search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • தலைமைச் செயலகத்துக்கு அருகே போர் நினைவுச்சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகர் ரேஷன் கடையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
    • ரேஷன் அட்டை வைத்திருக்கும் பொதுமக்கள் 20 பேருக்கு 6 அடி உயர கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ.1,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், 2 கோடியே 19 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    ஆனால், பொங்கல் பரிசுடன் முழு கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும், கரும்பு விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து, 6 அடி நீளம் கொண்ட முழு கரும்பும் பொங்கல் பரிசுடன் கூடுதலாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதற்காக தமிழக அரசு ரூ.2 ஆயிரத்து 429 கோடி நிதியை ஒதுக்கியது. மொத்தம் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் தடையில்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. கூட்ட நெரிசலை தவிர்க்க, தெரு வாரியாக வீடு, வீடாக சென்று டோக்கன்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 95 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன.

    இதற்கான வழிகாட்டுதல்கள், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.

    அதாவது, தோகையுடன் கூடிய 6 அடி உயர கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றுடன் இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் வெளிப்படையாக பயனாளிகள் கையில் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று காலை தொடங்கி வைத்தார்.

    கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டம் இன்று தொடங்குவதால், தலைமைச் செயலகத்துக்கு அருகே போர் நினைவுச்சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகர் ரேஷன் கடையில் இந்த திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார்.

    அந்த கடைக்கான ரேஷன் அட்டை வைத்திருக்கும் பொதுமக்கள் 20 பேருக்கு6 அடி உயர கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ.1,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்ததையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடங்கியது.

    Next Story
    ×