என் மலர்
செய்திகள்

பொதுக்குழு கூட்டப்பட்டால் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படலாம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
சென்னை:
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று கூறியதாவது:-
அணிகள் இணைப்பு என்பது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அ.தி.மு.க.வில் எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சி. இது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஏற்பட்டிருக்கிற மகிழ்ச்சி.
இணைப்பு முயற்சியில் எந்த தரப்பினரும் சசிகலாவை பற்றி மன்ற கூட்டத்தில் வாய் திறக்கவே இல்லை. பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்கவேண்டும் என வைத்திலிங்கம் கருத்து கூறி இருக்கிறார் என்றால் அதை தலைமை கழகத்துக்கு வெளியே அவர் சொல்லி இருப்பதாக கருதுகிறேன்.
பொதுக்குழு கூட்டப்படும் போது பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என்று உறுதியாக சொல்ல முடியாது. அவர் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படலாம். வைத்தியலிங்கத்துக்கு ஒரு ஓட்டு, எனக்கு ஒரு ஓட்டு அவ்வளவுதான். ஒரு பொறுப்பாளருக்கு ஒரு ஓட்டு தான். அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஆயிரக்கணக்கான வாக்குகள் உள்ளன. பெரும் பான்மை வாக்குகள் யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.
அரசியலில் அவரவர்களுக்கு ஒரு ஆசை உண்டு. அவரவர் விருப்பத்துக்கேற்ப நிறைவேற்ற எல்லோரும் துணை நிற்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் அது நிறைவேறாமல் போகும் போது கருத்துக்களை சொல்வதும் ஒரு தவறான நடைமுறை என்று நான் கருதுகிறேன்.
அ.தி.மு.க. ஆட்சி 100 சதவீதம் முழுமையான காலத்தை நிறைவு செய்யும். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று கூறுவது தவறு.
இதற்கு முன்பும் எம்.எல்.ஏக்கள் பிரிந்து சென்ற போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
புரட்சித் தலைவி அம்மா நோய் வாய்ப்பட்டிருந்த நேரத்தில், முடியாமல் இருந்த நேரத்தில் ஊர் முழுக்க சுற்றித்திரிந்து தன்னுடைய இன்னுயிரை பணயம் வைத்து பெற்றுத் தந்திருக்கிற மாபெரும் வெற்றி இது. இந்த வெற்றியை குழி தோண்டி புதைக்க அ.தி.மு.க. தொண்டன் ஆசைப்பட மாட்டான் என்பது என்னுடைய திடமான கருத்து.
எங்களது கட்சியை எப்படி இயக்க வேண்டும். எங்களது கட்சியில் எதை கொள்கையாக எடுத்துக் கொள்வது, எங்களுடைய கட்சியில் யாரை பின் பற்றுவது என்பதெல்லாம் எங்களுடைய சொந்த விஷயம். இதில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலையிடுவதற்கோ, கருத்து கூறுவதற்கோ அவசியம் இல்லாத ஒன்று.
கவர்னர் வித்யாசாகர் ராவ் மராட்டிய மாநிலத்தின் கவர்னராக இருந்தாலும் தமிழகத்தின் பொறுப்பும் அவரிடம் இருக்கிறது. எனவே தமிழக அரசினுடைய பொறுப்புகளை நிறைவேற்ற கவர்னர் வந்திருக்கிறார்.
சசிகலாவை சட்டமன்ற தலைவராக தேர்வு செய்த போது ஏன் உடனே வர வில்லை. இப்போது ஏன் உடனே வந்தார் என்ற கருத்தை அவரிடம் கேட்டால் பதில் சொல்வார்.
பிடிக்காத பொண்டாட்டி கால் பட்டால் குற்றம், கை பட்டால் குற்றம். இப்போது பிடித்த பொண்டாட்டியாகி விட்டார். அதனால் இப்போது கால்பட்டாலும் குற்றமில்லை. கைபட்டாலும் குற்றமில்லை. அணிகள் இணையும் முன்பு ஒருவரையொருவர் குற்றம் சாட்டியதும், அணிகள் இணைந்த பிறகு அண்ணன்- தம்பி என்று கூறி கொள்வதும், அரசியலே இதுதான் என்னும்போது மக்களுக்கு எங்கள் மீது வெறுப்பு வர வாய்ப்பு இல்லை.
சண்டை போட்டவர்கள் கூடிக்கொள்வதில்லையா? சண்டை போட்டவர்கள் ஒன்று கூடினால் என்ன தவறு? சொன்ன கருத்துக் களை வாபஸ் வாங்கிக் கொள்வது தவறா? சண்டைக் காரர்கள் சண்டைக்காரர்களாகவே இருக்க வேண்டுமா? அவர்கள் ஒன்றாக கூடுவது சகஜம்தான். நாங்கள் ஒன்று கூடியிருப்பதை பார்த்தால் மக்கள் சந்தோஷப்படுவார்கள். எதிர்க்கட்சியினர் வேண்டுமானால் மாற்றுக் கருத்து சொல்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






