search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புழல் விநாயகபுரத்தில் மனைவியின் காதலனை வெட்டிக்கொன்ற கணவர்
    X

    புழல் விநாயகபுரத்தில் மனைவியின் காதலனை வெட்டிக்கொன்ற கணவர்

    • திருமணமான பிறகு கைக்குழந்தையுடன் ராகிணி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வாழ்ந்து வந்ததை அவரது வீட்டார் கவுரவ பிரச்சினையாக கருதியுள்ளனர்.
    • கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் மேற்பார்வையில் புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    புழல் விநாயகபுரத்தை சேர்ந்தவர் சுதா சந்தர். 22 வயதான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராகிணி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.

    ஆனால் ராகிணியின் வீட்டினர் சுதாசந்தருக்கு அவரை திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளனர். இதையடுத்து அம்பத்தூர் ஒரகடம் பகுதியைச் சேர்ந்த வசந்த் என்ற வாலிபருக்கும் ராகிணிக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது.

    இதன் பின்னர் ராகிணிக்கு குழந்தையும் பிறந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு ராகிணியின் காதல் விவகாரம் வசந்துக்கு தெரியவந்தது. இதனால் அவர் மனைவி ராகிணியிடம் குழந்தையின் பிறப்பில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து ராகிணி, கணவர் வசந்தை பிரிந்து காதலன் சுதாசந்தருடன் சென்று விட்டார். போகும் போது கைக் குழந்தையையும் தூக்கிச் சென்று விட்டார்.

    இது தொடர்பாக ராகிணியிடம் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவர் கணவர் வசந்துடன் வாழ பிடிக்கவில்லை என்றும், காதலன் சுதாசந்தருடனேயே சென்று விடுகிறேன் என்றும் கூறியுள்ளார். இதன் பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இருப்பினும் சுதாசந்தர், மனைவியை அபகரித்துச் சென்று விட்டதாக வசந்த் கருதினார்.

    இந்த நிலையில் நேற்று இரவு புழல் விநாயகபுரம் கல்பாளையம் அருகே சுதா சந்தரும், ராகிணியும் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த கும்பல் இவர்களை வழி மறித்து மோட்டார் சைக்கிளை கீழே இடித்து தள்ளியது. இதில் கீழே விழுந்த சுதாசந்தரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சுதாசந்தர் துடிதுடித்து பலியானார்.

    கண் இமைக்கும் நேரத்தில் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு சுதாசந்தரை தீர்த்துக் கட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது காதலன் சுதாசந்தரின் உடலை பார்த்து ராகிணி கதறி அழுது கொண்டிருந்தார்.

    அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ராகிணி, கண்ணீர் மல்க, காதலன் சுதா சந்தரை தனது குடும்பத்தினரும், கணவரும் சேர்ந்தே தீர்த்துக் கட்டியதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

    திருமணமான பிறகு கைக்குழந்தையுடன் ராகிணி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வாழ்ந்து வந்ததை அவரது வீட்டார் கவுரவ பிரச்சினையாக கருதியுள்ளனர். அதே நேரத்தில் கணவர் வசந்துக்கும் இது மானப் பிரச்சினையாக மாறி உள்ளது. இதனால் வசந்த் மாமியார் வீட்டினருடன் சேர்ந்து சுதாசந்தரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினர். இதன்படி சுதாசந்தரும் ராகிணியும் வெளியில் செல்லும் இடங்களை இவர்கள் கூட்டாக கண்காணித்து உள்ளனர்.

    நேற்று இரவும் இருவரையும் பின் தொடர்ந்து சென்றனர். அப்போதுதான் புழல் விநாயகபுரம் பகுதியில் வைத்து சுதாசுந்தரை வெட்டிக்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    கணவர் வசந்த், தனது தாய், அண்ணன் மற்றும் உறவினர்கள் என 5 பேர் சேர்ந்து சுதாசந்தரை தீர்த்துக் கட்டியதாக ராகிணி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் கொலை குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் மேற்பார்வையில் புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×