search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை கோவை வருகை
    X

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை கோவை வருகை

    • தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.
    • பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கோவை:

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி தான் போட்டியிட்ட 40 இடங்களிலும் இமாலய வெற்றியை பெற்றது.

    இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு இந்த வெற்றிக்கு வித்திட்ட தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டா லினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகு திகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.

    கோவை கொடிசியா மைதானத்தில் நாளை மாலை இந்த முப்பெரும் விழாவானது நடக்கிறது.

    இந்த முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதய நிதி ஸ்டாலின், அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்.பிக்கள், தி.மு.க எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.


    விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதியம் கோவைக்கு வருகை தருகிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை கோவைக்கு வருகிறார். அவர் முப்பெரும் விழா நடக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

    அதனை தொடர்ந்து தனியார் ஓட்டலில் நடக்கும் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். இன்று இரவு கோவையில் தங்கும் அவர் நாளை மாலை கொடிசியாவில் நடக்கும் முப்பெரும் விழாவிலும் கலந்து கொள்கிறார்.

    முப்பெரும் விழாவில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினரும் பங்கேற்க உள்ளனர். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்துள்ளன.


    நாளை கோவையில் நடக்க உள்ள முப்பெரும் விழாவில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, ம.தி.மு.க சார்பில் கட்சியின் தலைமை செயலாளர் துரைவைகோ எம்.பி., உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். இதே போல கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.

    இதேபோல் தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

    முப்பெரும் விழாவையொட்டி விழா மைதானத்தில் 150 அடி நீளத்தில் 40 அடி அகலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இன்று மைதானம் முழுவதும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்தது. அதேபோல விழாவுக்கான மேடையில் அலங்காரங்களும், மின் அலங்காரம் செய்யும் பணியும் நடக்கிறது. விழா நடைபெறும் இடம் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

    Next Story
    ×