என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெரியாரின் கைத்தடியை பரிசாக பெற்றது பெரும் பேறு- மு.க.ஸ்டாலின்
- பெரியார் திடலுக்கு வந்தது எனது தாய் வீட்டிற்கு வந்ததை போன்றது.
- 90 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார் ஆசிரியர் வீரமணி.
சென்னை:
பெரியார் பகுத்தறிவு நூலகம் ஆய்வு மைய பொன்விழா வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது.
விழாவிற்கு வந்த அனைவரையும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று நூலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவருக்கு கி.வீரமணி, பெரியாரின் கைத்தடி மாதிரியை நினைவுபரிசாக வழங்கினார்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
என்ன பேசுவது என்று புரியாமல் நான் விழித்துக் கொண்டிருக்கிறேன். காரணம் ஆசிரியர் கி.வீரமணி எனக்கு அளித்திருக்கக் கூடிய அந்த பரிசை வாங்குகிறபோது என்னையே நான் மறந்திருக்கிறேன்.
வாழ்க்கையில் எத்தனையோ பரிசுகளை நான் பெற்றிருக்கலாம். ஆனால் இந்தப் பரிசுக்கு எதுவும் ஈடாகாது என்பதை நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். போதும்... எனக்கு இது போதும்.
திராவிட மாடல் என்றால் என்ன? என்று கேலி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த கைத்தடி ஒன்றே போதும். தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன். தாய் வீட்டுக்கு வருகிற போதெல்லாம், நான் உணர்ச்சி எழுச்சியை தொடர்ந்து பெறுவது உண்டு. அதை பெற்று உங்கள் முன்னால் நிற்கிறேன்.
ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட தமிழினம் ஒற்றுமை பெறவும், சுயமரியாதை உணர்வு பெற்று மேலெழுந்து நிற்கவும், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு பல்வேறு தியாகங்களை புரிந்து நம்முடைய இனத்துக்காக அயராது உழைத்திருக்கக் கூடிய ஈரோடு சிங்கம், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மறைந்த நாளில் அவரது கருத்துக்களை அவரது எண்ணங்களை அவரது போராட்டங்களை அவரது தியாகங்களை அவரது வாழ்க்கை வரலாற்றை நம்முடைய இளைய தலைமுறைக்கு எடுத்து சொல்கிற வகையில், டிஜிட்டல் நூலகமாக ஆய்வு மையமாக இன்றைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் தனது பயணத்தை முடித்துக் கொண்டார். நாம் தொடர்வோம் என்று கலைஞர் சொன்னார். தந்தை பெரியாரின் தொண்டர்களாகிய நாம் அந்த பயணத்தை தொடங்கி இந்த முன்னெடுப்பை செய்திருக்கிறோம்.
அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பேசிய முற்போக்கு கருத்துக்களுக்காக மானுட சமுதாயத்தோட விடுதலைக்கான கருத்துக்களுக்காக பழமைவாதிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை அவர் சந்தித்தார்.
ஊருக்குள் வர தடை, பேசத் தடை, கோவிலுக்குள் நுழைய தடை, எழுத தடை, பத்திரிகை நடத்த தடை, போராட்டம் நடத்த தடை, அத்தனை தடைகளையும் உடைத்து அவர் நம்மை வீதிகளில் மட்டும் நுழைய விடவில்லை. இந்த மண்ணுலகில் வாழக்கூடிய அத்தனை பேர்களின் மனதிலேயும் அவர் நுழைந்திருக்கிறார். அதுதான் தந்தை பெரியார்.
பெரியார் மறைந்து 50 ஆண்டுகளுக்கு பிறகும், இன்றைக்கு அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். புகழ்ந்து கொண்டிருக்கிறோம். வரலாற்றை எடுத்துச் சொல்லி கொண்டிருக்கிறோம். அவரை இன்றைக்கு நினைவுப்படுத்தி அந்த உணர்வுகளை இன்றைக்கு நாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதுதான் தந்தை பெரியாரின் தனித்தன்மை.
தந்தை பெரியாரின் கருத்துக்களை இன்றைக்கு வரைக்கும் எல்லா மக்களிடத்திலும் கொண்டு சேர்த்து என்றென்றும் வாழ்கிறார் என்ற நிலையை உருவாக்கி இருக்கக்கூடியவர் நம்முடைய ஆசிரியர் கி.வீரமணி.
பெரியார் தொடங்கிய இயக்கத்தை பெரியார் கொள்கைகளை இந்த திராவிட பேரியக்கத்தை காத்து வருபவர்தான் நம்முடைய ஆசிரியர். இந்த 90 வயதிலும், ஆசிரியர் கி.வீரமணி சுற்றி சுற்றி வருகிற இந்த பயணத்தை எல்லாம் பார்க்கிறபோது, நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் ஆச்சரியப்படுகிற அளவுக்கு சொன்னாலும் தந்தை பெரியாரிடம் அவர் கற்றிருக்கக்கூடிய பாடத்தையும் இன்றைக்கு வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்.
இன்னும் பல ஆண்டு காலம் நீங்கள் வாழ்ந்து எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு நீங்கள் ஊக்கத்தை தந்திட வேண்டும்.
தி.மு.க. தலைவராக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பெரியாரின் தொண்டராக நான் கேட்டுக் கொள்கிறேன். பெரியாரின் தொண்டராக வாழ்த்துகிறேன்.
இன்றைக்கு தந்தை பெரியாரை உலக மயமாக்கி, உலகத்தினுடைய பொது சொத்தாக கொண்டு சேர்த்திருக்கிறோம். இந்த நூலகத்தை சிறப்புற உருவாக்கி தந்திருக்கக்கூடிய கி.வீரமணிக்கும், அன்பு ராஜிக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
1974-ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது இதே திடலுக்கு வந்து பகுத்தறிவு நூலகம், ஆய்வு மையத்தை அன்றைக்கு திறந்து வைத்தார்.
இப்போது அவரது மகனாக இருக்கக்கூடிய ஸ்டாலின் முதலமைச்சராக வந்து இந்த ஆய்வு மையத்தை தொடங்கி வைத்துள்ளேன்.
அண்மையிலே வைக்கம் விழாவை சிறப்பாக நடத்தினோம். என்னை கி.வீரமணி மனதார பாராட்டினார். இன்னும் நீங்கள் என்னை பாராட்ட வேண்டும். வாழ்த்த வேண்டும் அதற்காக நான் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ், ஆ.ராசா எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் அன்புராஜ் கலந்து கொண்டனர்.






