search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அத்திக்கடவு-அவினாசி திட்டம்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    அத்திக்கடவு-அவினாசி திட்டம்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது.
    • மு.க.ஸ்டாலினின் தீவிர முயற்சிகளின் பயனாக தற்போது அத்திக்கடவு-அவிநாசி திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    சென்னை:

    ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24,468 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 1916.41 கோடி ரூபாய் செலவில் நீர்வளத்துறை சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று திறந்துவைத்தார்.

    இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்குதல், ஏற்கனவே உள்ள நீர்நிலைகள் மற்றும் அதன் உட்கட்டமைப்புகளை நல்லமுறையில் பராமரித்தல், பாசன கட்டமைப்புகளான அணைகள், அணைக்கட்டுகள், நிலத்தடி தடுப்புச்சுவர்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் போன்றவற்றை உருவாக்குதல், புனரமைத்தல் மற்றும் பராமரித்தல் போன்ற பல்வேறு முக்கிய பணிகளை நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தீவிர முயற்சிகளின் பயனாக தற்போது அத்திக்கடவு-அவிநாசி திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகளை ஏற்று 1972-ம் ஆண்டில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை செயல்படுத்திட முனைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் 1976-க்கு பின் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. மீண்டும் 1996-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி, இத்திட்டம் குறித்து மறுபடியும் ஆய்வு செய்து, திட்டத்தினை நிறைவேற்றிட ஒப்புதல் வழங்கினார். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது.

    பின்னர் 2019-ல் இத்திட்டத்தை தொடங்கி நிறைவேற்றும் பணிகள் தொடர்ந்தன என்றாலும் 2021-ல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்தபின் தான், இத்திட்டத்தை நிறைவேற்றிட உறுதிபூண்டு ரூ.1,916.417 கோடி மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

    அதன் தொடர்ச்சியாக திட்டப்பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு தற்போது அனைத்து பணிகளும் முடிவ டைந்துள்ளன. சோதனை ஓட்டப்பணிகள் வெற்றி கரமாக நிறைவடைந்துள்ள நிலையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்தில் இருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி. உபரிநீரை வினாடிக்கு 250 கனஅடி வீதம் 70 நாட்களுக்கு நீரேற்று முறையில் 1065 கிலோ மீட்டர் நீளத்திற்கு நிலத்தடியில் குழாய்ப்பதிப்பின் மூலம் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் நீர்வளத்துறையின் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1045 எண்ணிக்கையிலான ஏரிகள், குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்படும்.

    நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் மணிவாசன், நீர்வளத்துறையின் முதன்மை தலைமை பொறியாளர் மன்மதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ஈரோட்டில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பிரகாஷ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஈ.ஆர். ஈஸ்வரன், வெங்கடாசலம், சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், கலெக்டர்கள் ராஜகோபால் சுன்கரா (ஈரோடு), கிறிஸ்துராஜ் (திருப்பூர்), கிராந்திகுமார்பாடி (கோவை) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×