search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
    X

    சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    • சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் அமைந்துள்ள சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் 1,200 பேர் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அமைப்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    போராட்டத்தைக் கைவிட வேண்டும் என பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, தொழிலாளர்களின் முக்கிய 14 கோரிக்கைகளை நிறைவேற்ற சாம்சங் சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பவேண்டும் என தமிழக அரசு சார்பிலும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    ஆனால் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் எனக்கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், இன்று தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    சாம்சங் தொழிலாளர்கள் 09.09.2024 அன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டத்தை விரைவில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்கள். இதன்படி பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன்-திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆகியோரின் தலைமையில் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் இருதரப்பினரிடமும் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்தைகளை நடத்தினார்கள்.

    இப்பேச்சுவார்த்தையின் பயனாக சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களின் நலனைக் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக 15.10.2024 அன்று தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிர்வாகத்தரப்பு மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்தப் பேச்சு வார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

    தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்.

    வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும்போது நிர்வாகம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக மட்டும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

    வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.

    தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின்மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகப் பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்யவேண்டும்.

    மேற்கண்ட அறிவுரைகளை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டு, வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு, தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர். இதனால் சாம்சங் தொழிற்சாலையில் நடந்து வந்த வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது. தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×