என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊழலை ஒழிக்க வாய் கிழிய பேசும் அண்ணாமலை உருப்படியான நடவடிக்கை எடுக்க இனி சிந்திக்க வேண்டும்- தினகரன்
- உலகம் வியந்த திட்டங்களைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
- அன்னை தெரசா உட்பட பன்னாட்டுத் தலைவர்களும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பாராட்டி மகிழ்ந்தனர்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசியல் வரலாற்று அறிவு ஏதுமின்றி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அண்ணாமலை வெளிப்படுத்திய கருத்து, அவரது அறியாமையையும், அனுபவமற்ற தனத்தையும் வெளிக்காட்டுகிறது.
மக்களுக்கு நல்லது செய்வதையே தன் அடிப்படை குணமாகக் கொண்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அதனால்தான் அவரை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகள் பலவற்றை தி.மு.க. தொடுத்தது.
எத்தனையோ குற்றச்சாட்டுகளையும் பொய் வழக்குகளையும் அவர் மீது எதிர்க்கட்சிகள் வாரி இரைத்த போதும், தமிழகத்தை ஆளுகிற பொறுப்பு தமிழக மக்களால் ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டது.
இந்தக் காலக்கட்டத்திலும் இந்திய அளவில் தமிழகம் பல துறைகளில் அடைந்திருக்கக் கூடிய பெருமைமிகு வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் ஜெயலலிதா ஆவார் என்பதை அண்ணாமலை புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.
ஏழைகளைத் தேடி அரசு, ஏழைகளுக்கான அரசு என்பதை நிலைநாட்டியதோடு, தமிழகத்திற்கான வளர்ச்சிப் பாதையை உருவாக்கியவர் அம்மா. அதனால்தான், அவரது ஆட்சி முறையைப் பல்வேறு மாநில அரசுகள் இன்றும் பின்பற்றுகின்றன.
உலகம் வியந்த திட்டங்களைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
அதனால்தான் அன்னை தெரசா உட்பட பன்னாட்டுத் தலைவர்களும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பாராட்டி மகிழ்ந்தனர்.
ஏன், இன்றைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் போயஸ் தோட்டத்தில் வந்து அம்மாவை சந்தித்து தனது மிகுந்த மரியாதையை வெளிப்படுத்தினார்.
உலக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்தவர் அம்மா. இவை எதையும் உணராமல், அரசியல் பக்குவமின்றி அண்ணாமலை பேசிவருவது கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த இரண்டு ஆண்டுகாலமாக தி.மு.க அரசின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களை வெளியிடும் அண்ணாமலை, அதற்கு மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க என்ன செய்தார் என்பதைச் சொல்ல முடியுமா? வெறுமனே சோதனைகள் மட்டும் தீர்வாகாது. ஊழலை ஒழிக்க வாய் கிழிய பேசும் அண்ணாமலை உருப்படியான நடவடிக்கை எடுக்க இனி சிந்திக்க வேண்டும்.
முதிர்ச்சியான அரசியல் புரிதல் இல்லாமல் வாய்க்கு வந்ததைப் பேசும் அண்ணாமலை தேசிய கட்சியின் மாநில தலைவர் பொறுப்பிற்கு தகுதியானவரா என்பதை அவரே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






