என் மலர்
தென்காசி
- தி.மு.க. ஆட்சியில் வீட்டிற்கும், தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெரிய கேடு ஏற்பட்டுள்ளது.
- தமிழகத்தில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகமாக உள்ளது.
புளியங்குடி:
தென்காசி மாவட்ட பா.ஜ.க. கட்சி சார்பில் புளியங்குடியில், தீய சக்தியை வேரறுப்போம் என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
பொதுக் கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை தாங்கினார். பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-
தென்காசி மாவட்டம் பூலித்தேவன், ஒண்டிவீரன், வெண்ணிகாலாடி, வாஞ்சிநாதன், பாரதியார் போன்றவர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும்.
தேசியவாதிகள் நிறைந்த மண் தென்காசி மண். தற்போது இந்த மாவட்டத்தில் கனிம கொள்ளை நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் வீட்டிற்கும், தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெரிய கேடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கல்வித்தரம் அதல பாதாளத்தில் உள்ளது. கண்ணியமான ஆசிரியர்கள் வாழ்ந்த பூமி இது. ஆனால் இந்த ஆட்சியில் தமிழகத்தில் 238 ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர்.
மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக பொய் பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும், தேசிய கல்விக் கொள்கையையும் ஏற்க மறுக்கின்றனர்.
கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அருமையான திட்டங்களை ஏற்க மறுக்கின்றனர். தமிழகத்தில் ஒரு நவோதயா பள்ளி கூட இயங்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்போது நவோதயா பள்ளிகள் மீண்டும் அமைக்கப்படும். அந்த பள்ளிகளுக்கு கர்மவீரர் காமராஜர் பெயர் சூட்டப்படும். மாவட்டம் தோறும் 2 நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.
புளியங்குடியில் முக்கியமான விவசாயப் பயிரான எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி பெருகி விவசாயம் மேம்படும்.
தென்காசி மாவட்டத்தில் கனிம வளம் தொடர்ந்து களவாடப்பட்டு வருகிறது. பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் சூழலில் நீர் மேலாண்மைக்கும், விவசாயத்திற்கும், கல்விக்கும், தொழில் முனைவுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுடன், ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகமும் நடைபெறும்.
பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும் பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. வருகிற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது தமிழக பெண்களுக்கு உரிமை தொகையாக ரூ.2,500 வழங்கப்படும்.
2026 தேர்தல் அல்ல. அது ஒரு புரட்சி. தலை குனிந்த தமிழகத்தை மீண்டும் தலை நிமிர செய்யப்போகும் கட்சி பா.ஜ.க. 2026 தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கட்சி புரட்சியை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2023ம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை.
- இந்தியாவில் நவோதயா பள்ளி இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் பாஜக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் கல்வித் தரத்தை குறைக்கும் செயலில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. கல்வியை தவிர எந்த ஆயுதமும் தங்கள் கையில் இல்லை, கல்வியால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும்.
2023ம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இந்தியாவில் நவோதயா பள்ளி இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். நவோதயா பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மத்திய அரசு ஒரு வருடத்திற்கு ரூ.86,000 செலவு செய்கிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 96, குஜராத் மாநிலத்தில் 34 நவோதயா பள்ளிகள் உள்ளது. தமிழ்நாட்டின் கடன் ரூ.9.5 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மதுபானம் மூலம் வருமானம் வருகிறது.
மது விற்பனை இல்லாத குஜராத் மாநிலத்தில் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் போடுகின்றனர். தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்ப்பவர் பிரதமர் மோடி.
இவ்வாறு அவர் கூறினார்.
- இளைஞர்கள் சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
- இளைஞர்கள் பயன்படுத்திய போதை ஊசிகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்கரை பகுதியில் இளைஞர்கள் சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து அதிரடியாக சோதனை மேற்கொண்ட போலீசார் இளைஞர்கள் 8 பேரை கைது செய்தனர்.
மேலும், இளைஞர்கள் பயன்படுத்திய போதை ஊசிகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், பல்லம் பகுதியை சேர்ந்த முரளி குமார் என்பவரிடம் போதை மருத்து நிரப்பப்பட்ட குப்பிகளை வாங்கியது தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் நீர்வரத்து சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.
தென்காசி:
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கருமேக கூட்டங்கள் திரண்டு குளிர்ச்சியான சூழ்நிலை நீடிப்பதால் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் நீர்வரத்து சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்த நிலையில் விழுந்தது.
குற்றாலம் மெயின் அருவியில் இன்று மிதமாக விழும் தண்ணீரில் சில சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.
- 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி மக்கள் பிரச்சனைக்காக போராடி வருகிறது.
- மக்கள் ஆதரவு எங்களுக்கு படிப்படியாக உயர்ந்து வருகிறது.
செங்கோட்டை:
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழ் கூட்டத்தை மீட்டு தன்மானமிக்க தமிழ் பேரினமாக வாழ வைக்க இருக்கிற உங்கள் பிள்ளைகள்தான் நாங்கள். மலை தானே போனால் போகட்டும் என்று நினைத்து விடாதீர்கள். இந்த வளத்தை உங்களால் உருவாக்க முடியாது. நேர்மையான ஆட்சி அமைந்தால் ஊழல், லஞ்சத்தை ஒழித்து விடலாம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கார் தருவோம். எல்லோருக்கும் ஒரு அலைபேசி தருவோம். அதற்கு சார்ஜர் கொடுப்போம் என்று மக்களை ஏமாற்றும் கூட்டம் அல்ல. நாங்கள் மக்கள் பிரச்சனைகளை கேட்க வந்தவர்கள், அவற்றை தீர்க்க வந்தவர்கள்.
உங்களை நம்பித்தான் நிலத்தை காக்க, வளத்தை காக்க, நாம் எல்லோரும் பெரும்படையாக நின்று இந்த மண்ணின் வளத்தை காத்து இன்னொரு தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உண்டு. 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி மக்கள் பிரச்சனைக்காக போராடி வருகிறது.
ஒரு நேரத்தில் சீமான் என்றால் பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்து வந்தார்கள். அனைத்து கட்சிகளும் இன்று நாம் வளர்ந்துவிட்டதை கண்டு பொறாமைப்படுகின்றனர். குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிம்ம சொப்பனமாக இந்த சீமான் இருக்கிறேன். என் பெயரை கேட்டாலே அவருக்கு இரவில் தூக்கம் கூட வருவதில்லை. ஆகவே மக்கள் ஆதரவு எங்களுக்கு படிப்படியாக உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் இருந்து கனிமவளங்களை கேரளாவுக்கு அதிக அளவில் கொடுக்கிறீர்கள். கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.
தமிழகத்தில் இயற்கை வளங்கள் அழிந்து வருகிறது. கேரளாவில் இயற்கை வளங்கள் மாறாமல் பசுமையாக வைத்து இருக்கிறார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு இன்று பணத்தை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். வருகிற 2026 தேர்தலில் மக்கள் ஆதரவோடு நாங்கள் ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
- தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் குளிக்க அனுமதி.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் இன்று காலை வரை பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நேற்று மாலையில் மட்டும் புலி அருவியில் தண்ணீர் வரத்து சீரானதை அடுத்து அங்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரவு தொடர்ந்து பெய்த மழையினால் மீண்டும் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் புலி அருவியிலும் இன்று காலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது
அதாவது, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2-வது நாளாக இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகமாக காணப்பட்டு வருவதன் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடையானது விதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை குறைந்து தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க உடனடியாக அனுமதி வழங்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
- மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
- இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்:
மத்திய அரசு மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயல்வதாக கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், இன்று அதிகாலை சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன் கோவில் நகர செயலாளர் பிரகாஷ் , மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் முருகன், தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜவேல் ரத்தினம், மாணவர் அணி துணை அமைப்பாளர் வீரமணி, வார்டு செயலாளர் வீரா மற்றும் ரகுமான், தொ.மு.ச. காந்திமதி நாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மகா கும்பமேளாவில் உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வருகின்றனர்.
- கும்பமேளாவில் நீராடி விட்டு அயோத்திக்கு சென்றபோது ராமலட்சுமி, கஸ்தூரி என்ற பெண்கள் மாயமாகினர்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
மகா கும்பமேளாவில் உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வருகின்றனர். இதுவரை 55 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில் தென்காசி பகுதியில் இருந்து 40 பேர் கொண்ட குழு உத்தரபிரதேச மாநிலம் மகா கும்பமேளாவுக்கு செல்ல திட்டமிட்டு, காசிக்கு ரெயில் மூலம் யாத்திரை சென்றனர்.
இந்த குழுவினர் கும்பமேளாவில் நீராடி விட்டு அயோத்திக்கு சென்றபோது ராமலட்சுமி, கஸ்தூரி என்ற பெண்கள் மாயமாகினர்.
கும்பமேளா சென்ற 2 தமிழக பெண்கள் மாயமானது தொடர்பாக உத்தரபிரதேச காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பெண்கள் மாயமானது தொடர்பாக உ.பி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழிலாளர்கள் உடனே வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
- ரூ.4 லட்சம் மதிப்பிலான தீக்குச்சி மூடைகள் எரிந்து சாம்பலானது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை 4-வது தெருவில் நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் மருந்து தடவிய தீக்குச்சிகள் அங்குள்ள குடோனில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை தொழிலா ளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அங்கு வேலை செய்துகொண்டிருந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதறியடித்து அங்குள்ள பல்வேறு பாதை வழியாக அங்கிருந்து வெளியேறினர்.
இது தொடர்பாக சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ மேலும் கொழுந்து விட்டு எரிந்ததால் கட்டிடத்தின் ஒரு பகுதி சுவரை இடித்து, அதன் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்தின் போது தொழிலாளர்கள் உடனே வெளியேறியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான தீக்குச்சி மூடைகள் எரிந்து சாம்பலானது. விபத்து குறித்து சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அவர் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்று விசாரணை நடத்தினார். அப்போது தீப்பெட்டி தொழிற்சாலை உரிய அனுமதியின்றி செயல்பட்டதும், அங்கு பாதுகாப்பு உபகரணங்கள் செயல்படாமல் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சங்கரன்கோவில் தாசில்தார் தலைமையிலான குழுவினர் சீல் வைத்தனர்.
இதனிடையே தகவல் அறிந்து அங்கு ராஜா எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, நகர் மன்ற துணைத்தலைவர் கண்ணன் என்ற ராஜூ ஆகியோர் விரைந்து சென்று அங்கிருந்த தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வீட்டின் மாடியில் உள்ள புகைக் கூண்டு சிலாப் கல்லை அகற்றி அதன் வழியாக வீட்டின் உள்ளே மர்மநபர்கள் புகுந்துள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி மலைக்கோவில் ரோடு பஜனைமடம் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 75).
விவசாயியான இவர் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வயலில் நெல் அறுவடை செய்து விற்று கிடைத்த பணம் ரூ.19 லட்சத்தை தனது வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.
நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் வந்து பார்த்த போது வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.19 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் முனியாண்டி புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்தார்.
புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன், சிவகிரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்மணி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் மாடியில் உள்ள புகைக் கூண்டு சிலாப் கல்லை அகற்றி அதன் வழியாக வீட்டின் உள்ளே மர்மநபர்கள் புகுந்துள்ளனர்.
அங்கு பீரோ சாவி இல்லாததால் கம்பி போன்ற பொருளைக் கொண்டு பீரோ இடது புறம் நெம்பி திருடியது தெரியவந்துள்ளது. மேலும் பணத்தை மஞ்சள் பையில் வைத்து பீரோவில் வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில் பக்கத்து வீட்டின் பின்புறம் அந்த மஞ்சள் பை கிடந்ததாக கூறப்படுகிறது.
கொள்ளை போன வீட்டிற்கு இருபுறமும் சுவர்கள் உயரமாக இருப்பதால் பக்கத்து வீடுகளில் இருந்து வரமுடியாது எனவும், வீட்டின் பின்புறம் உள்ள வீட்டின் வழியாக மர்ம நபர் வந்திருக்கலாம் எனவும், வீட்டில் பணம் இருப்பது தெரிந்த வெளி நபர் அல்லது குடும்ப உறுப்பினர் யாராவது திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நேற்று மதியம் வீடு பூட்டிய நிலையில் இருந்த போது வீட்டின் உள்ளே விளக்குகள் எரிந்த நிலையில் உடைக்கும் சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரேத பரிசோதனை முடிவில் முத்துக்குமார் கழுத்து எலும்பு நெரிக்கப்பட்ட தடம் இருப்பது தெரிய வந்தது.
- மரியா ஆரோக்கிய செல்வியை சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் கைது செய்து சிறையில் அடைத்தார்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி மரியா ஆரோக்கிய செல்வி (வயது 30). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கடந்த 5-ந்தேதி முத்துக்குமார் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென மயக்கம் அடைந்து விட்டார் என்று கூறி 108 ஆம்புலன்சில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முத்துக்குமார் வரும் வழியிலே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஆனால் அவர் இறப்பிற்கான காரணம் என்ன என்று அறிவதற்காக முத்துக்குமார் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். பிரேத பரிசோதனை முடிவில் முத்துக்குமார் கழுத்து எலும்பு நெரிக்கப்பட்ட தடம் இருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் அவர் மஞ்சள் காமாலையால் இறக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது. இதனிடையே நொச்சிகுளம் கிராம நிர்வாக அலுவலரை நேரில் சந்தித்த மரியா ஆரோக்கிய செல்வி தனது கணவர் மஞ்சள் காமாலையால் இறக்கவில்லை என்றும், தான் கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரியவரவே, மரியா ஆரோக்கிய செல்வியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், எனது கணவர் வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து எனக்கும், எனது குழந்தைகளுக்கும் தொந்தரவு கொடுத்ததோடு, அடித்து துன்புறுத்தி வந்தார்.
இதனால் அவரது கொடுமையை தாங்க முடியாமல் கடந்த 5-ந்தேதி இரவில் எனது கணவர் தூங்கிக் கொண்டிருந்த போது கழுத்தை நெரித்தேன். அதில் அவர் மயங்கிவிட்டார். அதன் பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் மஞ்சள் காமாலையில் எனது கணவர் மயங்கி விட்டார் எனக் கூறி நம்ப வைத்து அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தேன் என வாக்குமூலம் அளித்தார்.
அதனை தொடர்ந்து மரியா ஆரோக்கிய செல்வியை சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் கைது செய்து சிறையில் அடைத்தார்.
- ஜான் கில்பர்ட்டை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
- மாமியார்-மருமகள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
கடையநல்லூர்:
தென்காசி அருகே உள்ள இலத்தூர் இனா விலக்கு பகுதியில் கடந்த 11-ந்தேதி ஒரு இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கமலி (வயது 30) என்பதும், அவரை அவரது கணவர் ஜான்கில்பர்ட் (33) குடும்ப பிரச்சனையில் கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஜான் கில்பர்ட்டை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த ஜான் கில்பர்ட்டும், டெய்லரான கமலியும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஜான் கில்பர்ட் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக குடியிருந்து வந்தார்.
இந்நிலையில் மாமியார்-மருமகள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரச்சனையை தவிர்க்கும் விதமாக ஜான் கில்பர்ட் தனது மனைவியுடன் தனியாக வீடு பார்த்து தனி குடித்தனம் சென்றார்.
அங்கிருந்து தனியார் நிறுவனத்திற்கு கமலி வேலைக்கு சென்று வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கமலியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கமலி கர்ப்பம் அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வேலைக்கு செல்வதை நிறுத்தச் சொல்லிவிட்டார். அதையும் மீறி கமலி வேலைக்கு சென்றுள்ளார்.
இதனால் ஜான் கில்பர்ட் தனிக்குடித்தனத்தை காலி செய்து விட்டு தன்னுடைய மனைவி மற்றும் தாயுடன் மீண்டும் சொந்த வீட்டிலேயே வசித்து வந்தார். அதன் பின்னர் மாமியாருடன் சேர்ந்து வசிப்பது பிடிக்காததால் தொடர்ந்து மாமியார்-மருமகள் இருவருக்கும் மத்தியில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று மாமியார்-மருமகள் இடையே சமையல் அறையில் வைத்து பிரச்சனை ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் மாமியார் வெளியே சென்று விட்டார். உடனே சமையலறைக்குள் சென்று ஜான் கில்பர்ட் தனது மனைவி கமலியுடன் வாக்குவாதம் செய்தார்.
ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் அடித்து மனைவியை கொலை செய்துள்ளார். அதன்பின்னர் கமலியின் உடலை தன்னுடைய சகோதரர் தங்க திருப்பதி என்பவரின் உதவியுடன் தென்காசி அருகே உள்ள இலத்தூர் பகுதிக்கு காரில் கொண்டு சென்றுள்ளார். அங்கு வைத்து அவரது உடலை தீவைத்து எரித்து விட்டு 2 பேரும் தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து ஜான் கில்பர்ட்டையும், அவரது சகோதரர் தங்க திருப்பதி யையும் கைது செய்த போலீசார், ஜான் கில்பர்ட் கூறிய தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.