search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    காட்டு யானைகள் நடமாட்டத்தால் உடுமலை-மூணாறு சாலையில் வனத்துறையினர் தீவிர ரோந்து
    X

    காட்டு யானைகள் நடமாட்டத்தால் உடுமலை-மூணாறு சாலையில் வனத்துறையினர் தீவிர ரோந்து

    • யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்தது.
    • வனவிலங்குகள் வனப்பகுதிக்கு திரும்பி செல்லாமல் அடிவாரப்பகுதியிலேயே முகாமிட்டு வருகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை அதிகம் நம்பி உள்ளது.

    இந்த நிலையில் நடப்பு ஆண்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால் வனவிலங்குகளுக்கான உணவு, தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்தது. அமராவதி அணை அவற்றுக்கான உணவு, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து அடைக்கலம் அளித்தது.

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. அதைத் தொடர்ந்து ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டு வனப்பகுதியும் பசுமைக்கு திரும்பியது. ஆனாலும் ஆறுகளில் நீர்வரத்து குறைந்து விட்டதால் வனவிலங்குகள் வனப்பகுதிக்கு திரும்பி செல்லாமல் அடிவாரப்பகுதியிலேயே முகாமிட்டு வருகிறது.

    தற்போது யானைகள் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து காலையில் வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக யானைகள் மிரட்சி அடைந்து வாகன ஓட்டிகளை துரத்திச் சென்ற சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.

    இதனால் உடுமலை- மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை- மூணாறு சாலை மலைஅடிவாரப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×