search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடற்கரை - தாம்பரம் இடையே நாளை முதல் மின்சார ரெயில் சேவை ரத்து: தெற்கு ரெயில்வே
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கடற்கரை - தாம்பரம் இடையே நாளை முதல் மின்சார ரெயில் சேவை ரத்து: தெற்கு ரெயில்வே

    • தாம்பரம் ரெயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • தற்போது 15 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பயணிகளின் பாதுகாப்பு கருதி ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு ரெயில் நிலையங்களில் பராமாிப்பு பணி நடைபெற்று வருகிறது. அந்தவகையில், கடந்த 23-ம் தேதி முதல் தாம்பரம் ரெயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

    அந்தவகையில், நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை பகல் மற்றும் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தெற்கு ரெயில்வே நேற்று (1-ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரெயில் நேரத்தில் மாற்றம் இருப்பதாகவும், கூடுதலாக சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை ஏற்கனவே அறிவித்தது போலவே காலை 9.20 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், இரவு 10.30 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரையிலும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது. தற்போது கூடுதலாக சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 7.17, 8.19, 9, 9.22, 9.40, 9.50 மாலை 6.26, இரவு 7.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    * இதேபோல ஏற்கனவே அறிவித்திருந்த சிறப்பு ரெயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 15 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.45, 10, 10.15, 10.30, 10.45, 11, 11.15, 11.30, 11.45, மதியம் 12, 12.15, 12.30, 12.45, இரவு 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செல்லும் சிறப்பு மின்சார ரெயில் பல்லாவரம் வரை இயக்கப்படுகிறது.

    * பல்லாவரத்தில் இருந்து காலை 10.17, 10.32, 10.47, 11.02, 11.17, 11.32, 11.47 மதியம் 12.02, 12.17, 12.32, 12.47, 1.02, 1.17, 1.42 இரவு 11.30, 11.55 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரெயில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது.

    * செங்கல்பட்டு-கூடுவாஞ்சோி, கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்களின் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.

    * நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை செங்கல்பட்டிலிருந்து காலை 7.45, 8.05, 8.50 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் விரைவு மின்சார ரெயிலும், அரக்கோணத்தில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் விரைவு மின்சார ரெயிலும், அதற்கு மாற்றாக தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான ரெயில்களை போல அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் வகையில் இயக்கப்படும்.

    * நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 8.26, 8.39 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மகளிர் சிறப்பு மின்சார ரெயில், அதற்கு மாற்றாக அனைவரும் பயணிக்கும் மின்சார ரெயிலாக இயக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல, கூடுவாஞ்சேரி-பல்லாவரம் இடையே நாளை(சனிக்கிழமை) முதல் வரும் 14-ம் தேதி வரை காலை 9.20 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், இரவு 10.30 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரையிலும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×