என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதுமலை வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் காட்டு யானை- வனத்துறையினர் விசாரணை
- வனத்துறையினர், வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
- கால்நடை டாக்டர்கள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி ஊருக்குள் நுழைந்து வருகின்றன.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சீகூர் வனசரகத்திற்குட்பட்ட ஆனைகட்டி பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆனைகட்டி பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்ததும் வனத்துறையினர், வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர்.
பின்னர் கால்நடை டாக்டர்கள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யானை எப்படி இறந்தது என்பது தெரியவில்லை. யானை உடல் நிலை சரியில்லாமல் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






