என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடல் அரிப்பை தடுக்க கோரிய வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும்- மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
- கடல் அலை, கடல் உள்வாங்குவது, நீரோட்ட மாற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்படுகிறது.
- தமிழ்நாட்டில் 50 கடற்கரை கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், மீனவர் தந்தை செல்வ ராஜ்குமார் மீனவர் நல சங்கம் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'நாட்டின் 1,200 கிலோ மீட்டர் நீள கடற்கரையில் பல்வேறு காரணங்களால் கடல் அரிப்பு ஏற்பட்டு, மீனவ சமுதாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடல் அலை, கடல் உள்வாங்குவது, நீரோட்ட மாற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் 50 கடற்கரை கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பை தடுப்பதற்கான திட்டத்தை அமல்படுத்தும்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், தமிழ்நாட்டில் பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு, மத்திய - மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளது.






