என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செப்பேடுகள் கிடைத்த இடத்திற்கு "திருமுறை ஈன்ற தெய்வத்தமிழ்மண்'' பெயர் சூட்டிய தருமபுரம் ஆதினம்
- சிலைகள், செப்பேடுகள் அனைத்தும் சீர்காழி சட்டநாதர்சுவாமி கோயிலிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
- கிடைக்கப்பெற்ற செப்பேடுகளில் பதியப்பட்டுள்ள திருமுறைகளை பேனராக அச்சடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் சுவாமி கோவிலில் கடந்த 16-ம் தேதி கும்பாபிஷேக பணிகளுக்கு யாகசாலை அமைக்க மேற்கு கோபுரம் குபேர மூலை நந்தவனத்தில் பள்ளம் தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள், தேவார பதிகம் தாங்கிய 496 தேவார செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கிடைக்கப்பெற்றது.
இந்த சிலைகள், செப்பேடுகள் அனைத்தும் சீர்காழி சட்டநாதர்சுவாமி கோயிலிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகள், செப்பேடுகள் கிடைத்த நந்தவன பகுதிக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வந்து பார்வையிட்டார்.
செப்பேடுகள் கிடைத்த பகுதிக்கு திருமுறை ஈன்ற தெய்வத்தமிழ்மண் என தருமபுரம் ஆதீனம் பெயர் சூட்டினார். தொடர்ந்து அந்த பகுதியில் பெயர் பலகை வைக்கப்பட்டு, கிடைக்கப்பெற்ற செப்பேடுகளில் பதியப்பட்டுள்ள திருமுறைகளை பேனராக அச்சடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த பெயர் பலகை மற்றும் பேனர்களுக்கு மாலை அணிவித்து தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் பூஜைகள் செய்து, தீபாரதனை காட்டினார். இதில் கோயில் காசாளர் செந்தில், தமிழ்ச்சங்க தலைவர் இ.மார்கோனி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.






