search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சீதாப்பழத்தில் தேச தலைவர்களின் ஓவியங்களை வரைந்து அசத்திய வாலிபர்
    X

    சீதாப்பழத்தில் தேசத்தலைவர்களின் உருவங்கள் வரையப்பட்டுள்ளதை காணலாம்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சீதாப்பழத்தில் தேச தலைவர்களின் ஓவியங்களை வரைந்து அசத்திய வாலிபர்

    • சுதந்திர தினத்தையொட்டி ஆண்டுதோறும் வித்தியாசமாக ஓவியங்கள் வரைந்து வருகிறேன்.
    • மூங்கில், பேட்டரி செல், தங்கம், மெழுகு, மாத்திரை மற்றும் மாம்பழம் ஆகியவற்றில் ஓவியங்கள் வரைந்து சாதனை படைத்து உள்ளேன்.

    குனியமுத்தூர்:

    சுதந்திர தினம் வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி தற்போது சுதந்திர தின நிகழ்ச்சிகள் களைகட்ட தொடங்கி உள்ளன.

    இதன் ஒருபகுதியாக கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவர் சீதாப்பழத்தில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட 20 தலைவர்களின் ஓவியங்களை வரைந்து அசத்தி உள்ளார்.

    கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் ராஜா.

    ஓவியரான இவர் பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார். தற்போது சுதந்திர தினம் வருவதை முன்னிட்டு சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களை ஓவியமாக வரைய விரும்பினார்.

    அதுவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என யோசித்த அவர், சீதாப்பழத்தில் 20 தலைவர்களின் ஓவியத்தை வரைந்தால் என்ன என்ற யோசனை அவருக்கு தோன்றியது.

    இதையடுத்து அவர் சீதாப்பழங்களை வாங்கி வந்தார். அதில் பச்சை, ஆரஞ்சு, வெள்ளை, நீலம், சிவப்பு ஆகிய வண்ணங்களை கொண்டு தலைவர்களின் படம் மற்றும் தேசியை கொடியை வரைந்தார்.

    ஒவ்வொரு சீதாப்பழத்திலும் ஒவ்வொரு தலைவர்களின் படங்களை வரைந்தார். அதன்படி சீத்தாப்பழத்தில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், சுப்பிரமணிய பாரதியார், விவேகானந்தர், வீரபாண்டி கட்டப்பொம்மன், வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரனார், மருது பாண்டியர், அம்பேத்கர், ஜவகர்லால் நேரு, பகத்சிங், ராஜேந்திரபிரசாத், சர்தார் வல்லபாய்படேல், பாலகங்காதர திலகர், அப்துல்கலாம், சந்திரசேகர ஆசாத், காமராஜர், ராதாகிருஷ்ணன், லாலா லஜபதிராய், அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை ஓவியமாக வரைந்துள்ளார்.

    இதுகுறித்து ஓவியர் ராஜா கூறியதாவது:-

    சுதந்திர தினத்தையொட்டி ஆண்டுதோறும் வித்தியாசமாக ஓவியங்கள் வரைந்து வருகிறேன்.

    இதற்கு முன்பாக மூங்கில், பேட்டரி செல், தங்கம், மெழுகு, மாத்திரை மற்றும் மாம்பழம் ஆகியவற்றில் ஓவியங்கள் வரைந்து சாதனை படைத்து உள்ளேன்.

    அந்த வகையில் நடப்பாண்டும் இளைஞர்கள் மத்தியில் தேசத்தலைவர்கள் மற்றும் தேசப்பற்றை நினைவுகூரும் வகையில் சீத்தாப்பழத்தில் தேசியக்கொடிகளுடன் 20 தலைவர்களின் படங்களை ஓவியமாக வரைந்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×