search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த காங்கிரஸ் பாத யாத்திரைக்கு போலீஸ் அனுமதி மறுப்பு- வாக்குவாதம்
    X

    செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த காங்கிரஸ் பாத யாத்திரைக்கு போலீஸ் அனுமதி மறுப்பு- வாக்குவாதம்

    • சென்னையில் ஜிம்கானா கிளப் காமராஜர் சிலை முன்பு இருந்து செல்வப்பெருந்தகை தலைமையில் பாத யாத்திரை செல்ல முடிவு செய்தனர்.
    • போலீஸ் அனுமதி மறுத்தால் மறியலில் ஈடுபடவும் காங்கிரசார் தயாரானார்கள்.

    சென்னை:

    காந்தி பிறந்த நாளான இன்று வெறுப்பு அரசியலை கண்டித்தும் ராகுல் காந்தியை விமர்சிப்பதை கண்டித்தும் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று பாத யாத்திரை நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து இருந்தார்.

    சென்னையில் ஜிம்கானா கிளப் காமராஜர் சிலை முன்பு இருந்து செல்வப்பெருந்தகை தலைமையில் பாத யாத்திரை செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று காலை 7 மணியில் இருந்து அந்த பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், அண்ணா சாலை வழியாக பாத யாத்திரை செல்ல அனுமதி இல்லை என்றனர்.

    இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி.க்கள் விஷ்ணு பிரசாத், சுதா, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அங்கு வந்தனர்.

    அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் அனுமதி இல்லை என்றும் அதற்கு பதிலாக ரம்டா ஓட்டல் அருகே சென்று அங்கிருந்து புறப்படும்படியும் தெரிவித்தனர்.

    இதை ஏற்க காங்கிரசார் மறுத்தனர். இதனால் காங்கிரசாருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

    போலீஸ் அனுமதி மறுத்தால் மறியலில் ஈடுபடவும் காங்கிரசார் தயாரானார்கள். அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    கடைசியில் ஒரு வழியாக மூன்று மூன்று பேராக செல்ல அனுமதித்தனர். 9.30 மணியளவில் பாதயாத்திரை தொடங்கியது. அங்கிருந்து மே தின பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை, ரமடாஓட்டல், புதுப்பேட்டை லான்ஸ் கார்டன் வழியாக எழும்பூர் அருங்காட்சியகம் அருகே நிறைவடைந்தது.

    பாத யாத்திரையில் மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, அகரம் கோபி, மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜ சேகர், டில்லி பாபு, முத்தழகன், அடையார் துரை மற்றும் பி.வி.தமிழ் செல்வன், திருவான்மியூர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×