search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    விஜயதசமி கோலாகல கொண்டாட்டம்- கோவில்களில் குழந்தைகளுக்கான வித்யாரம்பம்
    X

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் அரிசியில் ‘அ’ எழுதும் குழந்தை.

    விஜயதசமி கோலாகல கொண்டாட்டம்- கோவில்களில் குழந்தைகளுக்கான வித்யாரம்பம்

    • விஜயதசமி நாளில் என்ன செய்தாலும் அது மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
    • பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதிலும் பெற்றோர் ஆர்வம் காட்டினர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நேற்று ஆயுதபூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், ஆட்டோ நிலையங்கள் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்திலும் ஆயுத பூஜை விழா விமர்சையாக நடந்தது. இதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) விஜயதசமி சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்வி, விளையாட்டு, தொழில் என எதை தொடங்குவதாக இருந்தாலும், அதற்கு நல்ல நாள் பார்த்து செய்வது வழக்கம். ஆனால் இந்த நாளில் செய்தால், அது மிகுந்த வளர்ச்சி அடையும் என கருதப்படும் நாள் தான் விஜயதசமி.

    நேற்று ஆயுதபூஜை கொண்டாடிய அனைவரும் பூஜையில் வைத்த தொழில் கருவிகள், புத்தகங்கள் போன்றவற்றை விஜயதசமி நாளான இன்று மீண்டும் பூஜை செய்து எடுத்து பயன்படுத்தினர். விஜயதசமி நாளில் என்ன செய்தாலும் அது மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம்.

    இதனை கருத்தில் கொண்டே பலரும் தங்கள் குழந்தைகளுக்கு இன்று தாம்பாளத்தில் வைக்கப்பட்ட அரிசி மற்றும் நெல்லில் எழுத்துக்களை எழுத கற்றுக்கொடுப்பார்கள். வித்யாரம்பம் என கருதப்படும் இந்த நிகழ்ச்சி இன்று கோவில்களிலும், வீடுகளிலும் நடைபெற்றது. குமரி மாவட்ட கோவில்களில் இன்று காலை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அனைத்து கோவில்களிலும் செய்யப்பட்டு இருந்தன.

    பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏராளமான பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். அங்கு தாம்பூலத்தில் வைக்கப்பட்டிருந்த அரிசியில் அ, ஆ எழுத வைத்தனர். தங்க ஊசியால் குழந்தையின் நாக்கில் அ எழுதப்பட்டது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதனால் அனைத்து கோவில்களிலும் இன்று காலையிலேயே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பார்வதிபுரம் வனமாலீஸ்வரர் கோவிலில் உள்ள சரசுவதி சன்னிதானத்தில் தங்க ஊசியாலும், பச்சரிசியிலும் அகர முதல எழுத்துக்களை எழுத செய்து குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைத்தனர்.

    இங்கு அதிக அளவில் குழந்தைகளுடன் பெற்றோர் கலந்து கொண்டனர். வழக்கமாக கேரளாவில் இருந்தும் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை இங்கு அழைத்து வருவார்கள். கேரளாவில் நாளை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறுவதால் கேரளாவை சேர்ந்தவர்கள் வருகை குறைவாக இருந்தது. இது தவிர இன்று பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதிலும் பெற்றோர் ஆர்வம் காட்டினர்.

    இதனால் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடந்தது. பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் பள்ளியில் சேர்த்தனர். பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் கோவிலிலும் இன்று காலை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.

    தேவிக்கு நடந்த சிறப்பு பூஜைக்கு பிறகு குழந்தைகளுக்கு எழுத்தறிவு சொல்லிக்கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி தொடங்கியது. குழந்தைகளின் நாவில் தங்க குச்சியாலும், தாம்பாள தட்டில் வைக்கப்பட்டிருந்த தானியத்தில் கைவிரல்களாலும் எழுத்துக்களின் வடிவங்களை எழுதி, எழுத்தறிவை சொல்லி கொடுத்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×