என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பட்ஜெட் மீது மேயர் தினேஷ்குமார் உரையாற்றினார்.
- பொதுமக்களின் தண்ணீர் தேவைக்கேற்ப மாமன்ற உறுப்பினர்களிள் வேண்டுகோளின் அடிப்படையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி குழு தலைவர் கோமதி பட்ஜெட்டை வெளியிட்டார். அதனை மேயர் தினேஷ்குமார் பெற்றுக்கொண்டார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், கமிஷனர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
2025- 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.1,522 கோடியே 7 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. செலவினம் 1,517 கோடியே 97 லட்சம். உபரி ரூ.4 கோடியே 10 லட்சம் என நிதி குழு தலைவர் கோமதி தெரிவித்தார்.
இதன் பின்னர் பட்ஜெட் மீது மேயர் தினேஷ்குமார் உரையாற்றினார். மேலும் மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் விளக்கினார். அதன் விவரம் வருமாறு:-
புதிய குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய நீராதாரம் உருவாக்குதல், நீராதாரத்திலிருந்து தலைமை சுத்திகரிப்பு நிலையம் வரை 19.83 கி.மீ. நீளத்திற்கு பிரதான குழாய்கள் அமைத்தல், 196.00 மில்லியன் லிட்டர்கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மாநகர் முழுமை பகுதிக்கும் 144.028 கி.மீ. நீளத்திற்கு நீருந்து குழாய் அமைத்தல், 29 இடங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுதல், 1192.331 கி.மீ. நீளத்திற்கு குடிநீர் விநியோக குழாய்கள் பதித்தல் ஆகியவற்றில் பெரும்பான்மையான பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள்பயன்பாட்டிற்கு நான்காவது குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை 98சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது.
இப்பணிகள் இவ்வாண்டில் முடிக்கப்பட்டு 3 நாட்கள் இடைவெளியில் குடிநீர் விநியோகம் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
பொதுமக்களின் தண்ணீர் தேவைக்கேற்ப மாமன்ற உறுப்பினர்களிள் வேண்டுகோளின் அடிப்படையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருப்பூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் 544.281 கி.மீ.நீளத்திற்கு கழிவுநீர் சேகரிக்கும் குழாய்கள் அமைத்தல், 9 கழிவு நீரேற்று நிலையங்கள் கட்டுதல், 44.086 கி.மீ. நீளத்திற்கு கழிவுநீர் உந்து குழாய்கள் அமைத்தல், 71 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுதல், 62,835 வீட்டு இணைப்புகள் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றது. இதுவரை 97 சதவீத பணிகள் முடிவுற்றது. இப்பணிகள் இவ்வாண்டில் முழுமையாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை மண்டலத்துக்கு 2 வார்டு வீதம் பரிசோதனை அடிப்படையில் வீடு தோறும் தரம் பிரித்து வழங்க ஒவ்வொரு வீட்டுக்கும், பச்சை, சிவப்பு வண்ணங்களில் இரண்டு பக்கெட்டுகளை வழங்கிட உள்ளோம். பின்பு மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 249.06 கி.மீ. நீளத்திற்கு ரூ.133.00 கோடி திட்ட மதிப்பீட்டில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். மேலும் 18.18 கோடி மதிப்பீட்டில் 26.53 கி.மீ. நீளத்திற்கு மண் சாலைகள் தார் சாலைகளாக மாற்றியமைக்கப்படும். பழுதடைந்துள்ள கான்கிரீட் சாலைகள் 90.00 கி.மீ. நீளத்திற்கு ரூ.30.00 கோடி திட்ட மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளாலும், இயற்கை சீற்றம் போன்ற நிகழ்வுகளால் சேதம் ஏற்பட்டுள்ள சாலைகள் ரூ.7கோடி மதிப்பீட்டில் பழுது நீக்கப்படும். அவினாசி ரோடுமேம்பாலம் முதல் நல்லாத்துப்பாளையம் கேட் தோட்டம் வரையிலான பகுதிகளில் புதிய இணைப்பு சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு கருத்துருக்கள் அனுப்பப்பட்டு, உரிய அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தூத்துக்குடியில் 47 லாரிகள் ஓடவில்லை.
- டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் எரிவாயு வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
தூத்துக்குடி:
பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தங்களிடம் ஒப்பந்தம் செய்து உள்ள எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு புதிய ஒப்பந்தப்படி சில திருத்தங்களை கொண்டு வருகின்றன. அதே போன்று வாடகையையும் குறைத்து உள்ளன.
இது போன்ற கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி தென்மாநிலங்களில் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
இதனை தொடர்ந்து எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் துறைமுகத்தில் இருந்து எரிவாயுவை நிரப்ப செல்லாமல் தூத்துக்குடியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், கொச்சி துறைமுகத்தில் இருந்து எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் மூலம் தினமும் சுமார் 200 டன் எரிவாயு தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு கொண்டு வரப்படும்.
அங்கிருந்து சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும். இதனால் தூத்துக்குடியில் 47 லாரிகள் ஓடவில்லை. தற்போது டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் எரிவாயு வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
- பஸ்களின் மாதிரி புகைப்படங்களை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.
- அடுத்த கட்டமாக மாடி பஸ் விடுவதற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் சாதாரண பஸ்கள், ஏ.சி.பஸ்கள் புழக்கத்தில் உள்ளன. இதன் அடுத்த கட்டமாக மாடி பஸ் விடுவதற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் 12 மீட்டர் நீளம் கொண்ட ஏ.சி. மின்சார பஸ்கள் மாநகர போக்குவரத்து கழகத் துக்காக வாங்கப்பட உள்ளது. இதற்காக அசோக் லேலண்ட் நிறுவனம் 500 சுவிட்ச் இ.ஐ.வி.12 ரக மின்சார பஸ்களை வழங்க ஏற்கனவே டெண்டர் கோரி உள்ளது.

இந்த ஏ.சி. மின்சார பஸ்களை 12 ஆண்டுகளுக்கு பராமரித்து இயக்கும் என்று அசோக் லேலண்டு நிறுவனம் தெரிவித்து உள்ளது.
100 மின்சார பஸ்களை 12 ஆண்டுகளுக்கு பரா மரித்து இயக்கும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதையொட்டி 100 மின்சார பஸ்களுக்கான டெண்டரை போக்குவரத்து துறை கோரி இருந்த நிலையில் இந்த பஸ்களின் மாதிரி புகைப்படங்களை போக்குவரத்து துறை வெளியிட்டு உள்ளது.
மக்கள் பயன்பாட்டுக்கு இந்த பஸ்கள் சென்னை நகரில் மே மாதம் முதல் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் என தொழிலாளர்கள் பக்கமும் கண்டிப்பாக துணையாக இருப்போம்.
- தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாதுகாக்க வேண்டியது எங்களுடைய உரிமை, கடமை, கொள்கை எல்லாமே.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
"த.வெ.க. அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமரும்போது பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்வோம்.
சட்டம்-ஒழுங்கை முறையாக Strict-ஆக வைத்திருப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவம் என அனைத்திலும் கவனம் செலுத்துவோம். அதுவும் எல்லாருக்கும் எளிமையாக கிடைக்கப்படுவதுதான் எங்கள் குறிக்கோள்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் என தொழிலாளர்கள் பக்கமும் கண்டிப்பாக துணையாக இருப்போம். நாம் எப்போதும் உழைப்பவர்கள் பக்கம்தான் நிற்போம்.
நம் தமிழ்நாடு விவசாய பூமி. இயற்கை வளங்கள் நிறைந்த மண். விவசாயத்திற்கும் இயற்கை வளங்களுக்கும் எதிராக கொண்டுவரும் எந்த ஒரு திட்டத்தையும் நடவடிக்கையும் கொண்டுவருவதை எங்களால் ஏற்க முடியாது.
எங்கள் மண்ணை, மக்களை பாதிக்கும் விஷயங்களை செயல்படுத்தாதீர்கள் அதை நாங்கள் எதிர்க்கவே செய்வோம். தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாதுகாக்க வேண்டியது எங்களுடைய உரிமை, கடமை, கொள்கை எல்லாமே.
அரசியலின் அடிப்படை பலம் சமரசமற்ற கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் தான். இதுதான் பெரியாரின் சமூக நீதி, காமராஜரின் நேர்மையான நிர்வாகம், அம்பேத்கரின் சம நீதி மற்றும் சம வாய்ப்பு, வேலு நாச்சியாரின் சமூக உள்ளடக்கம் மற்றும் சமூக நல்லிணக்கம், நீர்வளத்திற்காகப் போராடிய அஞ்சலை அம்மாள் ஆகியோரை கட்சியின் சித்தாந்தம் மற்றும் கொள்கைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய சுதந்திரப் போராட்ட வீர மங்கைகளை கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவித்த முதல் அரசியல் கட்சி என்று தெரிவிப்பதை பெருமையுடன் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- த.வெ.கவில் குழப்பம், சாதி பிரச்சனைனு சொல்றது, எல்லாமே தி.மு.கவோட செட்டிங்...
- யார் எந்த கூட்டணி அமைத்தாலும், த.வெ.க. தனியாக நின்றால் அமோகமாக வெற்றி பெறும்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில்,
ஹிட்லர், முசோலினி அரசியல்போல் மோடி, ஸ்டாலின் அரசியல் உள்ளது. கேள்வி கேட்க ஆளே இருக்கக்கூடாதென நினைக்கிறது தி.மு.க.
நாம் போராடினால வழக்குப்பதிவு செய்வார்கள், மிரட்டுவார்கள். அதற்கெல்லாம் அச்சப்படக்கூடாது.
அ.தி.மு.க.வினர் நேரடியாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தனர். அதைவிட மோசமாக மத்திய அரசை எதிர்ப்பது போல தி.மு.க. நாடகமாடுகிறது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை எப்படி தி.மு.க.வில் கூட்டணி வைத்து அழித்தார்களோ, அதேபோல் தற்போது வி.சி.க.வை அழித்து வருகிறார்கள்.
த.வெ.கவில் குழப்பம், சாதி பிரச்சனைனு சொல்றது, எல்லாமே தி.மு.கவோட செட்டிங்... எனக்கு அவங்கள பத்தி எல்லாமே தெரியும். அங்க தான் வேல பாத்துட்டு வந்துருக்கேன். எம்.ஜி.ஆரும் அங்க இருந்து தான் வந்தாரு.
த.வெ.க. தலைவர் விஜய் மக்களை சந்திக்க செல்லும்போது அரசியலில் பேரதிர்வுகளை ஏற்படுத்தும். யார் எந்த கூட்டணி அமைத்தாலும், த.வெ.க. தனியாக நின்றால் அமோகமாக வெற்றி பெறும் என்றார்.
- தமிழ்நாட்டில் இருந்து வருகிற ஜி.எஸ்.டி.யே கரெக்ட்டா வாங்கிக்கிறீங்க.. ஆனால் தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கமாட்டேங்குறீங்க.
- ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்க ஆரம்பிக்கும் போதே புரிஞ்சிச்சி பிரதமர் சார்.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. அரசை விமர்சித்து பேசிய விஜய் மத்திய அரசு மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். அவர் கூறியதாவது:-
* இங்க நீங்கதான் இப்படி என்றால் அங்க அவங்க. யாரு? உங்க சீக்ரெட் ஓனர். அவங்க உங்களுக்கும் மேல... மாண்புமிகு மோடிஜி அவர்களே... என்னமோ உங்க பேரெல்லாம் சொல்றதுக்கு எங்களுக்கு என்னவோ பயம் மாதிரியோ... அப்படி ஒரு விஷயத்தை சொல்றது. பேர சொல்லணும்... பேர சொல்லணும்...
* சென்டரில் ஆளுகிறவங்கன்னு சொல்றோம். சென்டரில் யார் ஆளுறா? காங்கிரசா? இங்க ஸ்டேட்ல ஆள்றாங்கன்னு பேசுறோம். இவங்க யார் ஆள்றா.. அதிமுகவா? அப்புறம் என்ன பேர சொல்லணும்... பேர சொல்லணும்... புரியலையே?
* ஓட்டுக்காக காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி. கொள்ளை அடிக்கறதுக்காக உங்களோட அதாவது பா.ஜ.க.வோட மறைமுக கூட்டணி. இப்படி உங்க பேரை சொல்லியே மக்களை ஏமாத்துறதும், உங்க பேரை சொல்லியே மக்களை பயப்படுத்துறதும்... இந்த கரப்ஷன் கபடதாரிகளுக்கு மறைமுகமாக உதவும் உங்க அரசுக்கு ஏன் ஜி? தமிழ்நாடும், தமிழர்கள் என்றாலே அலர்ஜி?
* தமிழ்நாட்டில் இருந்து வருகிற ஜி.எஸ்.டி.யே கரெக்ட்டா வாங்கிக்கிறீங்க.. ஆனால் தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கமாட்டேங்குறீங்க. இங்க படிக்கிற பிள்ளைகளின் படிப்புக்கு நிதி ஒதுக்க மாட்டேங்குறீங்க.. ஆனால் மும்மொழிக்கொள்கையை திணிக்கிறீங்க. சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டோட பாராளுமன்ற தொகுதியில் கை வைக்க பார்க்குறீங்க...
* ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்க ஆரம்பிக்கும் போதே புரிஞ்சிடிச்சி பிரதமர் சார். உங்க ப்ளான் என்னன்னு? எங்கெல்லாம் எப்படியெல்லாம் எந்த திசைக்கெல்லாம் இந்த நாட்டை கொண்டு போகலாம்ன்னு.
* சார் உங்ககிட்ட நாங்க சொல்லிக்கிறது எல்லாம்... தமிழ்நாட்டை கொஞ்சம் கேர்ஃபுல்லா ஹாண்டில் பண்ணுங்க சார். ஏன்னா தமிழ்நாடு பலபேருக்கு தண்ணி காட்டுன்ன ஸ்டேட் சார்.... பலபேருக்கு தண்ணி காட்டின்ன ஸ்டேட் சார்... பாத்து சார்... பாத்து செய்ங்க சார். மறந்துடாதீங்க சார் என்றார்.
- எம் மக்களுக்கான அரசியலையும் அந்த வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது.
- அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய சுதந்திரப் போராட்ட வீர மங்கைகளை கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவித்த முதல் அரசியல் கட்சி தமிழக வெற்றிக்கழகம் என்று தெரிவிப்பதை பெருமையுடன் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இப்படி ஒரு ஆழமான நம்பிக்கையுடன் வரும் 2026-ல் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்து மக்கள் சக்தியின் உதவியுடன் மக்கள் விரும்பும் ஒரு நல்லரசை அமைப்பதில் உறுதியாக இருப்பதால், அதை தடுப்பதற்கு என்று ஒரு சிலர் பகல் கனவு காண்பார்கள் இல்லையா?
அவர்களுக்கு சொல்லிக்கொள்வது ஒன்றுதான். காற்று, மழை, வெயில், இயற்கையை யாரால் கட்டுப்படுத்த முடியும். யாரால் தடுக்க முடியும். எல்லாம் கடவுளால் உருவாக்கப்பட்டது. அப்படித்தான் எம் மக்களுக்கான அரசியலையும் யாராலும் தடுக்க முடியாது.
அரசியல் சூறாவளியும், தேர்தல் சுனாமியையும் தடுப்பார் எவர். அப்படிதான் எம் மக்களுக்கான அரசியலையும் அந்த வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது. அப்படி தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவு ஒரு நாளும் மெய்ப்படாது.
வில்லியம் பிளேக்-ன் சில வார்த்தைகள். யார் வேண்டுமானாலும் வருவாங்க.. யார் வேண்டுமானாலும் போவாங்க.. ஆனால் நான் முன்னோக்கி போய்க்கொண்டே இருப்பேன்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்
என்ற குறளுக்கேற்ப, ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலை செய்தால் பூவுலகம் முழுவதையும் வேண்டினாலும் அது கைவசப்படும் என்ற திருக்குறளுடன் என் நன்றி உரையை நிறைவு செய்கிறேன்.
பார்த்துக்கொண்டே இருங்கள். அடுத்த வருடம் இதுவரை தமிழ்நாடு சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்று TVK ஒன்று DMK. நம்பிக்கையாக இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்," என்று கூறினார்.
- அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் காற்றை தடுக்க முடியாது.
- சரி பெண்களின் வாழ்க்கைத்தான் போராட்டமாக இருக்கிறது என்று பார்த்தால் இங்கே எத்தனை போராட்டங்கள்.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்து விஜய் பேசியதாவது:-
எத்தனை தடைகள் போட்டாலும் மக்களை பார்க்க நினைத்தால் போயே தீர்வேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அமைதியாக இருக்கிறேன்.
நேற்று வந்தவன் எல்லாம் முதலமைச்சர் ஆகணும் கனவு காண்கிறான். அது நடக்கவே நடக்காது என்று சொகின்றீர்கள். அப்புறம் ஏன் எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடியே தமிழக வெற்றிக் கழகத்துக்கு மட்டும் போடுகின்றீர்கள்?
அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம், ஆனால் காற்றை தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சுறாவளியாக மாறும், ஏன் சக்திமிக்க புயலாக கூட மாறும்.
என தருமை தமிழக வெற்றிக் கழக தோழர்களே, நான் மாநாட்டில் ஒரு விஷயத்தை வலியுறுத்தி சொன்னேன். அதைத் தான் திரும்பவும் சொல்கிறேன். இந்த மண், பிளவுவாத சக்திகளுக்கு எதிரான மண். சகோதரத்துவ மண், சமய நல்லிணக்கத்தை பேணும், சமூக நீதிக்கான மண். இதை நாம் பாதுகாத்தே தீர வேண்டும். உங்களை வேண்டிவேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் இருந்து பல பகுதிகளில் இருந்து வரும் செய்திகளை கேட்கும் போது மன உளைச்சலும், மனவேதனையும் தருவதாக இருக்கிறது.
சட்டம் ஒழுங்கு ஒன்று இருப்பதாக தெரியவில்லை. அதற்கு கரப்ஷன்ஸ், கபடதாரிகள் அரசு தான் காரணம். இந்த நிலைமை மாற வேண்டும். அதற்கு ஒரே வழி. இங்கு உண்மையான மக்களாட்சி மலர வேண்டும். அது வர வேண்டும் என்றால் இவர்களை மாற்ற வேண்டும். அதற்கு என்ன வழி? நாம் என்ன செய்யப்போறோம்?
நம்முடைய தோழர்கள் தினமும் மக்களை சந்தியுங்கள், அவர்களிடம் பேசுங்கள். ஒவ்வொரு தெருவுக்கும், வீட்டுக்கும் சென்று அவர்களின் பிரச்சனை என்னவென்று கேளுங்கள். அதை தீர்க்க என்ன வழி என்று யோசியுங்கள். அப்போது தான் அவர்களுக்கு நம்ம மீது நம்பிக்கை வரும். அப்படி ஒரு ஆழமான விதையை விதைத்துவிட்டு அதற்கு பின் நிமிர்ந்து பாருங்கள். ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரட்டைப் போர் யானை, வாகை மலர்க்கொடி தானாக பறக்கும்.
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே. உங்க ஆட்சியை பற்றி மட்டும் கேள்வி கேட்டா மட்டும் ஏன் சார் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது? நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்காக இருந்திருக்கும். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். பச்சப்புள்ளங்க, படிக்கிற புள்ளைங்க, சின்ன பொண்ணுங்க, வேலைக்கு போற பொண்ணுங்கன்னு இவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்ல முடியவில்லை. இதில் வேறு உங்களை அப்பான்னு கூப்பிடுறாங்கன்னு சொல்றீங்க.
தினம் தினம் கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிற என்னுடைய சகோதரிகளான தமிழ்நாட்டு பெண்கள் தான் உங்களோட அரசியலுக்கே ஒரு முடிவு கட்ட போறாங்க. உங்க ஆட்சிக்கு முடிவு கட்டப்போறாங்க. உங்களோட இந்த அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டப்போறாங்க.
சரி பெண்களின் வாழ்க்கை தான் போராட்டமாக இருக்கிறது என்று பார்த்தால் இங்கே எத்தனை போராட்டங்கள்? பரந்தூர் போராட்டம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம், போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டம், வரி உயர்வு போராட்டம், மீனவர்கள் போராட்டம், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம், சாம்சங் தொழிலாளர்கள், டங்ஸ்டன், மின்கட்டண உயர்வு எதிர்ப்பு போராட்டம், இஸ்லாமிய அமைப்புகள், செவிலியர்கள், மருத்துவர்கள் போராட்டம். இதுஎல்லாம் சாம்பிள் தான். இந்த எல்லா போராட்டங்களிலும் தமிழக வெற்றிக் கழகம் கூட இருக்கும்," என்றார்.
- போலீசார் சுற்றி வளைத்து 7 பேர் கும்பலையும் பிடித்தனர்.
- சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள் கஞ்சா, போதைப்பொருள் விற்பவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாநகர போலீசாருக்கு கோவை மாநகர பகுதிகளில் உயர் ரக போதைப்பொருட்கள் விற்க கும்பல் ஒன்று இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் தனிப்படை இன்ஸ்பெக்டர் விவேக் மற்றும் தனபால் தலைமையிலான போலீசார் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மேட்டுப்பாளையம் ரோடு பூமார்க்கெட், அம்மா உணவகம் கேட் அருகே சந்தேகத்திற்கிடமாக 7 பேர் நின்றிருந்தனர்.
இதை பார்த்த போலீசார் அவர்களின் அருகில் சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.

உடனடியாக போலீசார் சுற்றி வளைத்து 7 பேர் கும்பலையும் பிடித்தனர். பின்னர் அவர்களை பிடித்து சோதனை செய்தனர்.
அவர்களிடம் எம்.டி.எம்.ஏ. பவுடர், கொகைன், கிரீன் கஞ்சா, உலர்ந்த கஞ்சா உள்ளிட்ட உயர்ரக போதைப் பொருள் இருந்தது. இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேரையும் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், இவர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டி இத்தலார் போத்தியாடா பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது39), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஆனந்தூரை சேர்ந்த விநாயகம் (34), கோவை பி.என்.பாளையம் கிருஷ்ணகாந்த் (35), வடவள்ளி மகாவிஷ்ணு (28), சுங்கம் பைபாஸ் ஆதர்ஷ் (24), நஞ்சுண்டாபுரம் ரித்தேஷ் லம்பா (41), ரோகன் செட்டி (30) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.
கைதான மணி கண்டன் என்பவர், நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த ரிதேஷ் லம்பா மூலமாக மகராஷ்டிராவை சேர்ந்த ஜேக்கப் பிராங்களின் என்பவரிடம் இருந்து எம்.டி.எம்.ஏ. என்ற உயர் ரக போதைப்பொருள் மற்றும் கொகைன் வாங்கி, இவர்களுடன் சேர்ந்து இங்கு விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் கிரிஷ் ரோகன் செட்டி என்பவர் இமாச்சல பிரதேசத்தில் இருந்து கஞ்சா மற்றும் கிரீன் கஞ்சா, உயர் ரக போதைப்பொருட்களை கோவைக்கு வாங்கி வந்து, அதனை இங்கு பதுக்கி வைத்ததும், அதனை கோவையில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர்களை குறி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
போதைப்பொருள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அவர்கள் அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் போதைப்பொருள் மற்றும் கஞ்சா விற்று சம்பாதித்த பணத்தில் கோவைப்புதூரில் புதிதாக ஒரு வீடு கட்டி வருகின்றனர். அத்துடன் காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதியில் புதிதாக வீடும், ஒரு வீட்டு மனை வாங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கைதான 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
மேலும் போதைப்பொருள் விற்று அதில் சம்பாதித்த அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு 12 வங்கி கணக்குகள் இருப்பதை கண்டுபிடித்துள்ள போலீசார், அதனை முடக்குவதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.
கைதானவர்களில் மகாவிஷ்ணு என்பவர் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் விஜயலட்சுமியின் மகன் ஆவார்.
கைதானவர்களிடம் இருந்து போலீசார் 24.40 கிராம் எம்.டி.எம்.ஏ. என்ற உயர் ரக போதைப்பொருள், 12.47 கிராம் எம்.டி.எம்.ஏ. பவுடர், 92.43 கிராம் கொகைன், 1.620 கிலோ கிரீன் கஞ்சா, 1 கிலோ 16 கிராம் உலர்ந்த கஞ்சா மற்றும் ரூ.25 லட்சம் ரொக்கப்பணம், பணம் எண்ணும் எந்திரம், போதை பொருள் எடை பார்க்கும் எந்திரம், பீர் பாட்டில்கள், 3 கார்கள், 12 செல்போன்கள் என ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- ஒரே ஒரே குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா?
- அத்தனை தடைகள் எல்லாம் தாண்டி தோழர்கள் சந்திப்பு, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்திட்டு தான் இருக்கும்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் உரையாற்றினார்.
உரை தொடக்கத்தில் என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் என்னுடைய வணக்கம் என தெரிவித்து அவர் பேசியதாவது:-
* தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர். இன்றைக்கு தமிழ்நாடு இருக்கிற சூழலில் நாம் ஒரு புதிய வரலாற்றை படைப்பதற்கு தயாராக வேண்டிய அவசியத்தை நீங்கள் எல்லாம் புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
* அரசியல் என்றால் என்ன? ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரே குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா? எது அரசியல்? எல்லாரும் நடக்கும் என்பது தான் அரசியல். அதுதான் நம் அரசியல்.
* காட்சிக்கு திராவிடம்.. ஆட்சிக்கு திராவிட மாடல் என்று தினம் தினம் மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றி மக்கள் விரோத ஆட்சியை மன்னராட்சி போல் நடத்துற இவங்க நமக்கு எதிராக பண்ணுகிற செயல்கள் ஒன்றா, இரண்டா... மாநாட்டில் ஆரம்பித்தது... புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர், 2-ம் ஆண்டு தொடக்க விழா, பொதுக்குழு வரைக்கும் எங்கெல்லாம் இப்படியெல்லாம் தடைகள். அத்தனை தடைகள் எல்லாம் தாண்டி தோழர்கள் சந்திப்பு, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்திட்டு தான் இருக்கும்.
* மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.... மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பெயரை மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது. செயலையும், ஆட்சியிலும் அதை காட்டணும் அவர்களே...
* ஒன்றியத்தில் பாஜக அரசை பாசிச அரசு என்று அடிக்கடி அறிக்கைகள் வெளியிட்டு விட்டு நீங்க பண்றது என்னவாம். அதுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாத பாசிச ஆட்சிதானே. ஒர கட்சி தலைவனா ஜனநாயக முறைப்படி என் கழக தோழர்களையும், என் நாட்டு மக்களையும் பார்க்கறதுக்கும் சந்திக்குறதுக்கும் தடை போறது நீங்க யார்?
இவ்வாறு அவர் பேசினார்.
- சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
- குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
* மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும். கடந்த 40 ஆண்டுகளாக, இதுவரை 800-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கிக் கொல்லப்பட்டு உள்ளனர்.
இப்போது வரை அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. குஜராத் மற்றும் இதர மாநில மீனவர்களைப் போலவே, ஒன்றிய அரசின் பிரதமர், தமிழக மீனவர்களையும் சமமாகக் கருதித் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
* பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது. புதிய விமான நிலையத்தை யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லாத வண்ணம், விவசாய நிலங்களை, நீர்நிலைகளை, இயற்கைச் சூழல்களை அழிக்காமல், வேறு இடத்தில்தான் அமைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசையும் தமிழ்நாடு அரசையும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
* அனைத்து மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்தப் பள்ளியிலும் படிக்கலாம், எந்த மொழியையும் கற்கலாம். அது அவரவரின் தனிப்பட்ட உரிமை என்பதில் தமிழக வெற்றிக்கழகம் உறுதியாக உள்ளது. ஆனால், கூட்டாட்சி உரிமையை மீறி, மாநில சுயாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையைக் கேள்விக் குறியாக்கி, வேற்று மொழியை வலுக்கட்டாயமாக அரசியல் ரீதியாகத் திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. முரட்டுப் பிடிவாதத்துடன் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், தமிழ்நாட்டுக்கு எப்போதும் இருமொழிக் கொள்கை தான் என்பதை இப்பொதுக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.
* மாநிலங்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் தொகுதிகளான 543 என்ற எண்ணிக்கையே காலவரையின்றி தொடர வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும். எனவே தொகுதி மறுசீரமைப்பு முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
* ஜி.எஸ்.டி. மூலம் நிதி அதிகாரத்தையும், நீட் மூலம் கல்வி அதிகாரத்தையும், மும்மொழித் திணிப்பின் மூலம் மொழி அதிகாரத்தையும், தொகுதி மறு சீரமைப்பு என்ற முறையில் மாநில அரசுகளிடையே பிளவினை ஏற்படுத்த முயல்வதையும், வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் கொள்கைகளை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறிப்பதையும் இப்பொதுக் குழு கண்டிக்கிறது. அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவியாமல், மாநில அரசுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
* அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருடக் கணக்காகப் போராடி வருகின்றது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம், தன் மனப்பூர்வமான ஆதரவை இப்பொதுக்குழு வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறது.
* ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்த இயலாத தி.மு.க. அரசு, தன் பொறுப்பற்ற தன்மையை ஒப்புக்கொண்டு, மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
* டாஸ்மாக் முறைகேடு குறித்து, முறையான விசாரணை நடத்தி, உண்மையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, பாரபட்சமின்றித் தண்டிக்க வேண்டும்.
* சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல், சமூக நீதி, இடஒதுக்கீடு என்று ஆளும் தி.மு.க.வினரும், பா.ஜ.க.வினரும் மேடைக்கு மேடை பேசி, மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கபட நாடகமாடுவதை நிறுத்தி விட்டு, சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்தும் பணிகளைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும்.
* இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகத் தங்கள் நாட்டிலேயே வாழ்வதற்கும், அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கும் நிரந்தரத் தீர்வு காண, ஐ.நா. சபை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உலக சமுதாயத்திற்கு இப்பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
* சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில், முட்டுக்காடு பகுதியில், தமிழக அரசால் பெரும் பொருட்செலவில், உலகத் தர வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள பன்னாட்டு அரங்கத்திற்குத் தந்தை பெரியாரின் பெயரைச் சூட்டிப் பெருமை சேர்க்க வேண்டும்.
* தமிழக வெற்றிக் கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோர் காட்டிய கொள்கை வழியில் சமரசமின்றி மக்கள் பணியில் ஈடுபடுவதே முக்கியக் கடமையாகும்.
* தலைவருக்கே முழு அதிகாரம். தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களின் பேராதரவையும், பேரன்பையும் பெற்றுள்ள நம் கழகத் தலைவர், தன்னுடைய மக்கள் சந்திப்பு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் தேர்தல் சார்ந்த முடிவுகள் எடுக்கும், பரிபூரண அதிகாரத்தையும் உரிமையையும் நம் கழகத் தலைவருக்கு அளிப்பது என இப்பொதுக்குழு முழு மனதுடன் முடிவெடுக்கிறது.
* தலைமைக் கழக நிர்வாகிகள், கழக விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழக விதிகளின்படி கழகத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைத்து நிர்வாகிகளுக்கும் இப்பொதுக்குழு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
* திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி என்கிற பி.அந்தோணி சேவியர் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட மாணவரணித் தலைவர் யு.பி.எம்.ஆனந்த் ஆகியோரின் மறைவுக்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
* பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை. மாநில அரசுக்குச் சுமார் 50 ஆயிரம் கோடி வருமானம் வரும் டாஸ்மாக் நிறுவனத்தினாலும், கட்டற்ற போதைப் பொருட்களின் புழக்கத்தினாலும் தமிழகத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி வருகிறது. பள்ளிச்சிறார்களே போதைக்கு அடிமையாகி, வளரும் தலைமுறையே போதையால் சீரழிந்து வருகிறது. இந்தப் போதைப் பொருட்களால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளன.
* மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்காமல், போதைப் பொருட்கள் தமிழகத்தில் சரளமாகப் புழங்கும் நிலையை உரு வாக்கியுள்ள தி.மு.க. அரசை தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
* பாலியல் புகார்களை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். அதில் முன்னாள் பெண் நீதிபதிகள் மற்றும் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகள் இடம் பெற வேண்டும்.
* குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள், 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
* தற்போதைய அரசு இதைச் செய்யத் தவறும் பட்சத்தில், இந்த அரசுக்குத் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் அமையும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தனித்துறை உருவாக்கப்படும் என இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.
* இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். நாடு முழுவதும் உள்ள வக்பு சொத்துகளைப் பதிவு செய்து வெளிப்படைத் தன்மையுடன் நிர்வகிப்பது என்ற காரணத்தைக் கூறி, வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திடீரெனக் கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கூட்டுக் குழு ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. இக்குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விட, ஆளும் கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவு பலமாக இருந்த காரணத்தினால் புதிய திருத்தங்களைக் கூட்டுக்குழு ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து, கூட்டுக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள், வக்பு சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டன. இதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய நிபந்தனைகளை உருவாக்கி, இஸ்லாமிய மக்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலும், இதுவரை அவர்கள் பயன்படுத்தி வந்த உரிமைகளை நசுக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
வக்பு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் சட்டசபைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளன. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். வக்பு சட்டத் திருத்த மசோதா வழியாகச் சிறுபான்மை மக்களை அச்சத்தில் ஆழ்த்தக் கூடாது என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- பள்ளி சீருடைக்கு அளவெடுப்பதற்காக ஒரு ஆண் டெய்லரும், பெண் டெய்லரும் பள்ளிக்கு வந்தனர்.
- இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினார்.
மதுரை நகர் அனைத்து மகளிர் போலீசில் மாணவி ஒருவர் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், நான் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். பள்ளி சீருடைக்கு அளவெடுப்பதற்காக ஒரு ஆண் டெய்லரும், பெண் டெய்லரும் பள்ளிக்கு வந்தனர். அவர்களிடம் அளவு எடுப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதுதொடர்பாக வகுப்பு ஆசிரியையிடம் கூறினேன். ஆனால், அவர் கண்டிப்பாக சீருடைக்கு அளவெடுக்க வேண்டும் என கூறிவிட்டார். இதுபற்றி பள்ளி நிர்வாகத்தினரிடம் புகார் கூறினேன். அவர்களும் அது பற்றி கண்டுகொள்ளவில்லை.
பள்ளிக்கு வந்த ஆண் டெய்லர் அளவெடுத்தபோது என்னிடம் அத்துமீறினார். உடல் பாகங்களை தொட்டு, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். எனவே, அவர் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினார்.
இதில், பள்ளிக்கு வந்து சீருடைக்காக அளவெடுத்தபோது மாணவியிடம் அத்துமீறியதாக 60 வயதுடைய டெய்லர் மற்றும் அவரது சகோதரியான மற்றொரு டெய்லர், இதற்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியை ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவியிடமும், அந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மாணவிகளுக்கு சீருடை அளவெடுத்த விவகாரம் தொடர்பாக 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 டெய்லர்கள், அளவெடுக்க வைத்த ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவி அளித்த புகாரின் பேரில் டெய்லர்கள் பாரதி மோகன், கலாதேவி, மாணவியை கட்டாயப்படுத்தியதாக ஆசிரியை சாராவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.