என் மலர்
மயிலாடுதுறை
- காயத்துடன் கரை திரும்பிய 4 மீனவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
- வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பேட்டையில் இருந்து கவிதாஸ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஜெகன் (வயது 36), ராமகிருஷ்ணன் (67), செந்தில் (46), சாமுவேல் (31) ஆகியோர் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது, நாகை மாவட்டம், கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 5 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் புதுப்பேட்டை மீனவர்களை வழிமறித்து கத்தி மற்றும் கட்டையால் தாக்கி மீனவர்கள் வைத்திருந்த ஜி.பி.எஸ்.கருவி, செல்போன், வாக்கி டாக்கி உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றனர்.
பின்னர், காயத்துடன் கரை திரும்பிய 4 மீனவர்களுக்கும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி, தமிழக எல்லை பகுதிக்கு வந்து புதுப்பேட்டை மீனவர்களை ஆயுதம் கொண்டு தாக்கி பொருட்களை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
- பஸ் சுமார் ½ மணி நேரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
- மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்தில் இருந்து நீடூர் வழியாக பந்தநல்லூர் செல்லும் அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் உள்ள ஒரு இருக்கையில் 2½ வயது பெண் குழந்தை மட்டும் தனியாக இருந்துள்ளது. அதை தவிர மற்ற இருக்கைகளில் பயணிகள் ஏறி இடம் பிடித்து அமர்ந்து கொண்டனர்.
அந்த பஸ்சிற்கு ஒதுக்கப்பட்ட நேரம் வந்ததும் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் குழந்தை தனியாக இருப்பதை கண்ட சக பயணிகள் குழந்தை யாருடையது? என தெரியாமல் குழம்பினர். பின்னர், உடனடியாக கண்டக்டர் மாதவனிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
இதனால் பதறிப்போன அவர் டிரைவரிடம் தெரிவித்து, பஸ்சை உடனடியாக பழைய பஸ் நிலையத்திற்கு திருப்பினர். அதனை தொடர்ந்து, பஸ் சுமார் ½ மணி நேரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பஸ்சில் இருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பயணிகள் சிலர் குழந்தை அழாமல் இருப்பதற்காக சாக்லெட் கொடுத்து கொஞ்சி மகிழ்ந்தனர்.
இதுகுறித்து, பணிமனை அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் குழந்தையை அமர வைத்திருந்த பஸ்சை காணவில்லை என பதறிப்போன பெற்றோர்கள் ஆட்டோவில் ஏறி பஸ் செல்லும் பாதையை நோக்கி சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் மறுபடியும் பஸ் நிலையத்தையே வந்தடைந்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பஸ்சில் இடம் பிடிப்பதற்காக குழந்தையுடன் ஏறிய தந்தை குழந்தையை அமர வைத்து விட்டு, தனது கர்ப்பிணி மனைவியை அழைத்து வருவதற்காக பஸ்சில் இருந்து இறங்கியதும், அதற்குள் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.
மேலும், பஸ்சின் பாதையை பின்தொடர்ந்து, சுமார் 5 கி.மீ. வரை சென்றுவிட்டு, மறுபடியும் பஸ் நிலையத்திற்கு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, நன்கு விசாரித்த போலீசார் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே கொள்ளிடம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ரங்கநாதன் மகன் புவனேஷ் (வயது23). இவரது நண்பர் சிதம்பரம் கவரப்பட்டு வீரன் கோவில் திட்டு பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் செல்வம் (20).
இவர்கள் 2 பேரும் புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் புவனேஷ் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வேகமாக வந்த லாரி மோதியது.
இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த புவனேஷ் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமிக்கு நேர்ந்த இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மயிலாடுதுறை ஆட்சியர் பேசினார்.
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு- கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 24ம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற சிறுமி 16 வயது சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டு தலை மற்றும் கண் சிதைக்கப்பட்டுள்ளது.
சிறுமி கத்தியதால் கல்லை எடுத்து தலையிலும் முகத்திலும் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் சிறுவன் தப்பியுள்ளான்.
பாதிக்கப்பட்ட சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நிலையில் 16 வயது சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான்.
இந்த நிலையில், சிறுமிக்கு நேர்ந்த இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மயிலாடுதுறை ஆட்சியர் பேசினார்.
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, "16 வயது சிறுவனின் முகத்தில் 3 வயது சிறுமி எச்சில் துப்பியது தான் வன்கொடுமைக்கு காரணம்" என மாவட்ட ஆட்சியர் பேசிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம் தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
- சிறுமி 16 வயது சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டு தலை மற்றும் கண் சிதைப்பு.
- சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நிலையில் 16 வயது சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் அடைப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு- கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 24ம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற சிறுமி 16 வயது சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டு தலை மற்றும் கண் சிதைக்கப்பட்டுள்ளது.
சிறுமி கத்தியதால் கல்லை எடுத்து தலையிலும் முகத்திலும் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் சிறுவன் தப்பியுள்ளான்.
பாதிக்கப்பட்ட சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நிலையில் 16 வயது சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில், சிறுமிக்கு நேர்ந்த இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மயிலாடுதுறை ஆட்சியர் பேசியுள்ளார்.
16 வயது சிறுவனின் முகத்தில் சிறுமி எச்சில் துப்பியது தான் வன்கொடுமைக்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியின் பேச்சால் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
- 1000-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், சான்றோர்கள் பங்கேற்கின்றனர்.
- சென்னை, காட்டாங்குளத்தூரில் மே மாதம் 3, 4, 5 ஆகிய நாட்கள் நடத்த உள்ளார்கள்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் 27-வது தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சைவ சித்தாந்தத்தை உலகெங்கும் பரவச் செய்யும் நோக்கோடு தருமையாதீனம் 26-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 1984-ம் ஆண்டு அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கினார்கள்.
இந்நிறுவனத்தின் சார்பில் இதுவரை 5 மாநாடுகள் (தருமபுரம், மலேசியா, வாரணாசி, மதுரை, சென்னை ஆகிய இடங்களில்) நடைபெற்றுள்ளன.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை தருமையாதீன சைவசித்தாந்த மாலைநேரக்கல்லூரி தொடங்கப்பெற்று சித்தாந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் தற்போது 27-வது குருமகாச ன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை நட்சத்திர குருமணிகளும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நிறுவனமும் இணைந்து 6-வது அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டினை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தமிழ்ப்பேராயத்துடன் சென்னை, காட்டாங்குளத்தூரில் வருகிற மே மாதம் 3, 4, 5 ஆகிய நாட்களில் நடத்த உள்ளார்கள்.
சங்க இலக்கியங்கள் முதல் சமகால இலக்கியம் வரை சித்தாந்தப் பதிவுகள் எனும் பொது தலைப்பின் கீழ் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்தும் அறிஞர்களும் ஆர்வலர்களும் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டில் சைவ ஆதீனங்களின் குருமகாசன்னிதானங்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், உள்நாட்டு, வெளிநாட்டு அமைச்சர்கள், சிவாச்சாரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சைவசமய அறிஞர்கள், ஆலய அறங்காவலர்கள், ஆலய நிர்வாகிகள், சமய ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட் டிற்கான சிறப்பு மலர் ஒன்றும், ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வுக் கோவையாகவும், 10-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட உள்ளது.
இம்மாநாட்டினை முன்னிட்டு முதற்கட்டமாக சிறப்பு மலர்குழு, கருத்தரங்க குழு, நூல்வெளியீட்டு குழு என 3 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் 1000-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், சான்றோர்கள் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரே குடும்பதப்தை சேர்ந்த சாராய வியாபாரிகள் தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமார் ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர்.
- சாராய வியாபாரியான முனுசாமியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே முட்டம் பகுதியில் 2 வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலைக்குள் மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார் ஆகிய 3 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், அவர்களிடம் முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா? அல்லது சாராய விற்பனையை தடுத்ததால் அரங்கேற்றப்பட்ட கொலையா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சாராய வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில், ஒரே குடும்பதப்தை சேர்ந்த சாராய வியாபாரிகள் தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமார் ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், சாராய வியாபாரியான முனுசாமியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
- விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் யாரும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மயிலாடுதுறை அருகே முட்டம் பகுதியில் 2 வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலைக்குள் மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார் ஆகிய 3 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், அவர்களிடம் முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா? அல்லது சாராய விற்பனையை தடுத்ததால் அரங்கேற்றப்பட்ட கொலையா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை இன்னும் முடிவடையவில்லை.

இந்த கொலை சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து முன்னதாகவே புகார் அளித்தும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது தெரியவந்தால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் யாரும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முட்டம் பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது.
- சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள முட்டம் வடக்கு தெருவை சேர்ந்த முனுசாமி மகன்கள் மூவேந்தன் (வயது 29), தங்கதுரை (28) மற்றும் ராதா மகன் ராஜ்குமார்(34). இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்ட விரோதமாக தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுப்பட்டனர். இதனை தட்டி கேட்பவர்களை தாக்கி கொலை மிரட்டலும் விடுத்து வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதன் காரணமாக 3 பேரின் சாராய விற்பனை கொடி கட்டி பறந்தது.
இதனிடையே கடந்த 11-ந்தேதி மதுவிலக்கு போலீசார் முட்டம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்ததோடு சாராய வியாபாரி ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் ராஜ்குமார் ஜாமினில் வெளியே வந்தார்.
அதன் பிறகும் சாராய விற்பனையை அவர்கள் நிறுத்தவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார் ஆகியோர் திருட்டுதனமாக முட்டம் தெருவில் சாராயம் விற்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 17 வயது சிறுவன் ஏன் சாராயம் விற்பனை செய்கிறீர்கள் ? என தட்டி கேட்டார். இதில் ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேரும் ஆத்திரம் அடைந்து சிறுவனை தாக்கினர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு அதே கிராமத்தை சேர்ந்த கல்யாண்குமார் மகன் ஹரிஷ் (25), உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் என்ஜீனியரிங் மாணவர் ஹரிசக்தி (20) ஆகிய 2 பேரும் உடனே வந்து சிறுவனை தாக்கியதற்காகவும், உடனே சாராய விற்பனையை நிறுத்த வேண்டும் என்றும் தட்டி கேட்டனர்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை சேர்ந்து கத்தியால் ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோரை சரமாரியாக பல இடங்களில் குத்தி விட்டு தப்பி ஓடினர். இந்த கொலை வெறி தாக்குதலில் பலத்த காயமடைந்த ஹரிஷ், ஹரிசக்தி 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் என கூறி உறவினர்கள், பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து தப்பி ஓடிய தங்கதுரை, ராஜ்குமார், மூவேந்தன் ஆகிய 3 பேரையும் உடனடியாக பெரம்பூர் போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து முட்டம் பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆஸ்பத்திரியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்த இரட்டை கொலை சம்பவத்தில் 2 பெண் சாராய வியாபாரிகளுக்கு தொடர்பு உள்ளதால் அவர்களை செய்ய வலியுறுத்தி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- மாரிமுத்து மயிலாடுதுறை உட்கோட்டத்தில் சாலை ஆய்வாளராக பொறுப்பு ஏற்றுள்ளார்.
- சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 51). இவருக்கு சுபஸ்ரீதேவி, மோனிஷா என்ற இரண்டு பெண் பிள்ளைகளும் துளசேந்திரன், கலாநிதி ஆகிய இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.
இவர் சீர்காழி நெடுஞ்சாலைத்துறையில் 1997 ஆம் ஆண்டு 9-ம் வகுப்பு படித்திருந்த நிலையில் சாலை பணியாளராக பணியில் சேர்ந்து பணி புரிந்து வந்தார். மேலும் பதவி உயர்வு பெறுவதற்காக கடந்த 2010 மற்றும் 2012 ஆம் ஆண்டு தனது மூத்த மகள் சுபஸ்ரீ தேவி அரசு பொதுத்தேர்வு எழுதும்போது, இவரும் அதே நேரத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தனித்தேர்வராக தேர்வு எழுதி விடாமுயற்சியால் தேர்ச்சியும் பெற்றார்.
சீர்காழியில் மகள்களோடு தந்தை தேர்வு எழுதியதை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.
மாரிமுத்து நெடுஞ்சாலைத் துறையில் பதவி உயர்வு பெற வேண்டி தேர்வு எழுதிய நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கோட்ட முதுநிலை பட்டியல் அடிப்படையிலும் கல்வித் தகுதி அடிப்படையிலும் தற்போது திறன்மிகு உதவியாளர் சாலை ஆய்வாளர் பதவி உயர்வு பெற்றுள்ளார். தற்போது மாரிமுத்து மயிலாடுதுறை உட்கோட்டத்தில் சாலை ஆய்வாளராக பொறுப்பு ஏற்றுள்ளார்.
9-ம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் மாரிமுத்து தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பு, தன்னம்பிக்கையால் அடுத்தடுத்து தேர்வு எழுதி வெற்றி பெற்று தனது பிள்ளைகளையும் பட்டதாரிகளாக ஆக்கி தானும் பதவி உயர்வு பெற்றுள்ளதை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- ஆண்டுதோறும் தை அசுபதி தினத்தில் நமச்சிவாய மூர்த்திகள் மகர தலைநாள் குருபூஜை விழா.
- ஆதீனத்தின் 4 வீதிகளிலும் உலா வந்து பட்டணப்பிரவேசம் நடைபெற்றது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14-ம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீநமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது.
சைவத்தையும் தமிழையும் தழைத்தோங்க செய்யும் இந்த ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வரின் குருபூஜை விழா மற்றும் ஆதீனகர்த்தரின் பட்டணப்பரவேச விழா ஆண்டுதோறும் தை அசுபதி தினத்தில் நமச்சிவாய மூர்த்திகள் மகர தலைநாள் குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு பட்டணப்பிரவேசவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சைவ சமயம் சார்ந்த புத்தகங்கள் வெளியீடு, சமூக பணி, சைவப் பணி ஆகியவற்றில் சிறப்பான பணியாற்றி வருபவர்களுக்கு, பொற்கிழி மற்றும் விருதுகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் திருநாளான நேற்று இரவு ஆதீனகுருமுதல்வர் குருபூஜை விழா மற்றும் ஆதீனகர்த்தரின் பட்டணப்பிரவேச விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு வாழைமரங்கள், கரும்புகள், அலங்கார தட்டிகள், மின்விளக்குகளால் திருவாவடுதுறை ஆதீனம் விழாக்கோலம் பூண்டது.
திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோமுக்தீஸ்வரர் சுவாமி கோவிலில் ஸ்ரீநமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
பின்னர், திருவாவடுதுறை ஆதீனம் 1,00,008 ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம் அணிந்து, பவளமணி, கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் தங்கப் பாதரட்சை அணிந்து, தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் சிவிகாரோஹணம் செய்தருளினார்.
தொடர்ந்து, பல்லக்கின் முன்னே யானை செல்ல ஆடும் குதிரைகள் ஆட்டத்துடன், வாணவேடிக்கை முழங்க 30 நாதஸ்வரம், தவில் வித்வான்களின் மங்கள வாத்தியங்கள், சிவகைலாய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் பல்லக்கினை சுமந்து ஆதீனத்தின் 4 வீதிகளிலும் உலா வந்து பட்டணப்பிரவேசம் நடைபெற்றது.
வழியெங்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருவாவடுதுறை ஆதீனத்துக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் மடத்தை வந்தடைந்தார். அங்கு அவர் அதிகாலை சிவஞான கொலுக்காட்சியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- கருடசேவை உற்சவம் விடிய, விடிய கோலாகலமாக நடந்தது.
- 11 பெருமாள்களும் ஒன்றன்பின் ஒன்றாக முக்கிய வீதிகளை அணிவகுத்து வந்தன.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருநாங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 11 பெருமாள் கோவில்கள் ஒரே தொகுப்பாக அமைந்துள்ளன. இந்த கோவில்கள் 108 திவ்ய தேச தலங்களாக விளங்குகிறது.
ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கோவில்களில் இருந்தும் பெருமாள்கள் திருநாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளி கருடசேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான கருடசேவை உற்சவம் நேற்று காலை தொடங்கி விடிய, விடிய கோலாகலமாக நடந்தது.
இதனை யொட்டி நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நடந்த கருடசேவையில் நாராயண பெருமாள், குடமாடு கூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம்மன் பெருமாள், வரதராஜன் பெருமாள், வைகுந்தநாதன் பெருமாள், மாதவன் பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், கோபாலன் பெருமாள் ஆகிய 11 பெருமாள்களும் ஒன்றன்பின் ஒன்றாக முக்கிய வீதிகளை அலங்கரித்தவாறு அணிவகுத்து வந்தன.
அப்போது கிராமமக்கள் 11 பெருமாள்களுக்கும், பட்டு அணிவித்து அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, நேற்று நண்பகல் முதல் மணிமாடக் கோவில் மண்டபத்தின் முன்பு அனைத்து பெருமாள்களும் எழுந்தருளினர்.
முன்னதாக நாராயணப் பெருமாள் எதாஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி, மணிமாடக் கோவிலுக்கு வந்த பெருமாள்களை எதிர்கொண்டு அழைக்கும் 'எதிர்சேவை நிகழ்ச்சி' வெகு விமரிசையாக நடந்தது.
அதனைத் தொடர்ந்து, மணவாள மாமுனிகள் சகிதம் திருமங்கை ஆழ்வார் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது பெருமாள்கள் குறித்த பாடல்களை பட்டாச்சாரியர்கள் மற்றும் பக்தர்களால் பாடப்பெற்று திருப்பாவை, மங்களாசாசனம் வைபவம் நடைபெற்றது.
பின்னர், நள்ளிரவு 12 மணியளவில் தங்க கருட வாகனத்தில் வெண்பட்டு குடைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் நாராயணப் பெருமாள் கோவில் வாயில் முன்பு எழுந்தருளிய 11 பெருமாள்களுக்கும், ஆழ்வாருக்கும் ஒரே நேரத்தில் பாசுரங்கள் பாடி மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த தங்க கருடசேவை நிகழ்ச்சியை காண மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அலை, அலையாக திரண்டு கோவிந்தா.. கோவிந்தா... கோஷம் முழங்க மனமுருகி வழிபட்டனர்.
பக்தர்கள் வெள்ளத்தில் அணிவகுத்த 11 பெருமாள்களும் நாராயணன் பெருமாள் வீதி, வைகுந்தநாதர் வீதி, கீழ வீதி, நாராயண பெருமாள் தெற்கு வீதி ஆகிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் விடிய, விடிய திருவீதியுலா காட்சி நடைபெற்றது. இரவு முழுவரும் நடைபெற்ற நிகழ்ச்சியால் நகரமே விழாக்கோலம் பூண்டது.
விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாமும், நாங்கூர் ஊராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.