என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

3 பெட்டிகளை கொண்ட டிரைவர் இல்லாத 138 ரெயில்களை மெட்ரோ ரெயில் நிறுவனம் வாங்குகிறது
- டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் ரெயில்கள் ஆகும்.
- பயணிகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு ஒரு வருடத்திற்கு விரிவான அளவில் சோதனை ஓட்டங்கள் நடைபெறும்.
சென்னை:
சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் டிரைவர் இல்லாத ரெயில்களை இயக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் முதல் சேவை 2026-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. ஆரம்பத்தில் இந்த ரெயில்களில் கண்காணிப்பு ஊழியர்களை வைத்திருக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-
2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் 3 பெட்டிகள் கொண்ட 138 ரெயில்கள் வாங்கப்படுகிறது. இவை டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் ரெயில்கள் ஆகும். மாதவரம் - சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களுக்கு இந்த ரெயில்கள் வாங்கப்படும்.
இந்த ரெயில்கள், பயணிகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு ஒரு வருடத்திற்கு விரிவான அளவில் சோதனை ஓட்டங்கள் நடைபெறும். ஆனாலும் ஆரம்பத்தில் ஏதேனும் கோளாறு அல்லது பிரச்சினை ஏற்படாமல் கண்காணிக்க ஊழியர்களை வைத்திருப்பது முக்கியம் என நாங்கள் கருதுகிறோம். முதல் 3 ஆண்டுகளில் இந்த ஊழியர்கள் மூலம் ரெயில் ஓட்டத்தை கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம். ரெயில் பெட்டிகளுக்கான வடிவமைப்புகள் இறுதி செய்யப்பட்டு இன்னும் ஒரு மாதத்தில் தயாராகிவிடும். பூந்தமல்லி - போரூர் இடையே முதலில் இயக்கப்பட உள்ள 26 ரெயில்கள் அடுத்த ஆண்டு மத்தியில் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






