search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்தார்
    X

    புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்தார்

    • கிண்டி சிறுவர் பூங்கா சென்னையில் உள்ள முக்கிய சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
    • பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை பார்வையிட்டார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை வாயிலாக புதிய பூங்காக்களை உருவாக்குதல், பழைய பூங்காக்களை புனரமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கிண்டி சிறுவர் பூங்கா சென்னையில் உள்ள முக்கிய சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் 7 முதல் 8 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். மேலும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளைச் சேர்ந்த 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பூங்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

    2022-23-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், இளம் வயதிலிருந்தே வனம் மற்றும் வன விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்த, கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பிற்கிணங்க, வனம் மற்றும் வனவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதற்காக தற்போதுள்ள கிண்டி சிறுவர் பூங்கா புனரமைக்கப்பட்டு 30 கோடி ரூபாய் செலவில் சிறுவர்களுக்கு இயற்கை பூங்காவாக அமைக்கப்பட்டு உள்ளதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    இப்பூங்கா திறப்பு விழாவின்போது, வனவிலங்குகளை மீட்பதற்கும், வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ போன்ற விபத்துகளை தடுக்கும் பணிகளை மேற்கொள்வதற்காகவும் 9 நவீன வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து, இப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வேடந்தாங்கல் பறவைகள் இருப்பிடத்தை திறந்து வைத்து, பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை பார்வையிட்டார்.

    தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக இந்தப் பூங்காவில் 2800 சதுர மீட்டர் பரப்பளவில் மிகப்பெரிய நீர்வாழ் பறவைக் கூடம், வன உயிரின விழிப்புணர்வு மையம், விலங்குகள் மற்றும் பறவைகளின் விவரங்கள் அறிந்து கொள்ளும் வகையிலான எல்.இ.டி. மின் திரைகள், நூலகம், நிர்வாக கட்டிடம், அழகிய நுழைவுவாயில், நீருற்றுகள், செல்பி பாயிண்ட், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, மழை நீர் வடிகால் வசதிகள், நடைபாதைகள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    மேலும், பார்வையாளர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி கிடைக்கும் வகையில் நவீன கட்டமைப்புடன் கட்டப்பட்டுள்ள இரண்டு சிற்றுண்டி கூடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், புதிய கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட வாகனம் நிறுத்துமிடம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    அத்துடன், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு ஏற்ற வகையில் அவர்களின் தேவைகள் அறிந்து இப்பூங்காவில் சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் எல்லையோர மாவட்டங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 23.5.2024 முதல் 25.5.2024 வரை நடத்தப்பட்டது.

    தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கையையும் அதன் வாழ்வியல் முறைகளையும் அறிந்து கொள்ள உதவிடும் 2024-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். 2017 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,761 ஆக இருந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றத்தில் இருந்து யானைகளின் பாதுகாப்பிற்காக மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023-ன் படி தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961 ஆக உயர்ந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக, 2024-ம் ஆண்டிற்கான யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி தமிழகத்தில் தற்போது யானைகளின் எண்ணிக்கை 3063 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், மதிவேந்தன், மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., பிரபாகர ராஜா எம்.எல்.ஏ., துணைமேயர் மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×