search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடல் கடந்த காதல்- சீன பெண்ணை மணந்த கடலூர் வாலிபர்
    X

    மணமகள் யீஜியோவுக்கு-பாலசந்தருக்கும் திருமணம் நடைபெற்ற காட்சி.

    கடல் கடந்த காதல்- சீன பெண்ணை மணந்த கடலூர் வாலிபர்

    • மணமகன் தமிழ்முறைப்படி பட்டு வேஷ்டி, சட்டை அணிந்திருந்தார்.
    • மணமகள் பட்டு புடவை, தங்க அணிகலன் அணிந்து இருந்தார்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீன நாட்டை சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இது நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இன்று காலை கடலூர் முதுநகரில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன், இந்திய கலாச்சாரத்துடன் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமகன் பாலச்சந்தர் மணமகள் சீன நாட்டைச் சேர்ந்த யீஜியோவிற்கு தாலி கட்டினார்.

    மணமகன் தமிழ்முறைப்படி பட்டு வேஷ்டி, சட்டை அணிந்திருந்தார். மணமகள் பட்டு புடவை, தங்க அணிகலன் அணிந்து இருந்தார். யாக குண்டம் அமைத்து மந்திரம் முழங்க மங்கள இசையுடன் திருமாங்கல்யம் கட்டி திருமணம் நடைபெற்றது. இதனை மணமகளின் உறவினர்கள், மணமகனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆனந்தமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது குறித்து மணமகன் பாலச்சந்தர் கூறியதாவது:-

    சீனா மற்றும் பாங்காங்கில் தொழில் முனைவராக இருந்து வருகின்றேன். அப்போது எனக்கும் சீனா நாட்டை சேர்ந்த யீஜியோவிற்கும் சமூக வலைத்தளங்கள் (ஆப்) மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இந்த தொடர்பு நாளடைவில் நல்ல நட்பாக மாறி பின்னர் காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து 2பேரும் மனதளவில் காதல் ஏற்பட்டு இந்திய கலாச்சாரம் மற்றும் தமிழ் முறைப்படி பெற்றோர்கள் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணியதால் இன்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

    திருமணத்திற்கு முன்பு இருந்த காதலுடன் எங்களது வாழ்க்கை பயணத்தை ஆனந்தமாக கடப்போம் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இவர்களது திருமணத்தை தொடர்ந்து பாலச்சந்தர் சகோதரர் பாலமுருகனுக்கும் திருமணம் நடைபெற்றது. சினிமா படத்தில் காண்பது போல் ஒரே மேடையில் ஒரே நாளில் அண்ணன் மற்றும் தம்பிக்கு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். கடல் கடந்து காதல் மலர்ந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் சீன நாட்டைச் சேர்ந்த பெண்ணை கடலூரை சேர்ந்த பாலச்சந்தர் இந்திய கலாச்சார படியும் தமிழ் முறைப்படியும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×