search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ராகு-கேது தோஷம் நீக்கும் பரிகாரங்கள்
    X

    ராகு-கேது தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

    • கர்ம வினைப் பதிவை முழுமையாக அனுபவிக்க வைப்பவர்கள் ராகு-கேதுக்கள்.
    • ராகு தான் அமர்ந்த பாவகத்தின் செயலையே பிரம்மாண்டப்படுத்தும்.

    மனித குலத்தையே அச்சுறுத்தலோடு, பதட்டத்தோடு வைத்திருக்கும் ஒரு தோஷம் உள்ளது எனில் அது ராகு-கேது தோஷமாகும்.ஒரு ஜாதகத்தில் உள்ள பன்னிரெண்டு கட்டங்களில் ஏதேனும் இரண்டு கட்டங்களை தன் கட்டுக்குள் வைத்துக் கர்ம வினைப் பதிவை முழுமையாக அனுபவிக்க வைப்பவர்கள் ராகு-கேதுக்கள். ராகு தான் அமர்ந்த பாவகத்தின் செயலையே பிரம்மாண்டப்படுத்தும்.

    கேது சுருக்கும். ராகு-கேதுவினால் தான் ஒருவர் மிகப் பெரிய யோகத்தையோ அல்லது அவயோகத்தையோ சந்திக்கின்றார்கள். 12 பாவகங்களில் 8 பாவகங்களில் ராகு, கேதுகள் அமர்ந்த கர்ம வினைப் பதிவுக ளுக்கான விளக்கங்களை கடந்த வாரம் பார்த்திருந்தோம். மீதம் உள்ள பாவகங்களை இப்போது பார்ப்போம். இதில் கொடுக்கப்பட்ட பலன்கள் அனைத்தும் அவரவர் ஜென்ம லக்னத்திற்கே உரியது. ராசிக்கு அல்ல.

    9-ல் ராகு 3-ல் கேது

    தந்தை மகனை பிரித்தல், ஒருவரை ஆதரவிலக்கச் செய்தல், ஒருவரின் உயர் கல்விக்கு தடை செய்தவர்கள், குரு துரோகம், குரு தட்சனையில் குறை வைப்பது , பிற மதத்தை இழிவு படுத்துவது போன்ற குற்றம் செய்தவர்களுக்கு இந்த கிரக அமைப்பு ஏற்படும்.

    அதனால் இந்த ஜென்மத்தில் கற்ற வித்தை பலனில்லாமல் போவது , படிப்பிற்கு தொடர்பில்லாத வேலை யின் மை, முறையான அங்கீகார மின்மை, மரியாதை குறைவு ஆகியவை ஏற்படும். கோச்சாரத்தில் 9-ல் ராகு 3-ல் கேது வரும் போது தந்தை, தந்தை வழி உறவினர்களுட ன்கருத்து வேறுபாடு, பூர்வீகத்தை விட்டு வெளியேறும் நிலை, பதவி இழப்பு ஏற்படும்

    பரிகாரம்

    சித்தர்கள் ஜீவ சமாதியை வழிபாடு செய்வது நல்ல பலன் தரும் . காசி, கயா, ராமேஸ்வரம், தேவிபட்டினம் போன்ற புனித தலங்களில் நீத்தார் கடன் தீர்க்க வேண்டும். அமாவாசை நாட்களில் உணவு, தண்ணீர் தானம் செய்து வரவேண்டும்.

    10-ல் ராகு 4-ல் கேது

    நில மோசடி, தவறான முறையில் அபகரித்த பொருள், தவறான நடத்தை,ஒருவரின் தவறான நடத்தைக் காரணமாக இருப்பவர், தவறான கர்ம வினைப் பரிகாரம் செய்து வைத்தல், நம்பிக்கை மோசடி ஆகிய வற்றுக்கான வினைப் பதிவு.

    இந்த அமைப்பு உடையவ ருக்கு ஆரம்பக் கல்வி தடை, உடல் நலக் கோளாறு , சரி செய்ய முடியாத வாஸ்த்து குறைபாடு உள்ள வீட்டில் வாழும் நிலை அல்லது விருத்தி இல்லாத வீடு, மனை வாங்கும் நிலை ஏற்படும். கோச்சாரத்தில் 10-ல் ராகு, 4-ல் கேது வரும் போது ஒருவர் தனது தந்தைக்கு கர்ம காரியம் செய்ய முடியாத நிலை, தவறான நில முதலீடு , பூர்வீக சொத்து அரசால் அபகரிக்கப்படுதல் போன்ற நிலை உருவாகும்.

    பரிகாரம்

    முறையான பட்டா இல்லாத நிலத்தை பட்டா செய்து கொள்ள வேண்டும். வாஸ்து குறைவான இடத்திற்கு வாஸ்து சாந்தி பூஜை செய்ய வேண்டும். ஆரம்ப கல்வி பயிலும் குழந்தைகளுக்கு புத்தகம், நோட்டு தானம் செய்ய வேண்டும். ஊரின் மேற்கு பகுதியில் உள்ள புற்றை வழிபாடு செய்ய வேண்டும்.

    11-ல் ராகு 5-ல் கேது

    கருச்சிதைவு செய்தவர்கள், அதற்கு காரணமாக இருந்தவர்கள், கோவில் சிலையை திருடியவர்கள், புற்றை இடித்தவர், ஒருவரை மனநோயாளியாகச் செய்து அதன் மூலம் பொருள் ஈட்டியவர்களுக்கு, நல்ல காதலை பிரித்தவர்களுக்கு இந்த அமைப்பு ஏற்படும்.

    இதன் பலனாக இந்த பிறவியில் ஆசைப் பட்டதை அடைய முடியாமை, குழந்தையின்மை, குழந்தைகளை பிரியும் நிலை , பூர்வீகத்தை விட்டு வெளியேறுதல், உழைப்பிற்குரிய ஊதியமின்மை ஏற்படும். கோச்சாரத்தில் 11-ல் ராகு 5-ல் கேது வரும் போது குழந்தைகளால் அவமானம், பூர்வீகத்தை விட்டு வெளியேறும் நிலை ,தியாகியாக வாழ வேண்டிய நிலை உருவாகும்.

    பரிகாரம்

    குலதெய்வ வழிபாட்டை வலிமைப்ப டுத்துவதுடன், சர்ப்பம் உள்ள புற்றை வழிபாடு செய்து வர வேண்டும்.

    12-ல் ராகு 6-ல் கேது

    தனது முரட்டு பிடிவாதத்தால் ஒருவரை அடிமைப்படுத்துவது, காயம் ஏற்படுத்துவது , நோய் ஏற்படக் காரணமான உணவுப் பொருள் விற்பவர் , நோய் பரவக் காரணமாக இருந்தவர்களுக்கு இந்த கிரக அமைவு ஏற்படும்.

    அதன் பலனாக இந்த பிறவியில் இனம் புரியாத நோய்கள், இனம் புரியாத பிரச்சினைகள் உரிமையை நிலை நாட்ட முடியாமை ஏற்படும். கோச்சாரத்தில் 6 ல் கேது 12ல் ராகு வரும் போது நோய் தாக்கம், கடன் தொல்லை, வம்பு வழக்கு,ஈடு செய்ய முடியாத இழப்பு இருக்கும்.

    பரிகாரம்

    விநாயகர், லட்சுமி நரசிம்மர் வழிபாடு நல்ல பலன் தரும். ஆசைக்கு அளவு கோல் வைத்திருப்பவருக்கு இந்த கிரக அமைப்பு பாதிப்பை ஏற்படுத்தாது. மேலே கூறிய அனைத்தும் தசா காலங்களில் அதிகமான பலனையும் புத்திகாலங்களில் மிதமான சுப, அசுப பலனைத் தருகின்றன. மற்ற நேரங்களில் எந்த பாதிப்பும் நேராது. கோச்சார கிரகங்கள்

    தசா புத்தியுடன் தொடர்பு பெறும் போது மட்டுமே சம்பவம் நடக்கும். அத்துடன் 9ம் அதிபதி பெற்ற வலிமைக்கு ஏற்ப சுப, அசுப தன்மையில் மாற்றம் இருக்கும். உரிய பரிகாரங்களை கடைபிடிக்க மேன்மையான பலன் உண்டு.

    மரபியலும் ராகு-கேதுவும்

    ஒருவரின் தந்தை மற்றும் தாய்வழி முன்னோர்களின் பாவம் மற்றும் புண்ணியத்தின் அடிப்படையிலேயே ஜாதகத்தில் ராகு/கேதுக்களின் நிலைப்பாடு இருக்கும்.மனிதர்களின் மரபியல் தன்மையான பாவ புண்ணியங்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்பவர்கள். இவர்கள் தான்.

    ஒரு ஆன்மா பல்வேறு பிறப்புகளில் செய்த வினைப் பதிவுகள் அனைத்தையும் சேமித்து வைக்கும் பெட்டகமாக விளங்குவதும், ஒவ்வொரு பிறப்பிலும் வேறு வேறு உடலில் இருக்கும் ஆன்மாவிற்கு அதன் அலைவரிசைக் கேற்ப வினைகளின் நன்மை தீமைகளை அனுப்பி அவ்வுடலை அனுபவிக்க செய்பவர்கள்.இவர்கள்.

    நெருப்பு

    மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று நெருப்பு ராசியில் உள்ள ராகுவினால் ஏற்படும் சுப அசுப பலன்கள் ஜாதகரை வேகமாக சென்றடையும். அதனால் ஏற்படும் பாதிப்பு வாழ்நாளில் சில குறிப்பிட்ட காலத்தை மட்டும் வழி நடத்தும். சுப, அசுபத்தின் சுவடை ஜாதகர் உணரும் முன்பே நீங்கி விடும்.வருவதும் தெரியாது. போவதும் தெரியாது.

    பரிகாரம்

    நெருப்பு ராசியில் உள்ள ராகு கேதுவின் பாதிப்பைக் குறைக்க மலை மலை சார்ந்த இடங்கள், நெருப்பு தத்துவத்தை உணர்த்தும் கோவில்களுக்கு செல்ல வேண்டும். திருவண்ணா மலை செல்லலாம். அல்லது குல இஷ்ட தெய்வத்திற்கு தீபம் போடுதல், விளக்கேற்றுதல் , ஹோமங்கள் நடத்துதல் , தீச்சட்டி எடுத்தல் , அக்னி குண்டம் இறங்குதல் போன்றவை கள் மூலம் பாதிப்பைக் குறைக்க முடியும்.

    நிலம்

    ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று நில ராசியில் உள்ள ராகு கேதுவினால் ஏற்படும் அனைத்து இன்ப துன்பங்களும் நிதானமாக ஜாதகரை வழிநடத்தும். நீண்ட காலத்திற்கு நிலையாக இருக்கும். ஏன், வாழ்நாள் முழுவதும் கூட வழி நடத்தும்.

    பரிகாரம்:

    காடு, காடு சார்ந்த இடங்களில் உள்ள கோவில்களுக்கு பாதயாத்திரை செல்லலாம். சபரி மலை ஸ்ரீ அய்யப்பன் வழிபாடு. நிலத் தத்துவ கோவிலான காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் சென்று வழிபடலாம். அல்லது கோவில் உலவாரப்பணி, பொதுப் பணிகள், மரம் வளர்த்தல், முளைப்பாரி கட்டி வழிபடுதல் போன்றவற்றில் ஈடுபடலாம்.

    காற்று

    மிதுனம், துலாம், கும்பம் ஆகிய காற்று ராசியில் உள்ள ராகுவினால் ஏற்படும் அனைத்து நேர்மறை, எதிர்மறை பலன்க ளும் விருந்தினர் போல் வரும் போகும். மீண்டும் வரும். மீண்டும் போகும். இந்த ராசிகளில் நிற்கும் ராகு, கேது வினால் உருவாகும் பலன்களை எப்பொழுது வரும் எப்படி வரும் என்று யூகிக்க முடியாது.

    பரிகாரம்

    காற்று ராசி தத்துவத்தை உணர்த்தும் வாயு தலமான ஸ்ரீ காளஹஸ்தி சென்று வரலாம் அல்லது காரியசித்தி ஸ்தோத்திர பாராயணம் செய்தல் , ராம நாம பாராயணம் அல்லது எழுதுதல், வாசனை திரவியங்கள், சாம்பி ராணி, ஊதுபத்தி வழிபாட்டிற்கு பயன்படுத்துதல் போன்ற வற்றால் பயன் பெறலாம்.

    நீர்

    கடகம் ,விருச்சிகம், மீனம் ராசியில் உள்ள ராகு, கேதுவினால் ஏற்படும் அனைத்து நன்மை தீமைகளும் எதிர்பாராத விதத்தில் வந்தடையும். வந்தால் ஜாதகரை நன்கு உயர்த்தும் அல்லது பாதாளத்திற்கு கொண்டு சென்று விடும்.

    பரிகாரம்:

    நீர் ஸ்தலமான திருவானைக்காவல் கோவில் சென்று வழிபடலாம். அல்லது நீர் நிலைகள், கடல். நதி, ஆறு, குளங்களுக்கு சென்று நீராடலாம். அல்லது இஷ்ட குல தெய்வத்திற்கு, பால், பன்னீர், மஞ்சள் நீர் போன்றவற்றால் அபிசேகம் செய்யலாம்.

    ஜாதகட்டத்தில் தனக்கென்று சொந்த வீடு இல்லாத ராகு கேதுக்கள் தாம் நின்ற பாவகத்தினை சொந்த வீடாக்கி தனது பலன்களை வெளிப்படுத்துகிறது.

    ஒருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் பாதிப்பு ஜாதகரின் உயிர் அல்லது பொருள் காரகத்து வதை பாதிக்கும். வீரியமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கிரகம் ராகு கேது எந்த பாவகத்தில் உள்ளதோ அந்த பாவக ரீதியான உயிர் காரகத்துவம் மற்றும் பொருள் காரகத்துவத்தையும் சிதைக்கும் வல்லமை உண்டு. அதே நேரத்தில் அஷ்டம பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறாத தோஷம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    அஷ்டமபாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறும் தோஷம் ஜாதகரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும். சர்ப்ப தோஷத்தால் ஏதேனும் அதிகப்படியான பாதிப்புகள் . இருந்தால் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் சென்று வர வேண்டும். சங்கரநயினார் கோவில். இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன்.

    வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்துப் பிறவிப் பயனை அடையவேண்டிய அற்புத திருத்தலம் சங்கரன் கோவில் சிவன் சன்னதி எதிரில் உள்ள பஞ்சநாக சிலைகள் மீது பால் அபிஷேகம் செய்தால் நாகதோஷம் விலகும்.

    இத்தலத்தில் சர்ப்ப விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை (4.30 முதல் 6.00) ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்தால் ராகு,கேது தோஷம் நீங்கும். வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை இருந்தால், சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.

    Next Story
    ×