என் மலர்
தமிழ்நாடு
இந்திய பெருங்கடல் பகுதிக்கு சீன உளவு கப்பல் மீண்டும் வருகை
- விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 250 நாட்டிக்கல் மைல் தொலைவில் நின்று உளவு பார்த்தது.
- தென்னிந்திய பகுதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
சென்னை:
சீன உளவு கப்பலான 'சியாங் யாங் ஹாங் 01' இந்திய பெருங்கடல் பகுதிக்கு மீண்டும் வந்துள்ளது. நேற்று அந்த கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்திருப்பது செயற்கைகோள் அனுப்பியுள்ள படங்கள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில், உள்நாட்டிலேயே நவீன தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணையை முதல் முறையாக ஏவி இந்தியா சோதனை நடத்தியது அப்போது சீன உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்தது.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 250 நாட்டிக்கல் மைல் தொலைவில் நின்று உளவு பார்த்தது. இந்திய கடற்படை தளங்களின் செயல்பாடுகளையும் அந்த சீன உளவு கப்பல் கண்காணித்தது. பின்னர் அந்த கப்பல் அங்கிருந்து சென்று விட்டது.
இந்த நிலையில் சீன உளவு கப்பலான 'சியாங் யாங் ஹாங் 01' மீண்டும் இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்துள்ளது. சீன நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களை கடலுக்கு அடியில் நிலை நிறுத்துவதற்காக சீன உளவு கப்பல் நீருக்கு அடியில் ஆய்வுகளை நடத்துவதாக சந்தேகிக்கப்பட்டது.
இதன் மூலம் தென்னிந்திய பகுதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பலின் செயல்பாடுகளை இந்தியா கண்காணித்து வருவதாக இந்திய கடற்படை தலைவர் தினேஷ் கே.திரிபாதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பல் நுழைந்துள்ளது. இதை செயற்கைகோள் அனுப்பிய படம் மூலம் கண்டறிந்துள்ளோம். அந்த சீன உளவு கப்பலின் செயல்பாடுகளை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். அந்த பகுதியில் சீன உளவு கப்பல் என்ன செய்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்து விடுவோம்' என்றார்.