search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை குழு நெல்லை வருகை
    X

    தேசிய மனித உரிமை ஆணைய குழுவினரிடம், தேயிலை தோட்ட தொழிலாளிகளுக்கான கோரிக்கைகள் குறித்த மனுவை வழங்குவதற்காக வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

    மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை குழு நெல்லை வருகை

    • மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேயிலை நிர்வாகம் சார்பில் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    • தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர்.

    நெல்லை:

    மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை நிர்வகித்து வந்த பாம்பே பர்மா நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடைய உள்ளதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேயிலை நிர்வாகம் சார்பில் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக விசாரித்த ஐகோர்ட்டு, தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வரை அவர்களை மாஞ்சோலையில் இருந்து கீழே இறக்க கூடாது என்று உத்தரவிட்டது.

    இதுகுறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கடந்த மாதம் 20-ந்தேதி தேசிய மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி விஜய பாரதி சயானிடம் புகார் அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட மனித உரிமை ஆணையம் உடனடியாக தலைமை விசாரணை இயக்குனர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இந்த குழு மாஞ்சோலை பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை குழு அதிகாரிகளான ரவி சிங், யோகேந்திர குமார் திரிபாதி ஆகியோர் அடங்கிய குழு இன்று நெல்லை வந்துள்ளது. மொத்தம் 4 நாட்கள் நெல்லையில் முகாமிட்டு இந்த குழு விசாரிக்க உள்ளது. தொடக்க நாளான இன்று இந்த குழுவானது மாஞ்சோலைக்கு நேரில் சென்று மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மக்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து நாளையும் அந்த குழு மாஞ்சோலையில் விசாரணை நடத்துகிறது.

    அவர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர். பின்னர் பர்மா தேயிலை நிர்வாகத்திடம் ஆய்வுகளை மேற்கொண்டு, மாஞ்சோலையில் அமைந்துள்ள தொழிற்சாலை, தேயிலை தோட்டம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்கிறார்கள்.

    முன்னதாக இன்று காலை தொழிலாளர் துறையின் தோட்டங்கள் பிரிவின் உதவி ஆணையர் விக்டோரியா மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா ஆகியோருடனும் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அந்த குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    தொடர்ந்து மாஞ்சோலை தொடர்பான முழு விவரங்கள், அது தொடர்பான நீதிமன்ற வழக்குகள், அரசு எடுத்துள்ள மறுவாழ்வு நடவடிக்கைகள், அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம் விரிவாக கேட்டறிந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அம்பாசமுத்திரம் புலிகள் சரணாலய துணை இயக்குனர் இளையராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் சுமார் 1½ மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர்.

    அவர்களிடம் மாஞ்சோலை தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் அடங்கிய 1,125 பக்க அறிக்கையை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.

    Next Story
    ×