என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    • அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது.
    • மழையின் காரணமாக இன்று காலை நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இந்த மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசலில் அமர்ந்து உற்சாகமாக படகு சவாரி சென்று அருவியின் அழகை பார்த்து ரசித்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேலும் தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந்தேதி முதல் தொடங்கியதை அடுத்து ஒகேனக்கல் முதல் மேட்டூர் இடையிலான காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்கிறது. இந்த மழை நீரும் மேட்டூர் அணைக்கு வருகிறது.

    நேற்று மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. மழையின் காரணமாக இன்று காலை நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் என மொத்தம் 14,750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் காவிரி தண்ணீரை பயன்படுத்தும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×