என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம்
- பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பாக பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடி நிறுத்தப்படுகிறார்.
- கூட்டணியின் 3-வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் மும்பையில் நடைபெற உள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்போதே தங்களை தயார்படுத்தி வருகிறது.
பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பாக பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடி நிறுத்தப்படுகிறார். ஆனால் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்று இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.
இந்த சூழலில் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்பட 16 கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது. இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இந்த கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டது.
இந்த கூட்டணியின் 3-வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் மும்பையில் நடைபெற உள்ளது. இதில் 16 கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்க வாய்ப்புள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.
அத்துடன் பிரதமர் வேட்பாளர் குறித்தும் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9.40 மணிக்கு விமானத்தில் மும்பை புறப்பட்டுச் செல்கிறார்.
வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மும்பையில், இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கும் அவர் பிரதமர் வேட்பாளர் குறித்து வலியுறுத்தி பேசுவார் என தெரிகிறது. கூட்டம் முடிந்ததும் 1-ந் தேதி இரவு அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.






