search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    Armstrong - nelson wife
    X

    நெல்சன் மனைவி கொடுத்த ரூ.75 லட்சம் - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பகீர் தகவல்

    • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை.
    • நெல்சனின் மனைவி மோனிஷா கொடுத்த ரூ. 75 லட்சம், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா?

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா மலர்கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை, ஹரிதரன், இது போன்றவர்கள் மட்டுமல்லாது அதிமுக, திமுக, பாஜக, தாமாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன். இவர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார்.

    மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், மேலும் வெளிநாடு தப்பி செல்வதற்கு முன்பு நெல்சன் மனைவி மோனிஷா தொடர்ந்து அவருடன் போனில் பேசியதாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், நெல்சன் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு சென்றிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    மேலும், மொட்டை கிருஷ்ணன், நெல்சனின் மனைவி மோனிஷா ஆகியோர் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்தித்து உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து. எதற்காக 75 லட்சத்தை மொட்டை கிருஷ்ணனுக்கு அனுப்பினார் என்பது குறித்தும், மோனிஷாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்

    அதற்கு, வழக்கு தொடர்பாகவும் நண்பர் என்ற முறையிலும் பணம் அனுப்பியதாக மோனிஷா பதில் கூறியதாக சொல்லப்படுகிறது.

    இதனையடுத்து, மோனிஷா அளித்த தகவல்கள் உண்மைதானா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குறிப்பாக நெல்சனின் மனைவி மோனிஷா கொடுத்த ரூ. 75 லட்சம், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடக்கி விட்டுள்ளனர்.

    Next Story
    ×