என் மலர்
தமிழ்நாடு
சென்னையில் ஒரு ஊட்டி: செம்மொழி பூங்கா மலர் கண்காட்சி 2-ந்தேதி தொடக்கம்
- செம்மொழி பூங்காவில் சுமார் 800 வகையான விதவிதமான செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது.
- வருகிற 2-ந்தேதி மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பார்வையிடுகிறார்.
சென்னை:
சென்னை அண்ணா மேம்பாலம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சூழ்ந்த நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவை 2010-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மறைந்த கருணாநிதி திறந்து வைத்தார்.
ஊட்டி தாவரவியல் பூங்கா போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் சுமார் 800 வகையான விதவிதமான செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது. அரிய வகை மரங்களும் உள்ளன. ஊட்டியை போன்றே இங்கும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
ஊட்டியில் நடக்கும் மலர் கண்காட்சிக்கு போக முடியாதவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் இந்த பூங்கா. பூத்துக்குலுங்கும் மலர்களுடன் செம்மொழி பூங்கா இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்கு தயாராகி வருகிறது. கடந்த ஆண்டில் 10 நாட்கள் நடந்த மலர் கண்காட்சியை லட்சக்கணக்கானவர்கள் கண்டு ரசித்தனர்.
கடந்த ஆண்டில் மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பை தொடர்ந்து இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் வித, விதமான மலர்கள் அலங்கரிக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை செய்து வருகிறது.
பெண்கள், குழந்தைகளை கவரும் வகையில் பறவைகள், செல்ல பிராணிகள் வடிவங்களில் அலங்கார வளைவுகள், செடிகளின் தோற்றங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த மலர் கண்காட்சிக்காக கோவை, ஊட்டி, கிருஷ்ணகிரி, ஓசூர், கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரையில் இருந்து அரிய வகை மலர்கள் கொண்டு வரப்பட்டு கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளது. பெட்டூனியா, ரோஜாக்கள், துலிப், ஜின்னியா, லில்லி, சாமந்திப்பூக்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.
வேளாண்மைத் துறையின் தோட்டக்கலைத் துறையிலிருந்து சுமார் 30 லட்சம் மலர்கள் கொண்டு வரப்படுகிறது. ஓசூரில் இருந்து பிரத்யேக ரோஜா செடிகள் கொண்டு வரப்பட உள்ளது.
வருகிற 2-ந்தேதி மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பார்வையிடுகிறார். தொடர்ந்து ஜனவரி 18-ந்தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மலர் கண்காட்சியை பார்வையிடலாம்.
மலர் கண்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு கட்டணமாக கடந்த ஆண்டை போலவே ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணமும், வீடியோ, போட்டோ கேமரா கொண்டு செல்பவர்களுக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
தற்போது மலர் கண்காட்சிக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பூங்காவுக்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.