search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முன்னாள் அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
    X

    முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

    • முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
    • எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைதிற்கு விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த நிலமோசடி வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து தலைமறைவான எம்.ஆர்.விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி.போலீசார் 15 நாட்களாக தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில், கேரளாவில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தமிழக சிபிசிஐடி போலீசார் கேரளாவிற்கே சென்று கைது செய்துள்ளனர்.

    இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த அவரது எக்ஸ் பக்க பதிவில், "கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர், பல்வேறு நிலைகளில் கழகத்திற்கு பங்காற்றி வரும் சிறந்த களப்பணியாளர் என்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இந்த கைதிற்கு விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    முன்னாள் விடியா திமுக அமைச்சர், இந்நாள் புழல் சிறைவாசி செந்தில் பாலாஜிக்காக பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சிவில் வழக்கு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதீத முறையில் சோதனைகளையும் கைது நடவடிக்கையும் மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.

    அரசியல் காழ்ப்புணர்வோடு விடியா திமுக அரசு ஏவும் பொய் வழக்குகள் யாவையும் சகோதரர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டப்பூர்வமாக சந்தித்து வெல்வார்" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×