search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல்: கூடுதல் தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டம்
    X

    கோப்புப்படம் 

    பாராளுமன்ற தேர்தல்: கூடுதல் தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டம்

    • டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை வந்தனர்.
    • 9 தொகுதிகளை தி.மு.க தர மறுத்தால் மேலும் 12 தொகுதிகளின் பட்டியலை வழங்கவும் காங்கிரஸ் தயாராக உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று பிற்பகலில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்கள் நேராக சத்திய மூர்த்தி பவனுக்கு சென்றனர். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தி.மு.க. தலைமையிடம் வழங்கி அதில் 14 தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளை கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 9 தொகுதிகளை தி.மு.க தர மறுத்தால் மேலும் 12 தொகுதிகளின் பட்டியலை வழங்கவும் காங்கிரஸ் தயாராக உள்ளது.

    நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சை, மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், அரக்கோணம், தென்சென்னை ஆகிய தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    கடந்த தேர்தலில் வென்ற 9 தொகுதிகளுடன் கூடுதலாக விருப்ப 5 தொகுதிகளை சேர்த்து மொத்தமாக 14 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×