என் மலர்
நீலகிரி
- மத்தியபிரதேசம், குஜராத், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பூண்டின் வரத்து அதிகரித்து உள்ளது.
- கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை நீலகிரி மலைப் பூண்டு ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனையாகி வந்தது.
ஊட்டி:
மத்தியபிரதேசம், குஜராத், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பூண்டின் வரத்து அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் பனியின் தாக்கம் அதிகரிப்பால் விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சந்தைகளுக்கு அதிக அளவில் பூண்டு கொண்டு வரப்படுவதால், நீலகிரி பூண்டின் விலையில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை நீலகிரி மலைப் பூண்டு ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது கிலோ ரூ.65 முதல் ரூ.110 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது.
இதன்காரணமாக உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை கிடைக்காததால் நீலகிரி விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மேலும் நீலகிரி பூண்டுக்கு போதிய கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ஆட்கொல்லி புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- பிடிபட்ட புலியை வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மாவனல்லா பகுதியில் கடந்த 24-ந் தேதி புலி தாக்கி நாகியம்மாள்(வயது60) என்பவர் உயிரிழந்தார். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து அந்த பகுதியில் சுற்றி திரியும் ஆட்கொல்லி புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் புலியின் நடமாட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் புலியை பிடிக்க புலி நடமாட்டம் உள்ள 5 இடங்களில் கூண்டு வைத்தும், 29 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
அப்போது அது அந்த பகுதியில் நடமாடி வந்த வயதான ஆண்புலி என்பதும், இந்த புலி தான் நாகியம்மாளை தாக்கி கொன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த புலியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடங்கினர்.
இதற்காக 40 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் 4 குழுக்களாக பிரிந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கூண்டுகளை வைத்தும் காத்திருந்தனர்.
ஆனால் புலி கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. மேலும் அப்பகுதிகளில் உள்ள கால்நடைகளையும் புலி வேட்டையாடி வந்தது. இதனால் ஆடு, மாடுகளை வைத்து வாழ்வாதாரத்தை ஈட்டி வரும் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மேலும் புலி நடமாட்டத்தால் அச்சத்திலும் இருந்து வந்தனர். பள்ளி மாணவர்கள் கூட வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டு வந்தனர்.
தொடர்ந்து வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மாவனல்லா பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் டி-37 புலி சிக்கியது.
புலி சிக்கியதை அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பிடிபட்ட புலியை பார்வையிட்டனர். அப்போது அது 12 வயது மதிக்கத்தக்க ஆண்புலி என்பதும், வேட்டையாட முடியாததால் ஊருக்குள் புகுந்து மக்களையும், கால்நடைகளையும் தாக்கி வந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து பிடிபட்ட புலியை வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். கூண்டில் சிக்கிய புலியை வனத்திற்குள் விடலாமா? அல்லது வனவிலங்கு மையத்திற்கு அனுப்பி வைக்கலாமா? என வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 16 நாட்களாக மசினகுடி, மாவனல்லா மற்றும் சுற்றுப்புற கிராம பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த டி-37 புலி சிக்கியதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
- தற்போது புதிய முயற்சியாக கருப்பு நிற கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
- கருப்பு கேரட் 3 முதல் 3½ மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும்.
கேரட்... இளஞ்சிவப்பு(ஆரஞ்சு) நிறத்தில் இருக்கும்.
இது அனைவரும் அறிந்ததே...!
ஆனால், கருப்பு நிறத்திலும் கேரட் இருக்கிறது.
அதுபற்றி தெரியுமா...?
ஆம்...அந்த கருப்பு கேரட் சாகுபடியில் களமிறங்கி இருக்கிறது, நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை.
டெல்லியில் இருந்து விதைகள்
இங்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கேரட் சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தேயிலை சாகுபடிக்கு அடுத்ததாக பிரதான சாகுபடியாக கேரட் உள்ளது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள நர்சரியில் தோட்டக்கலைத்துறை சார்பில் முதன் முறையாக கருப்பு கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது.
இதற்கான விதைகள் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டன. நர்சரியில் அந்த விதைகள் விதைக்கப்பட்டன.
அத்துடன் தோட்டக்கலைத்துறை மூலம் தயாரிக்கப்பட்ட மண்ணுயிர் உரம் இடப்பட்டது. இந்த பணியில் பூங்கா மேலாளர் லட்சுமணன் தலைமையில் தோட்டக்கலை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கருப்பு கேரட் 3 முதல் 3½ மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும். இவை வடமாநிலங்களில் பல்வேறு உணவு வகைகள், கேக் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரியில் பெரும்பாலான இடங்களில் இளஞ்சிவப்பு(ஆரஞ்சு) நிற கேரட் விளைவிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய முயற்சியாக கருப்பு நிற கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், கருப்பு கேரட் விதைத்து, அதன் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. வளர்ந்த பிறகு, அதில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட உள்ளது. இந்த வகை கேரட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பொட்டாசியம், வைட்டமின் கே உள்ளது. சோப்பு தயாரிப்பில் இயற்கை வர்ணத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்றனர்.
- கடந்த வாரம் வரை பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது வானம் முழுவதும் மேகமூட்டமாக காணப்படுகிறது.
- குன்னூரில் கடந்த ஒரு வாரமாக மழையின் தாக்கம் குறைந்து நீர் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே பனியும் குளிரும் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் மேகமூட்டம் மற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டியில் கடும் குளிர் அதிகரித்து உள்ளது.
அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக இயக்கப்படுகின்றன. இதேபோல மாலையிலும் பனி மூட்டம் வலுப்பெறுவதால் ஊட்டி லவ்டேல், பெர்ன்ஹில், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும் குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
கடந்த வாரம் வரை பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது வானம் முழுவதும் மேகமூட்டமாக காணப்படுகிறது.
மேலும் பகலில் வெயில் குறைந்து சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். தொடர்ச்சியான சாரல்மழை காரணமாக ஊட்டியின் முக்கிய சுற்றுலா தலங்களான ரோஸ் கார்டன், பூங்கா மற்றும் ஏரி பகுதிகளில் பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.
உள்ளூர் மக்கள் கடும் குளிரால் காலை-மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே தயக்கம் காட்டுகின்றனர். இதேபோல விடுதிகளில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகள் கடுங்குளிரில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக வெம்மை தரும் ஆடைகள் மற்றும் கையுறைகள் போன்றவற்றுடன் வலம் வருகின்றனர்.
குன்னூரில் கடந்த ஒரு வாரமாக மழையின் தாக்கம் குறைந்து நீர் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. குன்னூரில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பரவலாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் நடைபயணம் மேற்கொள்வோர் வெளியே வர இயலாமல் வீட்டுக்குள் முடங்கினர்.
மேலும் குன்னூரில் மண்ணில் ஈரத்தன்மை அதிகரித்து வருவதால் விரைவில் உறைபனியின் தாக்கமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
+2
- குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.
- வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள், மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிப்பதுடன், நிலச்சரிவை கட்டுப்படுத்தும் திறனும் உடையது.
ஊட்டி:
நீலகிரி மலைப்பகுதிகள், சாலையோரங்கள் மற்றும் புல்வெளி பகுதிகளில் காட்டு டேலியா மலர்கள் பல வண்ணங்களில் பூத்துகுலுங்கி, சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து உள்ளன.
சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை உள்ளிட்ட பல வண்ணங்களில் மலரும் இந்த டேலியா மலர்கள் ஊட்டி சாலையோரங்கள், கேத்தரின் நீர்வீழ்ச்சி சாலைகள், மலைச்சரிவுகள் மற்றும் தொட்டபெட்டா மலைச்சாலைகளில் பூத்து பரவி உள்ளது.
மலையின் குளிர்காற்றில் சூரியஒளி படும்போது இந்த காட்டு மலர்கள் ஆடும் தோற்றம், பயணிகள் புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற அழகிய இயற்கை காட்சியாக அமைந்து உள்ளது.
ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், "இத்தனை வண்ண மலர்கள் இயற்கையாகவே இங்கு மலர்கின்றன என்பது ஆச்சரியம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.
நீலகிரி மலையின் இயற்கை சமநிலையை பேணுவதில் இத்தகைய காட்டு மலர்கள் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றை பறிப்பது அல்லது சேதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
நீலகிரி மலைப்பகுதிகளில் பசுமையும் மலர்களும் இணையும் இந்த காலத்தில் ஊட்டியில் பூத்து குலுங்கும் டேலியா மலர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இயற்கை அழகின் சிறந்த அனுபவமாக திகழ்கின்றன.
நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை தடுக்கும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில், டைத்தோனியா டைவர்சிபோலியா எனப்படும் மெக்சிகன் காட்டு சூரியகாந்தி விதைகள், குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.
வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள், மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிப்பதுடன், நிலச்சரிவை கட்டுப்படுத்தும் திறனும் உடையது.
வழக்கமாக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பூக்கும் பருவம் கொண்ட காட்டு சூரிய காந்தி, தற்போது, மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் பரவலாக பூத்துக் குலுங்குகின்றன. வாசம் இல்லாத மலராக இருந்தாலும், கண்களுக்கு குளிர்ச்சிதரும் வண்ணம் கொண்டிருப்பதால், இந்த பூக்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக சூரியகாந்தி செடிகள் செழுமையாக வளர்ந்து இருப்பதால், நிலச்சரிவு ஆபத்து நீங்கி இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.
- வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது.
- மலை ரெயில் பாதை தண்டவாளங்கள் சேதமடைந்தன.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினந்தோறும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு மலைரெயில் பாதையில், கல்லார் ரெயில் நிலையத்தில் இருந்து குன்னூர் வரை உள்ள ரெயில் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்தன. பல்வேறு இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டது. இதனால் மலை ரெயில் பாதை தண்டவாளங்கள் சேதமடைந்தன.
இதனால் கடந்த 5 நாட்களாக மலை ரெயில் ரத்து செய்யப்பட்டு, பாறைகள், மண்சரிவுகளை அகற்றி, தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
கடந்த 5 நாட்களாக நடந்து வந்த சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து இன்று முதல் மலைரெயில் போக்குவரத்து தொடங்கியது. அதன்படி இன்று காலை மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது. மலை ரெயிலில் பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர்.
5 நாட்களுக்கு பிறகு மலை ரெயில் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- யானைபின் தொடர்ந்து துரத்தி, ராஜேசை தாக்கியது.
- பொதுமக்கள், ராக்வுட் தேயிலை தொழிற்சாலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நெலாக்கோட்டை பகுதியில் ராக்வுட் தேயிலைத் தோட்டம் அருகே ஒரு ஆண் யானை கடந்த சில நாட்களாக முகாமிட்டு வந்தது.
கடந்த 30-ந் தேதி இரவு, அங்குள்ள எஸ்டேட் தொழிலாளி ராஜேஷ் (48) என்பவர் தனது மனைவி கங்காவுடன் நெலாக்கோட்டை பஜாரில் பூஜை சாமான்கள் வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினார்.
வீட்டிற்கு அருகே வந்தபோது, ரோட்டில் யானை நின்று கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், அவரது மனைவி, மற்றும் ஆட்டோ டிரைவர் ரமேஷ் ஆகியோர் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடினர். அப்போது யானைபின் தொடர்ந்து துரத்தி, ராஜேசை தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யானை ஆட்டோவையும் சேதப்படுத்தியது.
வனத்துறையினர் ராஜேஷ் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றபோது, பொதுமக்கள் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி வசந்தகுமார் மற்றும் வனத்துறை அதகாரிகள் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நேற்று காலை மீண்டும் பொதுமக்கள், ராக்வுட் தேயிலை தொழிற்சாலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்தவரின் மனைவிக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும், மனிதர்களை தாக்கும் யானையை பிடிக்க வேண்டும், கூடுதல் வன ஊழியர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு எம்.எல்.ஏ ஜெயசீலன், ஆர்.டி.ஓ குணசேகரன், டி.எஸ்.பி. வசந்தகுமார், தாசில்தார் சிராஜுநிஷா ஆகியோர் நேரில் வந்து பேச்சு நடத்தினர். மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் மதியம் போராட்டத்தை கைவிட்டனர். அப்பகுதியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.
- உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்
தொடர் விடுமுறையால் நீலகிரியில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
* கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.
* மறுமார்க்கமாக உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்
* அது சமயம் உள்ளூர் வாகனங்கள் மற்றும் அரசுப்பேருந்துகள் வழக்கம் போல செல்லலாம்
* குன்னூர் வழியே உதகை வரும் சுற்றுலாப் பேருந்துகள் ஆவின் வளாகத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து அரசின் சுற்றுப் பேருந்துகளில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்
* கோத்தகிரி வழியே வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தொட்டபெட்டா சாலையோரம் நிறுத்த வேண்டும். கூடலூர் வழியே வரும் சுற்றுலா பேருந்துகள் HPF பகுதியில் நிறுத்தப்படும். அங்கிருந்து சுற்றுப் பேருந்துகள் மூலம் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்
* காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து வகையான கனரக வாகனங்களும் உதகை, கூடலூர், குன்னூர் நகரில் அனுமதிக்கப்படாது.
- மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நகராட்சி அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
- சாலையோர வியாபாரிகள் 25-ந்தேதிக்குள் கடைகளை அகற்ற அவகாசம் தரப்பட்டு இருந்தது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர பகுதியில் அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாகவும், உரிய அனுமதி பெறாமலும் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நகராட்சி அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாடல் ஹவுஸ் பகுதியில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிட பணி நடைபெறுவது தெரியவந்தது.
தொடர்ந்து நகராட்சி கமிஷனர் இளம்பரிதி உத்தரவின்பேரில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.
இதேபோல நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதியில் வாடகை நிலுவைத்தொகை செலுத்தாத வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டன.ஆனாலும் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் நிலுவை வாடகைத்தொகை செலுத்த முன்வரவில்லை.
தொடர்ந்து குன்னூர் நகராட்சி கமிஷனர் இளம்பரிதி உத்தரவின்பேரில் அதிகாரிகள் மார்க்கெட் பகுதிக்கு சென்று அங்குள்ள 15 கடைகளுக்கு நேற்று முன்தினம் இரவு சீல் வைத்தனர்.
மேலும் சாலையோர வியாபாரிகள் 25-ந்தேதிக்குள் கடைகளை அகற்ற அவகாசம் தரப்பட்டு இருந்தது. பண்டிகை காலம் என்பதால் சாலையோர வியாபாரிகளுக்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் கொடுத்து உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்தனர்.
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீலகிரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை அவதூறாக பேசியதாக கூறி அதனை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு இன்று மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்க முயன்ற நிலையில் பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து காங்கிரசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் வலுக்கட்டாயமாக அவரது உருவப்படத்தை போலீசார் வாங்கிச் சென்றனர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் கூறுகையில்," எடப்பாடி பழனிசாமி எங்களது தலைவரை பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் . அல்லது நிறுத்த வைப்போம்" என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர்கள் கெங்கராஜ், ரசூல்மைதீன், மாரியப்பன், மாவட்ட துணை தலைவர்கள் ராமகிருஷ்ணன், தியாக சுரேஷ், வெள்ளபாண்டி, வண்ணை சுப்பிரமணியன், மூத்த தலைவர் லெனின் பாரதி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அருள்தாஸ், பொதுச்செயலாளர் சையது அலி, தச்சை மண்டல துணைத் தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் ஜோதிபுரம் தங்கராஜ், முத்துராமலிங்கம், சிந்தாமதார், வட்டாரத் தலைவர் கணேசன், சுந்தர் ராஜ், இளைஞர் காங்கிரஸ் ஜான் மோசஸ், அமைப்புசாரா தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் தென்கலம் ஜாகிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கூடலூரில் பல கூட்டங்கள் நடந்திருக்கிறது, ஆனால் இந்த எழுச்சிப் பயணக் கூட்டத்தில்தான் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள்.
- விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோன்ற இந்த மக்கள் எழுச்சியே அதிமுக ஆட்சி அமைவதற்கு அச்சாணி.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கூடலூர் பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
உதயநிதி ஸ்டாலின் சாத்தூரில் நேற்று பேசுகிறார், நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என்கிறார். அப்படியா செய்கிறார்? இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் ரோல் மாடல் ஸ்டாலின். ஊழல், கலக்ஷன், கமிஷன், கரப்ஷனில் ரோல் மாடல் திமுக, டாஸ்மாக் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதில் ரோல் மாடல் திமுக, குடும்ப ஆட்சி வாரிசு அரசியலில் ரோல் மாடல் திமுக, பொய் வாக்குறுதியிலும் ரோல் மாடல் திமுக.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். இதுதான் ரோல் மாடல். அதேபோல் போட்டோ ஷூட், ஸ்டிக்கர் ஒட்டித் திறப்பதிலே ரோல் மாடல் திமுக.
கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து 10 ஆண்டுகள் இணைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஒரு கருத்தை சொன்னார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரி ஒரு கருத்தை சொன்னார், சாற்றைக் குடித்துவிட்டு சக்கையை வழங்குவதாகச் சொன்னார், அதில் ரோல் மாடல் திமுக.
திமுகவில் தொடர்ந்து நிலையான கூட்டணி இருக்கிறது, அதிமுக அடிக்கடி கூட்டணி மாறுவதாகச் சொல்கிறார்கள். அதிமுக-வைப் பொறுத்தவை கூட்டணியை நம்பியில்லை மக்களை நம்பியிருக்கிறது. திமுக கூட்டணியை நம்பியிருக்கிறது.
மேலும் சில கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருகிறது என்று உதயநிதி சொல்கிறார். ஆக கூட்டணியைத்தான் நம்புகிறார். அதிமுக மக்களோடு கூட்டணி வைத்திருக்கிறது. அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெல்லும், அதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்.
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. அதிமுக அலுவலகம் அமித் ஷாவிடம் உள்ளதாம். அப்படியா இருக்குது? முன்பு திமுகவு-க்குள் குழப்பம் ஏற்பட்டது, இரண்டாகப் பிரிந்தது, உடைந்தது, அம்மா இருக்கும்போது வைகோ வெளியில் போனார், அப்போது வைகோ அறிவாலயத்தை கைப்பற்றும் நிலை உருவானபோது, அதை காப்பாற்றிக் கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசு.
அதிமுக பாஜகவோடு கூட்டணி வைப்பதில் என்ன தவறு? இதுவே 1999 மற்றும் 2001 தேர்தல்களில் திமுக பாஜக-வோடு கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தது. அவர்கள் கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சி, தீண்டத்தகாத கட்சியா..? இது எந்த விதத்தில் நியாயம்?
அதிமுக பாஜக கூட்டணி வைத்ததில் ஸ்டாலினுக்கு நடுக்கம் வந்துவிட்டது. எதிர்த்து நிற்க தெம்பு, திராணி இல்லாமல் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார். ஸ்டாலின் அவர்களே அதிமுக ஆட்சியில் குற்றம் கண்டுபிடித்து சொல்லுங்கள், பதில் சொல்லத்தயார். எங்கள் ஆட்சி பொற்கால ஆட்சி. திட்டமிட்டு கூட்டணி அமைத்தபிறகு விமர்சித்தால் தோல்விதான் உங்களுக்குப் பரிசாக கிடைக்கும்.
கூடலூரில் பல கூட்டங்கள் நடந்திருக்கிறது, ஆனால் இந்த எழுச்சிப் பயணக் கூட்டத்தில்தான் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோன்ற இந்த மக்கள் எழுச்சியே அதிமுக ஆட்சி அமைவதற்கு அச்சாணி.
இன்று 158-வது தொகுதியில் உங்களை சந்திக்கிறேன். 158 தொகுதியிலும் மக்களைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன், எழுச்சி உரையாற்றினேன், உணர்வுகளைப் பார்த்தேன், அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். அதிமுக களத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்திற்குத்தான் போட்டி தமிழகத்தில் நடக்கிறது. இதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- தி.மு.க.வில் உள்ள அனைத்து பதவிகளையும் கருணாநிதி குடும்பத்தினரே அனுபவிக்கின்றனர்.
- காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஒரு கருத்தை சொல்ல, அதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி ஒரு கருத்தை சொல்கிறார்.
ஊட்டி:
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.
கூடலூர் பஸ் நிலையம் அருகே இன்று திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் முதல் இடம் பிடிப்பதற்கு அ.தி.மு.க. தான் காரணம். அ.தி.மு.க ஆட்சியில் ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கையை 54 சதவீதமாக உயர்த்தியது அ.தி.மு.க அரசு தான். கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி, கல்வியில் புரட்சி செய்தது அ.தி.மு.க.
தி.மு.க. 4 ஆண்டு ஆட்சியில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரியாவது கொண்டு வரப்பட்டதா? மத்திய அரசு கொடுக்கவில்லை என்பார்கள். ஆனால் அது தவறு. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம்.
நேற்று உதயநிதி ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசும்போது, நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என்கிறார். அப்படியா செய்து கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் முதல் ரோல் மாடல் தான் ஸ்டாலினின் அரசு. கமிஷன், ஊழலில் ரோல்மாடல் தி.மு.க., குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் மற்றும் ஸ்டிக்கர் ஓட்டி திறப்பதில் ரோல் மாடல் தி.மு.க தான்.
எதிர்கட்சி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் 525 வாக்குறுதிகளை கொடுத்தார். அதில் 98 சதவீதம் நிறைவேற்றியதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அத்தனையும் பொய். அதிலும் நீங்கள் ரோல் மாடல் தான். போட்டோ சூட் நடத்துவதிலும் நீங்கள் தான் ரோல் மாடல்.
கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தி.முக.வோடு அங்கம் வகிப்பதாக அவர்கள் கூறி வருகின்றனர். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஒரு கருத்தை சொல்ல, அதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி ஒரு கருத்தை சொல்கிறார். சாறை முழுவதுமாக குடித்து விட்டு சக்கையை வழங்குகிறார்கள் என தெரிவித்து இருந்தார்.
உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலினையும், ஸ்டாலின் உதயநிதியையும் புகழ்ந்து பேசுகிறார்கள். இவர்கள் போதாது என்று இப்போது துர்கா ஸ்டாலினும் வந்து விட்டார். அவரும் ஸ்டாலினை புகழ்கிறார். இவர்களை நாட்டு மக்கள் புகழ்ந்து பேசவில்லை. குடும்ப மக்கள் தான் அவர்களை புகழ்ந்து பேசிக் கொள்கின்றனர்.
தி.மு.க.வில் உள்ள அனைத்து பதவிகளையும் கருணாநிதி குடும்பத்தினரே அனுபவிக்கின்றனர். தி.மு.க. குடும்ப கட்சி. கருணாநிதி குடும்பம் இருக்கும் வரை தி.மு.க.வில் யாரும் உயர்ந்த பதவிக்கு வர முடியாது. உழைப்பை சுரண்டும் குடும்பம் ஸ்டாலின் குடும்பம்.
நாட்டில் உள்ள எந்த கட்சியாலாவது இப்படி குடும்ப ஆட்சி நடப்பதை பார்க்க முடிகிறதா? கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி தி.மு.க.வில் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் வரமுடியும். இப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? ஒரு குடும்பம் 8 கோடி மக்களை சுரண்டி பிழைப்பதற்கு நாம் அனுமதிக்கலாமா? இதற்கு ஒரு முடிவு கட்டுவிங்களா? என மக்களை பார்த்து கேட்டார்.
செல்வப்பெருந்தகை பல கட்சியில் இருந்து வந்தவர். இவர் பல கட்சிகளுக்கு போய்விட்டு வந்து விட்டார். காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள் ஆட்சியில் பங்கு கேட்டு பேசி வருகின்றனர். ஆனால் இவர் சொல்கிறார் ராகுல்காந்தி ஆட்சியில் பங்கு கேட்க சொல்லவில்லை என சொல்கிறார். உண்மையில் ஒரு காங்கிரஸ் தொண்டனாக இருந்திருந்தால் அந்த எண்ணம் இவருக்கு வந்திருக்குமா?. அவர் தி.மு.க.வை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியை வளர்க்க பார்க்கவில்லை.
செல்வப்பெருந்தகை காங்கிரசுக்கு விசுவாசமாக இல்லை. தி.மு.க.வுக்கு தான் விசுவாசமாக உள்ளார்.
தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் பிளவு வந்துவிட்டது. ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தி.மு.க கூட்டணி நிலையான கூட்டணியாக உள்ளது. ஆனால் அ.தி.மு.க அடிக்கடி கூட்டணி மாறுவதாக சொல்கிறார்கள்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை எப்போதும் கூட்டணியை நம்பி இருந்தது இல்லை. ஆனால் தி.மு.க எப்போதும். கூட்டணியை நம்பி தான் இருக்கிறது. மக்கள் எங்களோடு கூட்டணி வைத்துள்ளார்கள். 2026 தேர்தலில் அ.தி.மு.க வெல்லும். ஆட்சிக்கு வரும். அதனை ஸ்டாலின் பார்க்க தான் போகிறார்.
மக்களின் எழுச்சியே எங்களது ஆட்சி வருவதற்கான அடையாளம். தேர்தலில் அ.தி.முக. தான் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்துக்கு தான் தற்போது மற்ற கட்சிகள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன.
அ.தி.மு.க. பா.ஜ.க.வின் அடிமை என ஸ்டாலின் பேசுகிறார். தலைவன் மட்டும் அல்ல தொண்டன் கூட யாருக்கும் அடிமை இல்லை. நாங்கள் சொந்த காலில் நிற்கிறோம்.
உங்களை போன்று கூட்டணியை நம்பி இல்லை. கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. தேர்தல் நேரத்தில் வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என்பதற்கே கூட்டணி அமைக்கிறோம். உங்களை போன்று பல கட்சிகளை கூட்டணியில் வைத்து அவர்களை அடிமையாக்க நாங்கள் விரும்பவில்லை. எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் சுதந்திரமாக உள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை தி.மு.க. தான் நியமிக்கிறது. தி.மு.க. யாரை பரிந்துரை செய்கிறதோ அவரை தான் காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கிறது. கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி தி.மு.க.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செ.ம.வேலு சாமி, மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






