search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    போலி ஆன்லைன் வர்த்தகம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி- ரூ.2 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்
    X

    போலி ஆன்லைன் வர்த்தகம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி- ரூ.2 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்

    • பல்வேறு தவணைகளில் ரூ.18 லட்சத்தை முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.
    • போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோகிலா. இவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார்.

    இதனை நம்பி கோகிலாவும், பங்கு சந்தையில் முதலீடு செய்ய மர்ம நபர் அனுப்பிய படிவத்தை நிரப்பி அனுப்பியுள்ளார். பின்னர் பெங்களூருவில் உள்ள குளோபல் சாப்டவேர் சொல்யூஷன் என்ற நிறுவனம் கோகிலாவை தொடர்பு கொண்டு பங்கு சந்தையில் ஆட்டோ மெட்டிக் ரோபோடிக் சாப்ட்வேர் மூலம் டிரேடிங் செய்து சம்பாதிக்கலாம் என கூறியுள்ளது.

    இதை நம்பி கோகிலா கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு தவணைகளில் ரூ.18 லட்சத்தை முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து கோகிலா, கடந்த ஜூலை மாதம் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி ஆகியோர் தலைமையின் கீழ் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது கடந்த 2 மாதங்களாக பல்வேறு இணைய வழி தொழில் நுட்ப உதவியுடன் பணம் பரிவர்த்தனை, வாடஸ்-அப் மற்றும் இணையதளத்தில் உள்ள தகவல்களை ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் பெங்களூரு மற்றும் நெய்வேலியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையில் தனிப்படை பெங்களூரு விரைந்தது. இந்நிலையில் மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த தூபைல் அகமது, பிரவீன், முகமது அன்சார், நெய்வேலியை சேர்ந்த ஜெகதீஷ், ராமச்சந்திரன். பிரேம் ஆனந்த், விமல் ராஜ் ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை, புதுச்சேரிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், துபாயை தலைமை இடமாக கொண்டு குளோபல் சாப்ட்வேர் சொல்யூஷன் என்ற நிறுவனம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இயங்கி வருவது தெரியவந்தது.

    இந்தியா. ஹாங்காங், தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் கால் சென்டர்கள் அமைத்து, 200-க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி மோசடி செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இதில் பணிபுரிந்த அனைவரும் பொது மக்களை ஏமாற்றுவது தெரிந்தே வேலை செய்துள்ளனர். மேலும், இந்த மோசடிக்கு நெய்வேவியை சேர்ந்த நவ்ஷத் கான் அகமது என்பவர் தலைவராக இருந்துள்ளார். அவருடைய மனைவி சவுமியா, நாமக்கல்லில் உள்ள கால் சென்டருக்கு உரிமையாளராக இருந்துள்ளார். இதில் தொடர்புடைய மேலும் மோசடி கும்பலின் தலைவன் நவ்ஷத் கான் அகமது மற்றும் அவனது கூட்டாளிகள் 4 பேர் தற்போது துபாயில் உள்ளனர்.

    பொதுமக்களை ஏமாற்ற பயன்படுத்திய கால் சென்டர்கள் பதிவு செய்யப்பட்ட இடத்தில் இயங்கவில்லை என்றும், அவர்களை கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக வெளிநாட்டு இன்டர்நெட்டை (வி.பி.என்.) பயன்படுத்தி வந்துள்ளனர்.

    மேலும் பொதுமக்களை ஏமாற்றிய பணத்தில் பெங்களூருவில் சொகுசு பங்களா, ஏற்காடு, புதுச்சேரி மற்றும் ஆரோவில், கொடைக்கானலில் ரிசார்ட் வாங்கி உள்ளனர். இந்தியாவில் மட்டும் அவர்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர். அந்த சொத்துக்களை போலீசார் முடக்கம் செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 4 சொகுசு கார், 1 பைக், வேன், 100-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ஊழியர்களின் கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    அவர்களிடம் இருந்து 3 வங்கி கணக்குகளில் மட்டும் கடந்த 9 மாதங்களில் ரூ.56 கோடி மோசடி செய்யப்பட்ட பணம் வந்துள்ளது. இதில் ரூ.27 கோடி உள்ள ஒரு வங்கி கணக்கை மட்டும், இந்தியா முழுவதும் உள்ள இணையவழி போலீசார் முடக்கி உள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து அனைத்து மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இவர்கள் இந்தாண்டு மட்டும் இந்தியா முழுவதும் உள்ள 1,57,346 நபர்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளனர். அதில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர். தொடர்ந்து, அங்கு பணி புரிந்த ஊழியர்களையும் இவ்வழக்கில் சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் மோசடி கும்பலின் தலைவன் நவ்ஷத் கான் அகமது மற்றும் கூட்டாளிகளை கைது செய்ய புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடியுள்ளனர். விரைவில் அவர்கள் உதவியுடன் துபாயில் பதுங்கியுள்ள நவ்ஷத் கான் அகமது மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    Next Story
    ×