search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் உள்பட 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம்
    X

    புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்த செடிபுட்டா சேலை, ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவற்றை அரசு சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சஞ்சய் காந்தி காண்பித்தார்.

    கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் உள்பட 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம்

    • ஜடேரி என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் 300 ஆண்டுகளாக நாமக்கட்டிகளை தயாரித்து வருகின்றனர் ‌.
    • கன்னியாகுமரி மாவட்டம் வாழை சாகுபடியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று தமிழ்நாடு அரசு சென்னை ஐகோர்ட்டு வக்கீலும், அறிவு சார் சொத்துரிமை அட்டார்னியுமான சஞ்சய் காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    புவிசார் குறியீடு ( பதிவு மற்றும் பாதுகாப்பு ) சட்டம் 1999-ம் ஆண்டு இயற்றப்பட்டு 2003-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

    இந்தியாவில் 450-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஏற்கனவே 55 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருந்தது.

    இன்று செடிபுட்டா சேலை, ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனையும் சேர்த்து தமிழ்நாட்டில் மட்டும் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற 2 ஆண்டுகளிலே 17 பொருட்களுக்கு அரசு வழக்கறிஞரான நான் புவிசார் குறியீடு அங்கீகாரத்தைப் பெற்று கொடுத்துள்ளேன். இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் போலீசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்த முதல் இடத்தில் உள்ளது.

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வீரவாநல்லூர் சவுராஷ்ட்ரா நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் சார்பில் செடிபுட்டா சேலைக்கு புவிசார் குறியீடு அதிகாரம் கேட்டு விண்ணப்பித்திருந்தேன். 2 ஆண்டுகள் பரிசோதனைக்கு பிறகு இன்று செடிபுட்டா சேலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த சேலையின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அணியும்போது குளிர்காலத்தில் வெப்பமாகவும், கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் 300 ஆண்டுகளாக நாமக்கட்டிகளை தயாரித்து வருகின்றனர் . இது முக்கியமாக திருநாமத்தை பயன்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக நாமக்கட்டிக்கு சப்ளை செய்து வரும் ஒரே கிராமம் ஜடேரி. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஜடேரி நாமக்கட்டிக்கு இன்று புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

    கன்னியாகுமரி மாவட்டம் வாழை சாகுபடியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல்வேறு வகையான வாழைப்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. அதில் மட்டி வாழைப்பழம் புகழ் பெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டத்தில் அதிகளவில் மட்டி வாழைப்பழம் பயிரிடப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்கள் வாய்ந்த இந்த கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்திற்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

    இதன் மூலம் தமிழ்நாட்டில் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×