search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    அயோத்தி தீர்ப்புக்காக கடவுளிடம் பிரார்த்தித்தேன் - சந்திரசூட்டை விமர்சித்த காங்கிரஸ் தலைவர்
    X

    'அயோத்தி தீர்ப்புக்காக கடவுளிடம் பிரார்த்தித்தேன்' - சந்திரசூட்டை விமர்சித்த காங்கிரஸ் தலைவர்

    • மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
    • கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட தீவிர இந்து அமைப்பினரால் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் மத்திய பாஜக அரசின் முன்னெடுப்பில் ரூ.1,800 கோடி பொருட்செலவில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் உள்ளது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் சூழ இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் இப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்பிறகே 2020 இல் பாஜகவால் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    தற்போது இந்த தீர்ப்பை வழங்கிய அனுபவம் குறித்து தனது சொந்த ஊரான புனேவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சந்திரசூட் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சில வழக்குகளில் ஒரு முடிவுக்கு வரவே முடியாதபடி இருக்கும். அப்படித்தான் ராம ஜென்மபூமி - பாபர் மசூதி பிரச்சனை [குறித்த வழக்கு] மூன்று மாதங்களாக என் முன் இருந்தது.

    அப்போது தினமும் நான் கடவுளின் சிலைக்கு முன்னாள் அமர்ந்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லும்படி வேண்டினேன். என்னை நம்புங்கள், உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் நிச்சயம் அவர் ஒரு வழியை காண்பிப்பார் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் இந்த கருத்தை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காண கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். ஒரு சாமானியனுக்கு உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பணம் இல்லாமல் நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்திருந்தால் இந்த பிரச்சனை தீர்ந்திருக்கும். ED, CBI மற்றும் IT ஆகியவற்றின் தவறான பயன்பாடு நிறுத்தப்பட்ட வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்திருந்தால் நிறுத்தப்பட்டிருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×