search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதலமைச்சர் ரங்கசாமியை முற்றுகையிட்ட அரசு அதிகாரிகள்
    X

    முதலமைச்சர் ரங்கசாமியை முற்றுகையிட்ட அரசு அதிகாரிகள்

    • சமூக அமைப்பினரின் இந்த போராட்டம் புதுச்சேரி குடிமைப்பணி அதிகாரிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • முதலமைச்சர் ரங்கசாமியை அரசு அதிகாரிகள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அரசிதழ் பதிவு பெறாத குரூப் 'பி' பணியிடங்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு இந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதைய இந்த அறிவிப்புக்கு அரசு சார்பு செயலாளர்கள் 2 பேர் தான் காரணம் என்று கூறி அவர்களது வீடுகளை சமூக அமைப்பினர் முற்றுகையிட்டு ஒப்பாரி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சமூக அமைப்பினரின் இந்த போராட்டம் புதுச்சேரி அரசு குடிமைப்பணி அதிகாரிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தனிப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவது குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் அதிருப்தி தெரிவித்துக்கொண்டனர்.

    இந்த நிலையில் குடிமைப்பணி அதிகாரிகள் சங்க தலைவரான தொழில் துறை இயக்குனர் ருத்ர கவுடுவுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது இதுதொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து முறையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு முதலமைச்சர் ரங்கசாமியை முற்றுகையிட்டனர்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமியிடம் அரசின் அறிவிப்புக்காக தனிப்பட்ட அதிகாரிகளின் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவது என்பது அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதிகாரிகளின் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    ஓய்வு பெற குறுகிய காலமே உள்ள அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் விருப்ப ஓய்வு பெறும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் கூறினார்கள். தங்களுக்கும் குழந்தைகள் இருப்பதால் அவர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

    எனவே அதிகாரிகள் வீடுகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகள் வீடுகள் முன்பு போராட்டம் நடத்தியவர்கள் குறித்து போலீசாரை அழைத்து பேசுவதாகவும், அதிகாரிகளுக்கு எப்போதும் அரசு பாதுகாப்பாக இருக்கும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார். முதலமைச்சர் ரங்கசாமியின் உறுதிமொழியை ஏற்று அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    முதலமைச்சர் ரங்கசாமியை அரசு அதிகாரிகள் முற்றுகையிட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×