search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    3 பேர் கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு: நெல்லை கோர்ட்டில் வழங்கப்பட்ட 3-வது தூக்கு தண்டனை
    X

    3 பேர் கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு: நெல்லை கோர்ட்டில் வழங்கப்பட்ட 3-வது தூக்கு தண்டனை

    • 11 குற்றவாளிகளில் 8 பேர் மட்டுமே நீதிபதி முன்பு ஆஜராகினர்.
    • கடந்த 2016-ம் ஆண்டு நெல்லையில் கல்பனா என்ற கர்ப்பிணி பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த உடப்பன்குளத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி ஒரு சமுதாயத்தினர், மற்றொரு சமுதாயத்தினரின் தெருவில் பட்டாசு வெடித்தனர்.

    இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை முன்விரோதமாக மாறி கடந்த 28-5-2014 அன்று ஒருவரை மற்றொரு சமூகத்தினர் சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் எழுந்தது. இதற்கு பழிவாங்கும் நோக்குடன் அதே ஆண்டு 1-6-2014 அன்று உடப்பன்குளம் கீழ தெருவை சேர்ந்த காளிராஜ் (வயது 55), கோவை துடியலூரை சேர்ந்த வேணுகோபால்(42), முருகன்(42) ஆகியோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் உடப்பன்குளத்தை சேர்ந்த 25 பேரை வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 6 பிரிவுகளில் கைது செய்தனர். வழக்கு விசாரணை நெல்லை 2-வது கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 24-ந்தேதி நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பொன்னுமணி, குட்டிராஜ், குருசாமி, உலக்கன், தங்கராஜ், வேலுச்சாமி மகன் கண்ணன், பால முருகன், முத்துகிருஷ்ணன், வெளியப்பன் மகன் கண்ணன், வக்கீலான சுரேஷ் உள்ளிட்ட 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு நேற்று இரவு தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில் பொன்னுமணி, குருசாமி, காளிராஜ், முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குட்டிராஜ், கண்ணன், மற்றொரு கண்ணன், பாலமுருகன், உலக்கன் ஆகியோருக்கு 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வெளியப்பன் மகன் கண்ணன், வக்கீல் சுரேஷ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் விதிக்கப்பட்டது. மேலும் 11 பேருக்கும் அபராதங்களும் விதித்து தீர்ப்பளித்த பின்னர் நீதிபதி சுரேஷ் குமார் பேனாவை உடைத்தார்.

    காலையிலேயே தீர்ப்பை வாசித்துவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 11 குற்றவாளிகளில் 8 பேர் மட்டுமே நீதிபதி முன்பு ஆஜராகினர். இதனால் மாலையில் அறிவிப்பதாக தீர்ப்பை தள்ளி வைத்தார். தீர்ப்பு தங்களுக்கு எதிராக இருக்கும் என்பதை அறிந்த தூக்கு தண்டனை குற்றவாளிகளுக்கு நேற்று காலையில் திடீரென உயர் அழுத்தம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    எனினும் நீதிபதி உத்தரவின்பேரில் அவர்களும் மாலையில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இதேபோல் சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு காலையில் கோர்ட்டுக்கு வராத நிலையில், நீதிபதி உத்தரவின்பேரில் அவரும் மாலையில் நேரில் ஆஜராகினார்.

    இந்த நிலையில் தான் பரபரப்பான தீர்ப்பை வழங்க அவர் தயாரானார். அப்போது புகார்தாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. அவர்கள் இன்று நல்லபடியாக தீர்ப்பு வரவேண்டும் என்பதற்காக கோவிலுக்கு சென்று விட்டனர். எனவே தீர்ப்பை வாசித்துவிடுமாறு அரசு வக்கீல் கந்தசாமி தெரிவித்தார்.

    ஆனால் வழக்கு தீர்ப்பை அவர்கள் பார்க்கவேண்டும். வீடியோ கால் செய்து பார்க்க செய்யுங்கள். அதன்பின்னர் நெல்லையப்பர் கோவிலில் வந்து சாமி கும்பிட சொல்லுங்கள் என்றார். எனினும் அதற்கான வழிவகை இல்லா காரணத்தினால் தீர்ப்பை வாசிக்க நீதிபதி முடிவு செய்தார்.

    அப்போது குற்றவாளிகள் நீதிபதியை நோக்கி இருகரம் கூப்பியபடி, கதறி அழுதனர். எங்களுக்கு இதில் தொடர்பில்லை என்றனர். ஆனால் உங்கள் மீதான குற்றங்கள் நிருபிக்கப்பட்டு விட்டது. பேசாமல் இருங்கள் என்று நீதிபதி கூறிவிட்டார். இந்த தீர்ப்பை கேட்டு புகார் தாரரின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தண்டணை பெற்றவர்களின் குடும்பத்தினர் கதறி துடித்தனர். தொடர்ந்து கண்ணீருடன் குற்றவாளிகள் இரவோடு இரவாக பாளை மத்தியச்சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

    நெல்லை கோர்ட்டில் ஏற்கனவே 2 வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ளது 3-வது தூக்கு தண்டனையாகும். கடந்த 2016-ம் ஆண்டு நெல்லையில் கல்பனா என்ற கர்ப்பிணி பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு 2-வது கூடுதல் அமர்வு நிதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நிதிபதி அப்துல் காதர் குற்றம் சாட்டப்பட்ட தம்பதிகளான சங்கரநாராயணன், செல்லம்மாளுக்கு தூக்கு தண்டனை வழங்கினார். இதேபோல கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி நெல்லை பேட்டையை சேர்ந்த 5 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டான். இந்த வழக்கு முதலாவது கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகம் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்தார். தற்போது 3-வது முறையாக தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் 150 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு விவரங்கள் அடங்கிய ஆவணத்தை குற்றவாளிகள் 11 பேருக்கும் கோர்ட்டு ஊழியர்கள் வழங்கினர்.

    Next Story
    ×