search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நடிகை நமீதா மனம் புண்படும்படி நடந்திருந்தால் வருத்தம் தெரிவிக்கிறோம்- அமைச்சர் சேகர்பாபு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நடிகை நமீதா மனம் புண்படும்படி நடந்திருந்தால் வருத்தம் தெரிவிக்கிறோம்- அமைச்சர் சேகர்பாபு

    • சகோதரி நமீதா மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற சம்பவம் குறித்தும் என்னையும் அதில் இணைத்தும் பதிவிட்டிருந்தார்.
    • திராவிட மாடல் அரசு அன்னைத் தமிழில் குடமுழுக்கை அழுத்தம் தந்து செயல்படுத்தும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, புரசைவாக்கம், கங்காதரேசுவர் கோவிலில் ரூ.3.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், 39 மாத கால நிறைவில் கோவில் திருப்பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து அவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து பக்தர்களுடைய தேவைகளை நிறைவேற்றி வருகின்றோம். அந்த வகையில் புரசைவாக்கம், கங்காதரேசுவர் கோவிலில் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் மரத்தேர் உட்பட ரூ.3.86 கோடி மதிப்பீட்டில் 29 பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அன்பிற்கினிய சகோதரி நமீதா நேற்றைய தினம் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற சம்பவம் குறித்தும் என்னையும் அதில் இணைத்தும் பதிவிட்டிருந்தார். ஏற்கனவே பழனி கோவிலில் இதுபோன்ற பிரச்சனை தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் அவர் இஸ்லாமியராக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தால் அந்த சம்பவம் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.

    இதுகுறித்து விசாரணை செய்வதற்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சகோதரி நமீதா மனது புண்படும்படியாகவோ அல்லது விரும்ப தகாத அளவிற்கு சட்டத்திற்கு புறம்பாக ஏதாவது நடந்திருந்தாலோ அதுகுறித்து விசாரித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அவர் வருத்தப்பட வேண்டாம். அப்படி அவர் பெரிய அளவிற்கு வருத்தப்படுவதாக இருந்தால் எங்களுடைய வருத்தத்தையும் பதிவு செய்து கொள்கிறோம்.

    முதலமைச்சர் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரை இரண்டு கண்களாக கரங்களாக பார்ப்பவர். சிறுபான்மையினர் அழைக்கின்ற போதெல்லாம் அவர்களின் மாநாடாக இருந்தாலும், விழாக்களாக இருந்தாலும் கலந்து கொள்கின்றார்.

    அதேபோல் தான் முத்தமிழ் முருகன் மாநாட்டினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனை ஆன்மிக பெருமக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்.

    அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை செயல்படுத்தியதோடு, 14 போற்றி புத்தகங்களையும் தமிழில் வெளியிட்டு தமிழில் குடமுழுக்கு நடத்தும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் பழனி கோவில் குடமுழுக்கு அன்னைத் தமிழில் நடத்தப்பட்டது. இது தொடரும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என செயல்பட்டு வரும் திராவிட மாடல் அரசு அன்னைத் தமிழில் குடமுழுக்கையும் அழுத்தம் தந்து செயல்படுத்தும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இணை ஆணையர் ஜ.முல்லை, அறங்காவலர் குழுத் தலைவர் வெற்றிக்குமார் மற்றும் அறங்காவலர்கள், செயல் அலுவலர் ராமராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×