என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஸ்ரீரங்கம் அருகே அங்கீகாரமின்றி அடுக்குமாடி குடியிருப்பு- அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
- நகரத்தில் திட்டமிடப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதே சட்டத்தின் நோக்கம்.
- சட்ட விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவது தடையில்லாமல் நடக்கிறது.
மதுரை:
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா, உய்யகொண்டான் திருமலை கிராமத்தில் உள்ள 51 சென்ட் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. இந்த குடியிருப்பு கட்டுவதற்கு முறையான அனுமதி பெறவில்லை. இந்த முறைகேடு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
எனவே அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க வேண்டும். இந்த முறைகேட்டை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஒரு கட்டிடத்தை அங்கீகாரமின்றி கட்டலாம். பின்னர் அதில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை அதிகாரிகள் ஊக்குவிக்கக்கூடாது. அனுமதியின்றி கட்டிடம் கட்டினால், அதை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சட்டமாகும்.
கட்டிடம் முறையாக கட்டப்பட்டு உள்ளது என்பதை ஆய்வு செய்து, நிறைவுச்சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், நீர், பாதாள சாக்கடை இணைப்புகளை வழங்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
நகரத்தில் திட்டமிடப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம். ஆனாலும் சட்ட விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவது தடையில்லாமல் நடக்கிறது. விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளன.
இந்த வழிகாட்டுதல்களை இந்த வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் பின்பற்றவில்லை. எனவே அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கையை 2 வாரத்தில் தமிழக அரசு எடுக்க வேண்டும்.
இது தொடர்பான அறிக்கையை வருகிற 10-ந்தேதிக்குள் இந்த கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.






