து படுக்கை அறையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்தது.

    ஒரு திருடன் நகைகளை எடுத்துக்கொண்டிருந்த நிலையில் மற்றொரு திருடன் இரும்புக் கம்பியை அங்கு படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த நீதிபதியின் மகன் ரித்விக் -ஐ நோக்கி நீட்டியபடி இருந்தான்.

    ரித்விக் ஒருவேளை தூக்கத்தில் இருந்து எழுந்திருந்தால் அவரை அந்த கம்பியால் தாக்க திருடன் தயாராக இருந்தது அறையின் சிசிடிவி வீடியோவில் தெரிந்தது.

    வெறும் 4 நிமிடம் 10 நொடிகளில் கொள்ளையை அரங்கேற்றி அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. ஜன்னல் இரும்பு கிரில் கதவை வெட்டி அவர்கள் உள்ளே நுழைந்தது தெரியவந்தது.

    சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர். 

    • எல்லாருக்கும் முதலாளி நான் தான் என நினைக்கும் சிலர் யோசிக்கிறார்கள்.
    • எந்த உலக சக்தியாலும் நாம் ஒரு வல்லரசாக மாறுவதைத் தடுக்க முடியாது.

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 சதவீதம் வரிவிதித்தார். இதனால் இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் உமரியா கிராமத்தில் 'பிரஹ்மா' பெம்ல் (BEML) ரயில் உற்பத்தி மையத்திற்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிகழ்வில் பேசிய அவர், "இந்தியா இவ்வளவு வேகமாக வளர்வதைச் சிலர் விரும்பவில்லை. எல்லாருக்கும் முதலாளி நான் தான் என நினைக்கும் சிலர் இந்தியா எப்படி இவ்வளவு வேகமாக வளர்கிறது என்று யோசிக்கிறார்கள்.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை அதிக விலை கொண்டதாக மாற்ற முயற்சி நடக்கிறது. இதன் மூலம் விலை உயர்ந்து, உலக நாடுகள் அவற்றை வாங்குவதை நிறுத்தும் என நினைக்கிறார்கள்.

    இதற்காகவே இந்த முயற்சி நடந்து வருகிறது. ஆனால் இந்தியா முன்னேறி வரும் வேகத்தில், எந்த உலக சக்தியாலும் நாம் ஒரு வல்லரசாக மாறுவதைத் தடுக்க முடியாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்தார். 

    • மனைவி திரௌபதி, தனது கணவரின் பால்ய நண்பருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்தார்.
    • தனது கணவர் மற்றும் மாமியார் மீது பொய்யான வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்வதாகவும் மிரட்டினார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோகர் லோதி (45). இவரது மனைவி திரௌபதி, தனது கணவரின் பால்ய நண்பருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்தார்.

    மனோகரின் குடும்ப உறுப்பினர்கள் இது குறித்து அறிந்ததும், அவர்கள் திரௌபதியை உறவை முறித்துக் கொள்ளுமாறு அவர்கள் எச்சரித்தனர்.

    இருப்பினும், அவர் மறுத்தது மட்டுமல்லாமல், தனது கணவர் மற்றும் மாமியார் மீது பொய்யான வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்வதாகவும் மிரட்டினார்.

    இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மனோகர் லோதி, அவரது தாயார் புல்ரானி லோதி (70), மகள் ஷிவானி (18) மற்றும் மகன் அங்கித் (16) ஒரு கடுமையான முடிவை எடுத்தனர்.

    ஜூலை 26 ஆம் தேதி இரவு, நால்வரும் சல்பாஸ் மாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்து கொண்டனர்.

    இந்த சம்பவத்தில், பூல்ராணி மற்றும் அங்கித் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஷிவானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். மனோகர் லோதி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

    முழு குடும்பத்தையும் தற்கொலைக்கு தூண்டியதாக மனோகரின் மனைவி திரௌபதி மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

    கைது செய்யப்பட்ட திரௌபதி- அவரது காதலன்

     

    • குறிப்பாக சிவ்புரி மாவட்டத்தில், நீர்நிலைகள் நிரம்பி அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
    • அடுத்த 24 மணிநேரத்துக்கு சுமார் 220 மி.மீ. அளவிலான கனமழை பெய்யக்கூடும்

    பருவமழையால் பல்வேறு வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக சிவ்புரி மாவட்டத்தில், நீர்நிலைகள் நிரம்பி அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    அங்குள்ள வீடுகளினுள் வெள்ளநீர் புகுந்துள்ள நிலையில் ராணும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    திண்டோரி, விடிஷா, ஜபாப்பூர், நர்மதாபுரம், அலிராஜ்பூர், ராஜ்கார் மற்றும் பேடல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

    அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், மொரேனா, ரைசன், குணா, அசோக்நகர், சிவ்புரி, சாகர் மற்றும் விடிஷா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 2,900-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு சுமார் 220 மி.மீ. அளவிலான கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    • மக்கள் தொகையில் பட்டியலின மக்கள் 16 சதவீதமும், பழங்குடியின மக்கள் 22 சதவீதமும் உள்ளனர்.
    • பெண்களுக்கு எதிராக மொத்தம் 7,418 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் பட்டியல் இனம் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்களில் தினமும் 7 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. ஆரிப் மசூத் பெண்கள் மீதான குற்ற சம்பவங்கள் குறித்த கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் பட்டியலின மக்கள் 16 சதவீதமும், பழங்குடியின மக்கள் 22 சதவீதமும் உள்ளனர்.

    கடந்த 2022 மற்றும் 2024-ம் ஆண்டுக்கு இடையில், பட்டியல் இன மற்றும் பழங்குடி இன சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராக மொத்தம் 7,418 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சமூகங்களை சேர்ந்த 558 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் 338 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.

    மேலும் 1,906 எஸ்.சி. மற்றும் பழங்குடியின பெண்கள் வீட்டு வன்முறையை எதிர்கொள்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்த பெண்களுக்கு எதிராக 44,978 குற்றங்கள் பதிவாகியுள்ளது. அதவாது ஒரு நாளைக்கு சராசரியாக 7 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஃபுல்ரானி மற்றும் அன்கித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • ஷிவானி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சனிக்கிழமை அதிகாலை தேஹர் கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. மனோகர் லோதி (45), அவரது மகள் ஷிவானி (18), மகன் அன்கித் (16), மற்றும் மனோகரின் தாய் ஃபுல்ரானி லோதி (70) ஆகியோரே உயிரிழந்தவர்கள்.

    அவர்கள் சல்பாஸ் மாத்திரைகளை உட்கொண்ட நிலையில், ஃபுல்ரானி மற்றும் அன்கித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    ஷிவானி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், மனோகர் சாகர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.

    தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மனோகர் லோதியின் மனைவி சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 13 பேர் கன்வார் யாத்திரையை மேற்கொண்டனர்.
    • விபத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கன்வார் யாத்திரை என்பது சிவ பக்தர்கள் ஆண்டு தோறும் செல்லும் யாத்திரையாகும்.

    கங்கை நதியிலிருந்து புனித நீர் எடுக்கும் பக்தர்கள் அந்த தண்ணீரை ஒரு கம்பத்தின் இருபுறமும் தொங்கவிடப்பட்ட கொள்கலன்களில் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு தோள்களில் சுமந்து சென்று தங்கள் உள்ளூர் சிவாலயங்களில் உள்ள சிவன் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வர். இந்த ஆண்டுக்கான கன்வார் யாத்திரை ஜூலை 11 முதல் 23-ந்தேதி வரை நடந்து வருகிறது.

    மத்திய பிரேதச மாநிலம் சிதாவுனா கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் கன்வார் யாத்திரையை மேற்கொண்டனர். அவர்கள் நேற்று இரவு குவாலியர் ஷீட்லா மாதா நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் யாத்ரீகர்கள் மீது மோதியது. இதில் 4 யாத்ரீகர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விபத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதில் ஒருவர் இறந்தார். இந்த விபத்தில் மொத்தம் 4 பேர் இறந்துள்ளனர். 2 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பி.எம். ஸ்ரீ பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
    • பள்ளியின் பாழடைந்த நிலை குறித்து ஏற்கனவே அரசிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

    மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளி வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.

    கடந்த வெள்ளிக்கிழமை, போபாலில் உள்ள பி.எம். ஸ்ரீ (மத்திய அரசு திட்ட) பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை. மாணவர் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பள்ளியின் பாழடைந்த நிலை குறித்து  ஏற்கனவே அரசிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எந்த நடவடிக்கையில் எடுக்காமல் அரசு அலட்சியம் காட்டியதால் தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    • தீபக் மஹாவர் நாகப்பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மகன் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு சென்றார்.
    • கழுத்தில் பாம்புடன், மகனை அழைத்துக்கொண்டு வரும் வழியில் தீபக் மஹாவரின் கையில் அந்த பாம்பு கடித்துவிட்டது.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் குணால் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபக் மஹாவர் (வயது 42). பாம்புபிடி வீரரான இவர், பல்வேறு பகுதிகளில் பாம்புகளை பிடித்த அனுபவம் உள்ளவர்.

    இந்தநிலையில் பர்பத்புரா கிராமத்தில் ஒரு கல்வி நிறுவனத்தில் கொடிய விஷமுள்ள பாம்பு பதுங்கி இருப்பதாகவும், அதை பிடிக்குமாறும் தீபக் மஹாவருக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து அங்கு சென்ற அவர், அந்த விஷப்பாம்பை லாவகமாக பிடித்தார்.

    அப்போது பள்ளியில் படிக்கும் அவருடைய மகனை அழைத்துவருமாறு அவருக்கு வீட்டில் இருந்து போன் வந்தது. இதையடுத்து கொடிய விஷமுள்ள அந்த நாகப்பாம்பை அவர் தனது கழுத்தில் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மகன் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு சென்றார். வழியில் தனது கழுத்தில் பாம்பு கிடப்பதை செல்போனில் வீடியோ எடுத்து அதனை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டார்.

    கழுத்தில் பாம்புடன், மகனை அழைத்துக்கொண்டு வரும் வழியில் தீபக் மஹாவரின் கையில் அந்த பாம்பு கடித்துவிட்டது. இதில் அவரது உடலில் விஷம் ஏறியது. அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி தீபக் மஹாவர் பரிதாபமாக செத்தார்.

    இந்தநிலையில் தீபக் மஹாவர், விஷப்பாம்பை கழுத்தில்போட்டு சுற்றிய ரீல்ஸ் வெளியாகி வைரலாகியுள்ளது.

    • சதீஷ் சவுகான் என்பவருக்கு பக்கத்து வீட்டுக்காரருடன் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.
    • நெட்டிசன்கள் அவரை ஹெல்மெட் மேன் என்று அழைக்க தொடங்கியுள்ளனர்.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கேமரா பொருத்திய ஹெல்மெட் உடன் பயணிக்கும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    சதீஷ் சவுகான் என்பவர் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட சொத்து தகராறால் உயிருக்கு பயந்து, கேமரா பொருத்திய ஹெல்மெட் உடன் பயணிக்கும் நபரின் வீடியோ வைரலானதால் நெட்டிசன்கள் அவரை ஹெல்மெட் மேன் என்று அழைக்க தொடங்கியுள்ளனர்.

    பக்கத்து வீட்டுக்காரரருடன் ஏற்பட்ட தகராறில் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர் என்று சதீஷ் போலீஸில் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கேமரா பொருந்திய ஹெல்மெட் உடன் அவர் பயணித்து வருகிறார்.

    இது தொடர்பாக பேசிய சதீஷ், "எனக்கோ அல்லது என் குடும்பத்தினருக்கோ ஏதாவது நடந்தால், குறைந்தபட்சம் வீடியோ ஆதாரமாவது இருக்கும்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் குறித்து பேசிய போலீசார், "நாங்கள் 2 தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்ய முயற்சித்தோம். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது" என்று தெரிவித்தனர்.

    ×