search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவசை ஊஞ்சல் உற்சவம்
    X

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவசை ஊஞ்சல் உற்சவம்

    • கொட்டும் மழையிலும் நனைந்தபடி சாமி தரிசனம் செய்தனர்.
    • கோவில் பூசாரிகள் அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர்.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு வைகாசி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    இதை முன்னிட்டு அதிகாலை கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகமும் தங்ககவச அலங்காரமும் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு எழிலரசி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர்.

    இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து இரவு 11.45மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து கோவிலுக்குள் எடுத்துச் சென்றனர்.

    ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி,விழு ப்புரம், கடலூர், சேலம்,வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ங்களில் இருந்தும்,புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கொட்டும் மழையிலும் நனைந்தபடி சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×