என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரை கடக்கும் மாண்டஸ் புயல்.. பலத்த காற்றுடன் கனமழை: பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு
- புயலின் நகர்வு வேகம் அதிகரித்ததால் முன்கூட்டியே கரையை நெருங்கியது.
- சென்னை முதல் அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன
சென்னை:
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மாண்டஸ், இன்று புயலாக வலுவிழந்து கரையை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வட தமிழகத்தில் விட்டு விட்டு கனமழை பெய்தது. இன்று இரவு 11:30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணிக்குள் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்பின்னர் புயலின் நகர்வு வேகம் சற்று அதிகரித்தது. 13 கிலோ மீட்டரில் இருந்து 14 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி பயணித்த புயல், முன்கூட்டியே கரையை நெருங்கியது.
இரவு 9.30 மணிக்கு புயலின் வெளிப்புற பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்து வருவதால் 60 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.
மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கி உள்ளதால் சென்னை முழுவதும் பலத்து சூறைக்காற்று வீசி வருகிறது. சென்னையின் காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கனமழை மற்றும் சூறாவளி காரணமாக சென்னை முதல் அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் புயலின் கண் பகுதி எனப்படும் மையப்பகுதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரைகடக்கும் நிகழ்வானது இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு நிகழும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.






