என் மலர்
தமிழ்நாடு
அமலாக்கத்துறை சோதனை நிறைவு: எத்தனை தடைகள் வந்தாலும் எனது பணிகள் தொடரும்.. ஆதவ் அர்ஜுனா
- வி.சி.க துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்
- ஆதவ் அர்ஜுனா வீட்டில் 2-வது நாளாக நடைபெற்று வந்த சோதனை இன்று முடிவுற்றது
போயஸ்கார்டனில் வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஆதவ் அர்ஜுனா வீட்டில் 2-வது நாளாக நடைபெற்று வந்த சோதனை இன்று முடிவுற்றது.
இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
எனது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகியிருந்தது. நேற்று (09.03.2024) காலை தொடங்கி இன்று காலை வரை ஒருநாள் சோதனை நடத்தப்பட்டது.
பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மையோடு இருக்கவேண்டியதன் அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதனடிப்படையில் சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவுற்றது. இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் வலம் வரும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் யாரும் இடம் தரவேண்டாம்.
என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழிநின்று உறுதியோடு எனது பயணம் தொடரும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.