என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
- சென்னையிலிருந்து கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று பிற்பகலில் சென்னை வந்தடைந்தார்.
ஐதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணி அளவில் வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை நேரில் வரவேற்றனர். மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிலையில், ஹெலிகாப்டரில் நேப்பியர் பாலம் அருகில் உள்ள அடையாறு ஐ.என்.எஸ். வளாகத்துக்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்றார்.
அங்கு சென்னையிலிருந்து கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலினுள் சென்று பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் பார்வையிட்டனர்.
அப்போது மத்திய மந்திரிகள் அஷ்வினி வைஷ்ணவ், எல்.முருகன், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.






